செவ்வாய், 22 அக்டோபர், 2019

தீபாவளிப் பண்டிகை

இவ்வருஷத்திய தீபாவளிப் பண்டிகை சமீபத்தில் வரப் போகின்றது. பார்ப்பனரல்லாத மக்களே! என்ன செய்யப் போகின்றீர்கள்? அப்பண்டிகைக்கும், எங்களுக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்று சொல்லிவிடப் போகின்றீர்களா? அல்லது அப்பண்டிகையைக் கொண்டாடப் போகின்றீர்களா? என்பதுதான் நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்பதன் தத்துவமாகும்.

நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மைத் தத்துவ மின்றி, சுயமரியாதை உணர்ச்சி இன்றி, சுய மரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல், மற்றும் சுய நலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப் பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறிவிழந்து ஓலமிடுகின்றீர் களேயல்லாமல், மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடை யவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவ னற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம் என்கின்ற தான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களேயல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செலவழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயிருக் கிறீர்கள். சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராயிருக்கின்றீர்கள்.

ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிதுகூட பயன்படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின்றீர்கள்? இந் நிலையிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர் களாவது? பார்ப்பனரல்லாதார்களில் சில பண்டி தர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத்திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக்கணக்கான மக்கள் ஞானமற்று, மானமற்று கால்வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

புராணக் கதைகளைப் பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளு-கின்றீர்கள்.

"எல்லாருக்கும் தெரிந்தது தானே! அதை யேன் அடிக்கடிக் கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின் றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர்களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை, கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்-பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி, அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியை யும், தலைமயிரையும் பற்றியும் பேசுவதால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக் கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப் பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின் றீர்கள். துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற் கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப் படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்றது-மான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம், பிச்சை என்று வீடுவீடாய், கூட்டங்கூட்டமாய்ச் சென்று, பல்லைக் காட்டிக் கெஞ்சி, பணம் வாங்கி அதைப் பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர் விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து, அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து, அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக் குவதும் ஆறு: இந்தச் செலவுகளுக்காக கடன்படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவா கின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருப்பது என்பதும், பட்டாசு வெடிமருந்து ஆகியவைகளால் அபாயம் நேரிட்டு பல குழந் தைகள் சாவதுமான விஷயங்களொருபுறமிருந் தாலும் மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்த சைன்ஸ் பொருத்தமோ சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்-படுகிறது என்கின்றதான விஷயங்களுக்கு சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்ட தாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்த விதத்திலும் உண்மைக்கோ,பகுத்தறிவுக்கோ, அனுபவத்திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது.

பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய்விட்டது.

இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லாவற்றையும் பொய்யென்று  சொல்லி,  அக்கசுமாலங்களைக் கசக்கிய வண்ணமாய் இருக்கிறார்கள்.

அப்படியிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரக் கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத்திரம் மக்கள் இந்த நாட்டில், இந்தக் காலத்தில், இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வ தென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ் ணன். அவனது இரண்டாவது பெண்ஜாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளையிருந்தாலும், இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்த வர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்த மான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம். எப்படியானாலும், இந்த வருஷம் தீபாவளிப் பண்டிகை என்பதை உண்மையான தமிழ் மக்கள் திராவிடர்கள் என்பவர்கள் கண்டிப்பாய் அனுசரிக்கவோ, கொண்டாடவோ கூடாது என்றே ஆசைப்படுகிறேன். அன்றியும், இத் தீபாவளிக் கதை எவ்வளவு பரிகாசத்திற்கு இட மாயிருக்கிறது என்பதையுணரும் பொருட்டு அதனையும் கீழே தருகிறேன்.

தீபாவளியின்

கதைச் சுருக்கம்

ஆதிகாலத்தில் நரகாசூரன் என்று ஒரு அசுரன் இருந்தானாம். அவன் வராக அவதாரத் திருமாலுக்கும், பூமிக்கும் பிறந்தவனாம்.  அவன் தேவர்களையெல்லாம் பலவாறு தூஷித்து இம்சித்து வந்தானாம். தேவர்கள் இதைப்பற்றி அவன் தகப்பனாகிய திருமாலிடம் முறையிட் டார்களாம்.

உடனே, திருமால் நரகாசூரனைக் கொல்லுவதாக வாக்களித்தாராம். அதற்காக வேண்டி திருமால் கிருஷ்ணனாகவும், பூமிதேவி சத்தியபாமையாகவும் அவதாரமெடுத்து உலகத் துக்கு வந்து நரகாசூரனைக் கொன்று விட் டார்களாம்.

நரகாசூரன் சாகும்போது தான் செத்த தினத்தை உலகத்தார் கொண்டாட வேண்டு மென்று கேட்டுக் கொண்டானாம். கிருஷ்ணன் அப்படியே ஆகட்டுமென்று வாக்களித்தாராம். அதற்காக வேண்டி மக்கள் எல்லோரையும் கொண்டாடும்படி கடவுள் செய்துவிட்டாராம். ஆதலால், நாம் கொண் டாடுகிறோமாம்; அல்லது கொண்டாட வேண்டு மாம். இதை நமது பகுத்தறிவுக்குப் பொருத்திப் பார்ப்போம்.  முதலாவது இந்தக் கதை உண்மையாய் இருக்க முடியுமா?

எல்லா உலகங்களையும் உண்டாக்கிய, நான்முகனைப் பெற்றவரும், உலகங்களை-யெல்லாம் காத்துவருபவரும், தேவர்கள் தலைவருமாகிய திருமாலுக்கும், பூமிதேவிக்கும் எப்படிக் குழந்தை பிறக்கும்? பூமிதேவி என்றால் உலகம் அல்லவா? அப்படித்தான் பிறந்த அவன் எப்படி அசுரன் ஆனான்? அத்தகைய மேம் பாடுடைய கடவுளுக்குப் பிறந்தவன் எப்படி தீய செயல்களைச் செய்தான்? அப்படித்தான் செய் தாலும் அவனைப் பெற்றவனாகிய திருமால் தனது மகனைத் திருத்தாமல் ஏன் கொன்றான்? அப்படியிருந்தாலும் தானே வந்துதான் கொல்ல வேண்டுமோ? மேற்படி நரகாசூரனைக் கொன்ற போது அதன் தாயாகிய பூமிதேவியும் சத்தியபாமையாகப் பிறந்து உடனிருந்ததாகக் கதை கூறுகிறது. என்னே தாயின் கருணை! இவள்தான் உலகத்தையெல்லாம் காப்பாற்று கிறாளாம்! உலகமக்கள் செய்யும் பாவங் களையெல்லாம் பொறுத்துக் கொள்ளுகின் றாளாம்! பொறுமையில் பூமிதேவிபோல் என்ற உதாரணத்திற்குக்கூட பண்டிதரும், பாமரரும் இந்த அம்மையாரை உதாரணமாகக் கூறி வருகின்றனரே! இத்தகைய பூமிதேவியார் தனது மகனைக் கொல்லும்போது தானும் உடனிருக்க வேண்டுமென்று திருமாலைக் கேட்டுக் கொண்டாராம்! என்னே தாயின் கருணை!!

தமிழர்களாகிய நம்மையே அசுரர் களென்றும், ஆரியராகிய பார்ப்பனர்கள் தாங்களே தேவர்களென்றும் கற்பித்துக் கதை கட்டியிருக்கிற தேவ -அசுரப் போராட்டத்-தோடு சம்பந்தப்பட்டிருக்கிற இந்தக் கதையைத் தமிழ் மக்களாகிய நாமே கொண்டாடுகிறோம்! நாமே சிறந்த நாளாக கருதுகிறோம்! அந்தோ என் செய்வது? நம்மை ஏமாற்றி நம்மையே பழிக்கும் பார்ப்பனர் கட்டுக் கதையை உண்மை யென நம்பி நாமே கொண்டாடி வீண்செலவு செய்வதென்றால், நமது சுயமரியாதையை என்னென்பது? நமது பகுத்தறிவை என்ன வென்று சொல்லுவது?

புராணங்களில் கண்டபடியே இந்தக் கதையை உண்மையென்று ஒப்புக் கொண்டு தமது பகுத்தறிவையிழந்து இந்தத் தீபாவளியைக் கொண்டாடும் நமது தமிழ் மக்களின் அறியாமையை என்னென்று கூறுவது?

சென்றது போக, இனிமேற்கொண்டாவது தீபாவளியை, அர்த்தமற்ற மூடப்பழக்கத்தை, நம் தலையில் நாமே மண்ணைப் போட்டுக் கொள்ளும் செயலைக் குறித்து ஒரு காசாவது, ஒரு நிமிட நேரமாவது செலவு செய்ய வேண் டாமென்று திராவிட மக்களாகிய உங்களை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.

'குடிஅரசு' - 1.11.1936

 - விடுதலை நாளேடு, 22 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக