வியாழன், 27 டிசம்பர், 2018

மதங்கள் எல்லாம் செத்துப்போனவைகளே! (1)

கிருஷ்ணன், அர்ஜுனன் சம்பாஷணை


- சித்திரபுத்திரன் -


21-12-1930 - குடிஅரசிலிருந்து....

அர்ஜுனன் : ஹே! கிருஷ்ணா! புராணங்களில் தேவர்களுக்கோ, இந்திரனுக்கோ, பரமசிவனுக்கோ கஷ்டமும் ஆபத்தும் வந்த காலங்களில் எல்லாம் நீ (அதாவது விஷ்ணு) பெண் வேஷம் போட்டுக் கொண்டு போய் அவர்களின் எதிரிகளை மயக்கி, வஞ்சித்து வசப்படுத்தினதாகவே காணப்படுகின்றனவே; அதுமாத்திரமல்லாமல் அந்த பெண் வேஷத் தோடேயே நீ ஆண்களிடம் சம்போகம் செய்ததாகவும் அதனால் உனக்குப் பிள்ளைகள் கூடப் பிறந்ததாகவும் காணப்படுகின்றதே இது உண்மையா? அல்லது இதற்கு ஏதாவது தத்துவார்த்தம் உண்டா? தயவு செய்து சொல் பார்ப்போம்.

கிருஷ்ணன் : ஓ! அர்ஜுனா! நீ சொல்லுகிறபடி புராணங்களில் இருப்பது உண்மையே. ஆனால் நான் அந்தப்படி ஒருநாளும் செய்ததே இல்லை. அன்றியும் நானே பொய்யாக இருக்கும்போது பிறகு நான் பெண் வேஷம் எப்படிப் போடமுடியும். அப்படிப் போட்டாலும் எப்படி கலவி செய்ய முடியும். ஒரு சமயம் திரு அ. இராகவன் சொல்லுவது போல் ஆண், ஆண் கலவி செய்ததாகவே வைத்துக் கொண்டாலும் பிள்ளை எப்படி பெற முடியும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்று சொன்னால் கேட்ப்பவருக்கு மதி வேண்டாமா? சொல்லுகிறவன் சொன்னால் கேட்பவனுக்குப் புத்தி வேண்டாமா? பின்னை ஏன் புராணங்களில் அந்தப்படி எல்லாம் சொல்லப்பட்டு இருக்கின்றது என்று கேட்டால் அதற்குத் தத்துவார்த்தம் உண்டு.

அர்ஜுனன் : அந்த தத்துவார்த்தம் என்ன? எனக்குச் சற்று சொல்லு பார்ப்போம்.

கிருஷ்ணன் : அந்தமாதிரி எழுதின தத்துவார்த்தம் என்னவென்றால் மனிதன் பெண் இச்சையில் கட்டுப்பட்டவன் என்பது நிச்சயம். நேர்வழியில் வேலை செய்து வெற்றி பெற முடியாத காரியங்களிலும் எதிரியை ஜெயிக்க போதிய சக்தி இல்லாத காலங்களிலும் ஒருவன் வெற்றி பெற வேண்டுமானால் இந்த வழி மிக சுலபமான வழி என்பது பெரியோரின் கருத்து. அதாவது ஒரு நல்ல அழகிய பெண்ணைக் கூட்டிப்போய் காட்டியோ, அல்லது அவனுக்கு கூட்டி விட்டோ அதன் மூலம் எவ்வித வெற்றியையும் பெறலாம் என்பதே இதன் தத்துவார்த்தமாகும். இது முக்தி அல்லது வெற்றி பெறும் இரகசியங்களில் ஒன்று என்பதைக் காட்டுவதற்காக எழுதப்பட்டதாகும். இப்பவும் உலக வழக்கில் சகதியில்லாதவன், தகுதி இல்லாதவன் ஏதாவது ஒரு பதவியையோ, பொருளையோ அடைந்திருந்தால் அதற்குப் பொதுஜனங்கள் திடீரென்று கற்பிக்கும், அல்லது நம்பியே சொல்லும் வழக்கச் சொல்லைப் பார்த்தால் நன்றாய் விளங்கும். அதாவது சக்கரத்தின் மகிமையினால் சம்பாதித்துதான் வெற்றிப் பெற்றான்; பதவி பெற்றான் என்று சாதாரண பாமர மக்கள் கூடச் சொல்லுவதைப் பார்க்கிறோம். சக்கரம் என்றால் என்(விஷ்ணு) ஆயுதத்திற்குப் பெயர். பெண்கள். . . . க்கும் பெயர். எவ்வளவோ பேருக்கு இந்தத் தத்துவார்த்தம் இப்போது உண்மையிலேயே பயன்படுவதையும் பார்க்கின்றோம். ஆதலால் வெற்றி பெறுவதற்கு ஒருவழி என்பதைக்காட்டும் தத்துவப் பொரு ளுக்காகவே பெரியோர்கள் இப்படி எழுதி வைத்தார்கள். புராணங்களில் உள்ள ஒவ்வொரு வரிக்கும், எழுத்துக்கும் இது போலவே தத்து வார்த்தங்கள் உண்டு. அது தெரியாமல் நமது சுயமரியாதைக்காரர்கள் அவற்றைப் பரிகாசம் செய்கின்றார்கள். ஆனால் அந்த பழக்கமும் வழக்கமும் தத்துவார்த்தத்தைப் பின்பற்ற வேண்டிய அவசியமு மாகியவைகளெல்லாம் சுயமரியாதைக்காரருக்கு அல்ல. புராண மரியாதைக்காரருக்கு என்பதை மறந்துவிடாதே.

அர்ஜுனன் : சரி சரி. இப்போது எனக்கு விளங்கிற்று. ஆனால் இது போலவே இன்னும் ஒரு சந்தேகம். சற்று தயவு செய்து அதையும் விளக்கினால் உனக்கு புண்ணியம் உண்டு.

கிருஷ்ணன் : அதென்ன சொல்லு பார்ப்போம்

அர்ஜுனன் : அதே மாதிரி மற்றும் பல புராணங்களில் சிவன் ஒரு சன்யாசி ரூபமாக, பக்தன் ரூபமாக வந்து ஒருவனின் பெண்ஜாதியை கேட்டான் என்றும் அந்தப் படியே அவன் கொடுத்தானென்றும் சொல்லப்படுகின்றதே அதன் ரகசியம் என்ன?

கிருஷ்ணன் : இது தெரியவில்லையா?

அர்ஜுனன் : தெரியவில்லையே

கிருஷ்ணன் : சன்யாசிகளுக்குச் சாப்பாடு போட வேண்டியது கிரகதன் கடமை. பிறகு பெண் வேண்டுமானால் சப்ளை செய்ய வேண்டியதும் கிரகதன் கடமையாகத்தானே இருக்க வேண்டும். அதனால்தானே 32 தர்மங்களில் பெண் போகமும் ஒன்று என்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆகவே அந்தப்படி சன்யாசிக்குப் பெண் களைக் கொடுக்கும்போது மனதில் சங்கடம் இல்லாமல் தாராள மனதுடன் உதவுவதற்காகவே சிவன் சன்யாசி ரூபமாய், ஒரு சிவனடியார் ரூபமாய் வந்து கேட்டார் என்று அதாவது சன்யாசியாகவோ, சிவனடியாராகவோ ஒருவன் வீட்டிற்கு வந்தால், அவன் கேட்டவுடனேயே கொடுக்க வேண்டும் என்பதற்காகவே. அதாவது இந்த சன்யாசி சிவனடியார் ஒரு சமயம் சிவபிரானே இந்த வேடம் தரித்து வந்தானோ என்று எண்ணிக் கொண்டு பேசாமல் கொடுத்துவிடட்டும் என்றும், அதற்காக மனதில் எவ்வித விகல்ப புத்தியும் இருக்கக் கூடாது என்றும் கருதியே இந்தப்படி சொல்லப் பட்டிருக்கிறது. இது இப்போதும் சில புராண மரியாதைக்காரர்கள் வீடுகளில் நடைபெற்று வருகிறதை நான் அடிக்கடி பார்க்கின்றேன்.

தவிரவும், குரு, சாமியார், பாகவதாள், பரதேசி, அடியார்கள் இப்படிப் பட்டவர்கள் அநேக வீடுகளில் இருந்துக் கொண்டு நன்றாய் சாப்பிட்டுக் கொண்டு அந்த அந்த வீட்டுக்காரருக்கு இந்த புண்ணியமும் கொடுத்துக் கொண்டு வருவதைப் பார்க்கின்றேன். சிலர் தெரிந்தே விட்டுக்கொண்டிருக் கின்றார்கள். சிலர் தெரியாதது போலவே காட்டிக் கொண்டுமிருக்கிறார்கள். இதெல்லாம் அவரவர்கள் புராணங்களில் வைத்திருக்கும் பக்திக்கும் மரியாதைக்கும் தகுந்தபடி இருக்கும்.

- தொடரும்

 - விடுதலை நாளேடு, 21.12.18

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக