வியாழன், 24 அக்டோபர், 2019

மூட சிகாமணிகளே சிந்திப்பீர்! தீபாவளி பண்டிகை


-தந்தை பெரியார்

நண்பர்களே! சிறிதும் யோசனை இன்றி, யோக்கியப் பொறுப்பின்றி, உண்மை தத்துவ மின்றி, சுயமரியாதை உணர்ச்சி இன்றி, சுயமரியாதை இயக்கத்தின் மீது வெறுப்புக் கொள்ளுகின்றீர்களேயல்லாமல், மற்றும் சுயநலப் பார்ப்பனர் வார்த்தைகளையும், மூடப்-பண்டிதர்களின் கூக்குரலையும், புராணப் புஸ்தக வியாபாரிகளின் விஷமப் பிரச்சாரத்தையும், கண்டு மயங்கி அறி விழந்து ஓலமிடுகின்றீர்களேயல்லாமல், மேலும் உங்கள் வீடுகளிலும், அண்டை அயல்களிலும் உள்ள கிழங்களுடையவும், அழுக்கு மூட்டைகளுடையவும், ஜீவனற்ற தன்மையான பழைய வழக்கம் பெரியோர் காலம் முதல் நடந்து வரும் பழக்கம் என்கின்றதான வியாதிக்கு இடம் கொடுத்துக் கொண்டு கட்டிப் போடப்பட்ட கைதிகளைப் போல் துடிக்கின்றீர்களேயல்லாமல் உங்கள் சொந்தப் பகுத்தறிவைச் சிறிதுகூட செல வழிக்க சம்மதிக்க முடியாத உலுத்தர்களாய் இருக்கின்றீர்கள்.

பணத்தையும், மானத்தையும் எவ்வளவு வேண்டுமானாலும் செலவழிக்கத் தயாராயி ருக்கிறீர்கள். சுதந்திரத்தையும், சமத்துவத் தையும் எவ்வளவு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்க தயாராயிருக்கின்றீர்கள். ஆனால் உங்கள் பகுத்தறிவைச் சிறிது கூட பயன் படுத்தத் தயங்குகிறீர்கள். அது விஷயத்தில் மாத்திரம் ஏன் வெகு சிக்கனம் காட்டுகின் றீர்கள்? இந்நிலை-யிலிருந்தால் என்றுதான் நாம் மனிதர்களாவது? பார்ப்ப னரல்லாதார்களில் சில பண்டிதர்கள் மாத்திரம் வயிறு வளர்த்தால் போதுமா? புராணப் புஸ்தக வியாபாரிகள் சிலர் மாத் திரம் வாழ்ந்தால் போதுமா? கோடிக் கணக்கான மக்கள் ஞானமற்று, மானமற்று கால் வயிற்றுக் கஞ்சிக்கும் வகையற்று அலைவதைப் பற்றிய கவலை வேண்டாமா? என்று கேட்கின்றேன்.

புராண கதைகளைப் பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள்; அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்ளுகின்றீர்கள். எல்லாருக்கும் தெரிந்தது தானே! அதையேன் அடிக்கடி கிளறுகின்றீர்கள்? இதைவிட உங்களுக்கு வேறு வேலை இல்லையா? என்று கேட் கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி, மூச்சுவிடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப் புரட்டை உணர்ந்தவர் களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்.

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! இந்த மூன்று மாத காலத்தில் எவ்வளவு பண்டிகை, கொண்டாடினீர்கள்? எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற் றிற்காக எவ்வளவு பணச் செலவும், நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப் பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால் நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து புராண ஆபாசத்தை அறிந்தவர் களாவீர்களா? வீணாய் கோபிப்பதில் என்ன பிரயோஜனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லு கின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி, அவர் களது கண்ணையும், மூக்கையும், தாடியை யும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய் என்றால் அதற்கு நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன் என்று பதில் சொல்லி விட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா?

அன்பர்களே! சமீபத்தில் வரப்போகும் தீபாவளிப் பண்டிகையை பார்ப்பனரல்லாத மக்களாகிய நீங்கள் 1000க்கு 999 பேர்களுக்கு மேலாகவே எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள். துணி தேவை இருக்கின்ற வர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்து துணி வாங்குவது என்பது ஒன்று; மக்கள், மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்-கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுவுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு; அர்த்தமற்றதும், பயனற்ற துமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று; பார்ப்பனர் உள்பட பலர் இனாம் பிச்சை என்று வீடுவீடாய், கூட்டங்கூட்டமாய்ச் சென்று, பல்லைக் காட்டி கெஞ்சி, பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும், செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு; இவற்றிற்காக பலர் ஊர் விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து, அன்று ஒவ்வொரு வீடுகளிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து, அவைகளில் பெரும் பாகம் கண்டவர்களுக்கு கொடுப் பதும், வீணாக்குவதும் ஆறு: இந்தச் செலவு களுக்காக கடன் படுவது ஏழு. மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காக கடன்பட வேண்டியிருப்பது என்பதும், பட்டாசு வெடிமருந்து ஆகியவை களால் அபாயம் நேரிட்டு பல குழந்தைகள் சாவதுமான விஷயங்களொரு புறமிருந் தாலும் மற்றும் இவைகளுக் கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்த சைன்ஸ் பொருத் தமோ சொல்லுவதானாலும், தீபாவளி பண்டிகை என்றால் என்ன? அது எதற்காக கொண்டாடப்படுகிறது என்கின்ற தான விஷயங்களுக்கு சிறிது கூட எந்த விதத் திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம். ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனியப் புராணக் கதை யை அஸ்திவார மாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றபடி எந்தவிதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத் திற்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது.

பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாக சைவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லோரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவையெல்லா வற்றை யும் பொய்யென்று ஒப்புக்கொண்டாய் விட்டது.

அப்படியிருக்க ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பன்னாயிரக்கணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய தீபாவளிப் பண்டிகைக்காக மாத் திரம் மக்கள் இந்த நாட்டில், இந்தக் காலத்தில், இவ்வளவு பாராட்டுதலும், செலவு செய் தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால், அது எவ்வளவு பெரிய மடத்தனம் என்பதை வாசகர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தீபாவளிப் பண்டிகையின் கதையில் வரும் பாத்திரங்கள் 3. அதாவது நரகாசூரன், கிருஷ்ணன். அவனது இரண்டாவது பெண்-ஜாதியாகிய சத்தியபாமை ஆகியவை களாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை-யிருந்தாலும், இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தவர்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை தீபாவளி என்று கொண்டாட வேண்டு-மென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம். பார்ப்பனரல்லாதார்கள், தங்களை ஒரு பெரிய சமூகக்காரர்களென்றும், கலை களிலும் ஞானங்களிலும், நாகரிகங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் என்றும், தட்டிப் பேச ஆளில்லாவிடங்களில் சண்டப்பிரசண்ட மாய்ப் பேசிவிட்டு எவனோ ஒரு மூடனோ அல்லது ஒரு அயோக்கியனோ காளை மாடு கன்று போட்டிருக்கின்றது என்றால் உடனே கொட்டத்தில் கட்டி பால் கறந்து கொண்டுவா என்று பாத்திரம் எடுத்துக் கொடுக்கும் மடையர்களாகவே இருந்து வருவதைத்தான் படித்த மக்கள் என்பவர் களுக்குள்ளும், பாமர மக்கள் என்பவர்களுக்குள்ளும் பெரும்பாலும் காண்கின்றோமே ஒழிய, காளைமாடு எப்படி கன்றுப் போடும் என்று கேட்கின்ற மக்களை காண்பது என்பது அரிதாகவே இருக்கின்றது.

மற்றும் இம்மாதிரியான எந்த விஷயங் களிலும் கிராமாந்திரங்களில் இருப்பவர் களைவிட, பட்டணங்களில் இருப்பவர்கள் மிகுதியும் மூடத் தனமாகவும், பட்டணங் களில் இருப்பவர்களை விட சென்னை முத லான பிரதான பட்டணங்களில் இருப்ப வர்கள் பெரிதும் மூடசிகாமணி களாகவும் இருந்து வருவதைப் பார்க் கின்றோம்.

- குடிஅரசு -  01.11.1936

 - விடுதலை நாளேடு 24 10 19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக