சனி, 29 பிப்ரவரி, 2020

தொடையையுங் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுதல்! (2)

20.12.1931 - குடிஅரசிலிருந்து....

சென்ற வாரத் தொடர்ச்சி

புரட்சி இயக்கத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பெரும் பாலும் வாலிபர்கள். வாலிபர்கள் எந்தக் காரியத்தையும் முன் பின் யோசனையில்லாமல் உடனே செய்து முடித்து விட வேண்டுமென்னும் எண்ணமுடையவர்கள். அதற்காகத் தமது உயிரையும் பொருட் படுத்தாமல் தியாகஞ்செய்ய முன்வரும் குணமுடையவர்கள். இத்தகைய குணமுடைய வர்கள் துவேஷத்தை மூட்டும் அரசியல் கிளர்ச்சியின் பலனாக அந்நியர்கள் மீது வெறி கொண்டு கொலை களும், சதிகளும் தாராளமாகச் செய்ய முன்வந்து விட்டனர் என்பதில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இச் செய்கைகளே தேசாபிமான முடைய தென்றும், சுயராஜ்யம் அளிக்கக் கூடிய தென்றும் அவர்கள் கருதக்கூடிய நிலைமையை நமது அரசியல் கிளர்ச்சி ஏற்படுத்தி விட்டதென்று கூடக் கூறலாம். இவர்களுடைய இக்கலகச் செயல்களைத் தேசாபி மானமாகவும் தியாகமாகவும் ஆரம் பத்தில் நமது நாட்டுத் தேசியப் பத்திரிகைகள் என்பன பாராட் டவும் தொடங்கின. தேசிய வாதிகள் மேடைகளில் புகழவும் தொடங் கினர். இவர்களுடைய படங்களை வைத்துக் கொண்டாடவும், இவர்களுக்காக விழாக் கள் நடத்தவும் ஆரம்பித்தனர்; ஆனால், அப்பொழுதே சில பொறுப்புள்ள தலை வர்கள் இச்செயல் களைக் கண்டித்தனர். நாணயமும், பெறுப்பும் உள்ள எவரும் இச்செயல்களை ஆதரித்து, மேலும் மேலும் வாலிபர்களுக்கு இத்தகைய விஷயங்களில் ஊக்கம் உண்டாக்க முன்வர மாட்டார் களென்பது நிச்சய மாகும்.

தேசாபிமானம் என்னும் பெயரால் வெறிகொண்டு, நிரபராதிகளையும், உத்தி யோகஸ்தர்களையும் இரக்க மின்றிக் கொலை செய்யும் இந்தப்புரட்சி ஒழிய வேண்டுமானால், பொறுப்புள்ள தேசப்பிர முகர்கள் அனைவரும் இதனைக் கண்டிக்க வேண்டும். இதனால் வரும் தீமையை வாலிபர்கள் உணரும் படிசெய்ய வேண்டும். அப்படியில்லாமல் ஒருபக்கத் தில், அந்நி யர்கள் மீது துவேஷத்தைக் கிளப்பி விடும் அஹிம்சா தர்மப் பிரசாரமும், ஒரு புறத்தில் புரட்சியைக் கண்டிப்பதான அறிக்கைகளும் செய்து கொண்டிருந்தால் எப்படி புரட்சி அடங்கும் என்று கேட்கின்றோம். இது, குழந்தையின் தொடையையும் கிள்ளி விட்டுத் தொட்டி யை யும் ஆட்டிவிடுவது போலத்தானே ஆகும்?

சில தேசியயப் பத்திரிகைகள் பொறுப் பின்றிக் கொலைக் குற்றங்களையும், கொலை செய்தவர் களையும் தேசாபிமானமாக வும், தேசாபிமானி களாகவும் போற்றி உற்சாகப் படுத்தும் முறையில் நடந்து கொண்ட காரணத்தால்தானே அச்சுச் சட்டம் ஏற் பட்டது? இவ்வாறு தேசீயப் பத்திரிகைகள் என்பன பொறுப்பற்றதனமாக நடந்து கொண்டிராவிட்டால் அச்சுச் சட்டம் பிறந்திருக்க முடியாது என்பது உண்மை அல்லவா? அடுத்தபடியாக, துவேஷத்தைப் பெருக்கி விடும் முறையில் அஹிம்சைப் பிரசாரம் பண்ணியதன் பலனால் வங்காளத் தில் புரட்சி இயக்கமும் தலைவிரித்தாடத் தொடங்கவும், அதை அடக்க அரசாங்கத் தார் வங்காள அவசரச்சட்டத்தை ஏற் படுத்தும் படியான நிலையும் ஏற்பட்டு விட்டது அல்லவா?

இப்பொழுது அய்க்கிய மாகாணத்தில் வரிகொ டாமை இயக்கம் ஆரம்பித்தவுடன் அரசாங்கத்தாரும் அவசரச்சட்டம் ஒன்றை ஏற்படுத்தி விட்டனர்.

இந்த அவசரச் சட்டங்களை அரசாங்கத் தார் வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் எனப் பெரும் கிளர்ச்சி செய்கின்றனர். புரட்சி இயக்கத் தையும், வரிகொடா இயக்கத் தையும் நிறுத்து வதற்கு ஒரு முயற்சியும் செய்யாமல், அவற்றை அடக்க ஏற்பட்ட சட்டங்களின் மேல் மாத்திரம் பழிபோட்டுக் கிளர்ச்சி செய்வதில் என்ன பலனிருக்கிறது? அவசரச் சட்டங் களுக்கு நிரபராதிகளும் ஆளாகிக் கஷ்டப் பட நேரும் என்பதை நாமும் ஒப்புக்கொள்ளு கிறோம். அவசரச் சட்டங்களால் இன்னும் அக்கிளர்ச்சிகள் கொஞ்சம் அதிகப்படும் என்பதிலும் உண் மை இல்லாமல் இல்லை. ஆனால், அவசரச் சட்டம் உண்டானதற்கான காரணங் களையும் ஒழிப்பதற்கு முயற்சி செய்து கொண்டு அவசரச் சட்டங்களையும் வாப வாங்கிக் கொள்ளுமாறு கிளர்ச்சி செய்வதே நியாயமும். ஒழுங்குமாகும்.

இவையல்லாமல் மீண்டும் நாட்டில் வரிகொடா இயக்கமும், பகிஷ்கார இயக்கமும் பலமாகஆரம்பிக்க வேண்டு மெனப் பிரசாரஞ் செய்யப்பட்டும் வருகிறது. திரு. காந்தியும், சத்தியாக்கிரகச் சண்டை ஆரம்பிப் பதாகச் சொல்லிக்கொண்டு வரு கிறார். காந்தி-இர்வின் ஒப்பந்தம் முடிந்தது முதல், மறுபடியும் சத்தியாக்கிரகப் போர் ஆரம்பிப் பதற்குத் தயாராய் இருங்கள் என்றே பொறுப்புள்ள காங்கிரஸ்காரர் களெல்லாம் சொல்லிக் கொண்டு வந்தனர், வருகின் றனர். தேசத்தின் அமைதியையும், சட்டத்தையும், நிரபராதி களையும் காப்பாற் றுவது அரசாங்கத்தின் பொறுப்பு, ஆகை யால், அரசாங்கம் சட்டத் தையும், அமைதி யையும் நிலைநிறுத்தப் பின்வாங் காது என மேன்மை தங்கிய வைசிராய் தாம் பேசும் இடங்களில் கர்ஜித்துக்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் தேசத்தில் மறுபடியும் கலகம் ஏற்படுமாயின் பாமர ஜனங்களுக்குத் தான் அதிக மான கஷ்டமும், நஷ்டமும் உண்டாகுமென்பதில் ஆட்சேபணை யுண் டா? சுயராஜ்யம் காங்கிரஸ் காந்தி அஹிம்சை தேசாபி மானம் என்னும் பெயர்களால் காலிகளும், நாணய மற்றவர்களும், பிழைப் பற்றவர்களும் மறுபடியும் ஏமாற்றப் புறப் பட்டு விடுவார்கள், இப்பெயர்களைச் சொல்லி பாமர மக்களிடம் பொருள் பறிக்கத் தொடங்கி விடுவார்கள். இவர்கள் செய்யும் ஆர்ப் பாட்டங்களினால் மறு படியும், புரட்சியும், அடிதடிகளும் துவேஷங் களும் அதிகப்படக்கூடும், ஆகவே அரசாங் கத்தார் இவற்றை அடக்க சென்ற உப்புச் சத்தியாக் கிரகத்தின் போது அவசரச் சட் டங்கள் பிறப்பித்து போல இன்னும்  பல அவசரச் சட்டங் களைப் பிறப்பிக்கவும் கூடும், இவ்வாறு காங்கிரசுகாரர்கள் செய்து கொண்டு வரும் பிரசாரங்கள் ஒரு புறமும், புரட்சிக்காரர்கள் நடத்திக்கொண்டு வரும் அக்கிரமங்கள் ஒரு புறமும், அரசாங்கத்தார் இவைகளை அடக்க வெளியிடும் அவசரச் சட்டங்களும், தடையுத்தரவுகளும் ஒரு புறமும் சேர்ந்து நாட்டு மக்களைச் சமாதான மின்றிக் கஷ்ட நிலையில் வாழும்படி செய் வதைத் தவிர வேறு ஒரு பலனையும் ஏழைமக்கள் காணப் போவதில்லை, அடையப் போவதில்லை யென்பது தான் நமது அபிப்பிராயம். இதனால், தற்போது உள்ளதைவிட இன்னும்,, நமது நாட்டின் வியாபார நிலையும், செல்வ நிலைமையும் கஷ்டநிலைமைக்கு வந்து சேருமென்பதும் நிச்சயம். மற்றபடி இந்த மாதிரியான வீண் கலகங்களால் ஓர் கடுகளவும் பிரயோஜனம் உண்டாகப் போவதில்லை.  நமது நாட்டுச் சாதி மத வேற்றுமைகளுக்கு அழிவுவராமல் இன்னும் கெட்டியாக ஆணி யடித்துக் கொண்டு சுயராஜ்யம் வேண்டும் என்று கேட்பது கையாலாகாத்தனம் என்று தான் கூறுவோம்.

சுயராஜ்யத்திற்காகச் செய்யப்படும் கிளர்ச் சியில் ஒருபாகத்தை சாதி, மதங்களை ஒழிப்பதில் செலவு செய்திருந்தால் இது போது நாம் எவ்வளவோ மேலான நிலையில் போய் இருந்திருக்கலாம்.  போதிய சுதந்தி ரமும் கூடப் பெற்றி ருக்கலாம். ஆனால் தேசத்தைக் காட்டிலும், வருணா சிரம தருமத்தையும், மதத்தையும் உயிரினுஞ்சிறந்ததாக எண்ணிக் கொண் டிருக்கின்ற தேசத் தலைவர்களால், நமது நாடு சாதி, மத வேற்றுமை ஒழியப்போவது ஏது? இவைகள் ஒழியாதவரையில் பூரண சுதந்திரம் கிடைப்பது எங்கே? ஒரு சமயம் கிடைத் தாலும் அதை வைத்து ஆளுந்திறமை தான் இருக்க முடியுமா? என்று தான் கேட்கிறோம்.

ஆகையால் இனியும் உண்மையான சமுக சகோதரத்துவ ஆசையும், உண்மையான தேச முன்னேற்ற ஆவலும் உள்ளவர்கள் அனை வரும் தேசத்தின் அமைதிக்காக உழைக்க முன் வர வேண்டும்.

புரட்சிச் செயல்களும், கலகங்களும் நடைபெற வொட்டாமல் எல்லா மக்களுக் குள்ளும் சகோதரத்துவமும், சுயமரியா தையும் தாண்டவ மாடக்கூடிய பிரசாரஞ் செய்ய வேண்டும். குற்றமற்ற மனமுள்ள வாலிபர்கள் மனத்தில் வெறியை உண்டாக்க மல் அன் பையும், சமதர்ம எண்ணத்தையும் உண்டாக்கா வேண்டும்.  இவ்விஷயங்களைப் பொறுப்புள்ள தலைவர்களும், தொண்டர் களும் மேற் கொள்ள வேண்டுகிறோம்.

- விடுதலை நாளேடு 15 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக