சனி, 8 பிப்ரவரி, 2020

புத்த மதமும், சுயமரியாதையும்

29.03.1931 - குடி அரசிலிருந்து....

சகோதரர்களே, சுயமரியாதையும், புத்த மதமும் என்ற விஷயத்தைப்பற்றி பேசும் இந்தக் கூட்டத்தில் நான் பேச வேண்டியிருக்கும் என்று இதற்கு முன் நினைக்கவேயில்லை.  இன்று நான் இரயிலுக்குப் போக சற்று நேரமிருப்பதாலும், தங்கள் சங்க செக்ரட்டரி என்னை இங்கு அழைத்ததாலும், இவ்விடம் நடக்கும் உபன்யா சத்தைக் கேட்டு போகவந்தேன். இப்போது திடீரென்று என்னையே பேசும்படி கட்டளை யிட்டு விட்டீர்கள். ஆனபோதிலும் தங்கள் கட்டளையை மறுக்காமல் சிறிது நேரம் சில வார்த்தைகள் சொல்லுகின்றேன்.  அவை தங்கள் அபிப்பிராயத்திற்கு ஒத்ததாக இல்லையே என்று யாரும் மனவருத்தமடையக்கூடாது என்று முதலில் தங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன்.  ஏனெனில், இன்று பேசும் விஷயத்திற்கு, சுயமரி யாதையும், புத்தமதமும் என்று பெயரிட்டு இருப்பதால் அதைப்பற்றி பேசுகையில் என் மனதில் உள்ளதை பேச வேண்டியிருக்கும். பச்சை உண்மையானது. எப்போது மக்களுக்கு கலப்பு உண்மையைவிட அதிகமான அதிருப்தியைக் கொடுக்கக் கூடியதாகவே இருக்கும்.  உண்மையை மறைத்துப் பேசுவது என்பது எப்போதும் பேசுகின்றவனுக்கும், பேச்சுக் கேட்பவர்களுக்கும் திருப்தியைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும். திருப்தி உண்டாகும்படியும் செய்து கொள்ளலாம்.  ஆனால் உண்மை பேசுவதன் மூலம் அப்படி செய்ய முடியாது என்பது எனக்கு தெரியும்.  ஆனாலும் நான் என் கடமையைச் செய்கின்றேன் என்கின்ற முறையில் பேசுகின்றேன்.  பிறகு அது எப்படியோ ஆகட்டும்.

சகோதரர்களே! சுயமரியாதையும், புத்த மதமும் என்பது பற்றிப் பேசுவதில் நான் முக்கியமாய் சொல்லுவது என்னவென்றால், இன்ன மதந்தான் சுயமரியாதை இயக்கம் என்பதாக நான் ஒரு காலமும் சொல்லமாட்டேன்.  அந்தப்படி என்னால் ஒப்புக் கொள்ளவும் முடியாது.  இன்று காணப்படும்படியான எந்த மதமுமே கூடாது. அவை மனிதனுக்கு அவசியமும் இல்லை என்கின்ற கொள்கையை உடைய சுயமரியாதை இயக்கமானது எப்படி தன்னை ஏதாவது ஒரு மதத்துடன் பிணைத்துக் கொள்ள சம்மதிக்கமுடியும் என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள்.  ஏனெனில், சுயமரியாதை இயக்க மானது ஒரு நாளும் யாரோ ஒருவர் சொன்னார் என்பதற்காக எதையும் ஒப்புக்கொள்ளக் கூடியதன்று.  யார் சொன்னதாக இருந்தாலும் அது தன் பகுத்தறிவுக்குப் பொருத்தமாக இருக்கின்றதா? தனது அனுபவத்திற்கு ஒத்ததாக இருக்கின்றதா? என்பதைப் பார்த்து திருப்தி அடைந்த பிறகே எதையும் ஒப்புக் கொள்ள வேண்டும் என்கின்ற கொள்கையை உடையது.  அது எந்த மனிதனையும் அந்தப்படி பரீட்சித்த பிறகே எதையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்கின்றது.

அன்றியும் அது அந்தக் கொள்கையோடு அதன் நிபந்தனைக்குட்பட்டு யார் எதைச் சொன் னாலும் அதை யோசிக்கத் தயாராக இருக்கின்றது.  அப்படிக்கில்லாமல் எந்த மத மாவது. எந்த நபராவது தான் அனுசரிக்கும் கொள்கையும் தான் சொல்லுவதன் இன்ன காலத்தில் இன்னார் மூலமாக இன்னார் சொன்னது என்பதாகவும், அதற்கு விரோதமாக யாரும் எதையும் சொல்லக் கூடாது என்பதாகவும், அதை யாரும் பரீட்சிக்க வும்  கூடாது, அதைப்பற்றி சந்தேகமும் படக் கூடாது  என்பதாகவும் யாராவது சொல்லவந்தால்  அது எந்த மதமா னாலும் அது எப்படிப்பட்ட  உண்மையானாலும் அதைச் சுயமரியாதை இயக்கம்  ஒரு நாளும்  ஒப்புக்கொள்ள முடியாது. அன்றியும்  கடவுள் சொன்னார். அவதாரக்காரர் சொன்னார், தூதர்  சொன்னார்  என்று சொல்லி ஒன்றைத்  தங்கள் பகுத்தறிவைப் பொருத்திப் பார்க்காமல் ஒப்புக்கொண்டிருக்கின்றவர்கள் எவரும் சுயமரி யாதை இயக்கத்தில் ஈடுபட்ட வர்கள் என்று கொள்ள சாத்தியப்படாது.  அன் றியும் அவர்கள் தங்களைச் சுயமரியாதை உடைய வர்களாக எண்ணி கொள்ளவுமாட்டார்கள்.

பழைய அபிப்பிராயங்கள் எல்லாம் அது எதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும், பரிசோதிக்கச் சற்றும் பயப்படக் கூடாது. அப்படிப் பரிசோதிப்பதிலும் நடு நிலையிலிருந்தே பரிசோதிக்க வேண்டும். அந்தப்படி பரிசோதிக்கப் பின் வாங்கு கின்றவன் யாராயிருந்தாலும் கோழையேயாவான்.

நமக்கு முன்னால் இருந்த மனிதர்களை விட நாம் விஷேச அனுபவமும், ஞானமும் உடைய வர்களென்று சொல்லிக் கொள்ளப் பாத்திய முடைவர்கள் என்பதை ஞாபகத்திலிறுத்தாதவன் மனிதத்தன்மை உடையவனாக மாட்டான்.  ஏனெனில் முன் காலம் என்பதைவிட முன் இருந் தவர்கள் என்பதைவிட இந்தக்காலம் என்பதும் இப்போது இருக்கிறவர்கள் என்பவர்களும் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் அதிக மான சுதந்திரமும், சவுகரியமும்  உடையவர்கள் என்பது ஒரு சிறு குழந்தையும் ஒப்புக்கொள்ள கூடியதாகும். அன்றியும் இந்தக் காலம் அனுபவத்தின் மேல் அனுபவம் என்கின்ற முறையில் புதிய புதிய தத்துவங்கள் வளர்ந்து வந்த காலமுமாகும். மேலும் இப்போதுள்ள வர்கள் பல வழிகளில் இயற்கையாகவே முற்போக்கும்; அறிவு விளக்க மும், அனுபோகப் பயிற்சியும் பெற்று வருகிற சந்ததியில் பிறந்தவர் களுமாயிருக் கிறார்கள்.

ஆகவே இயற்கையாகவும், செயற்கையாகவும் முன்னோர்களை விட நாம் எவ்விதத்திலும் அறிவிலோ, ஆராய்ச்சியிலோ, இளைத்தவர்கள் அல்ல என்பதையும் காலவேறுபாட்டிற்கும் காட்சி வேறுபாட்டிற்கும் தகுந்தபடி கருத்து வேறுபாடு அடைய வேண்டிய உரிமையும். அவசியமுடைய வர்கள் என்பதையும் நாம் நன்றாக உணர வேண்டும்.

இந்த நிலையில் இருந்து கொண்டு நாம் பார்த்தோமானால் முன்னோர் சொன்னவைகள் என்பவற்றிற்கு எவ்வளவு மரியாதை கொடுக் கலாம்  என்பது தானாகவே விளங்கிவிடும்.  நிற்க.

நிற்க, மற்றொரு விஷயம் என்னவென்றால். முன்னோர்கள் சொன்னவைகள் என்பவற்றிற்கு நம் கருத்துக்கள் ஒத்து இருக்கின்றனவா என்று பார்த்துப் பிறகுதான்  நம் கருத்துக்களை உறுதிப்படுத்த வேண்டுமென்கின்றதான மனப் பான்மையையும் அடியோடு எடுத்தெறிய வேண்டும்.  ஏன் எனில் முன்னோர் கருத்து என் பதற்காக நாம் அப்படி எதற்கும் அடிமையாய் விடக் கூடாது என்பதற்காகத்தான் அப்படிச் சொல்லுகிறேன்.  முன்னோர் கருத்துக்கு அடிமை யாக்கிக் கொண்டு வந்தோமேயானால் உண்மை யையும், அறிவு வளர்ச்சியையும் நாம் அடியோடு கொன்று விட்டவர்களாவோம்.

தொடரும்.....

 - விடுதலை நாளேடு 24 .1.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக