ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

ஆஸ்திகர்களின் சிந்தனைக்கு!


23.01.1938 அன்று ஆய்க்கவுண்டன் பாளையத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மதம், கடவுள் என்னும் தலைப்பில் தந்தை பெரியார் ஆற்றிய உரை
இந்த திருக்கூத்துகள் ஏன்?
இந்து மத ஆள்களின் கடவுள் உணர்ச்சியை சற்று கவனிப்போம்.  இந்து மதக்காரர்கள் இந்த கடவுள் உணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துகிறார்கள்? மத உணர்ச்சியை எவ்விதம் காட்டிக் கொள்ளுகிறார்கள்? என்று பாருங்கள்.  மக்களைக் காப்பாற்ற இருக்கும் கடவுளை இவர்கள் காப்பாற்ற முற்பட்டு அதற்காக ஒவ்வொரு கடவுளுக்கு இரண்டு மூன்று இலட்சம் ரூபாய்கள் செலவில் கோயில்களும், ஒரு இலட்சம் செலவில் கோபுரமும், கலசமும் வைத்து அரை லட்சத்தில் கும்பாபிஷேகங்கள் செய்து பூசைக்கும் திருவிழாக்களுக்குமாகப் பாடுபடும் மக்களின் கணக்கற்ற பணத்தை பாழாக்கி விடுகிறார்கள். மனிதரில் இலட்சக்கணக்கான பேர் வீடின்றி வாடிவதைபடுவது இவர்களுக்குத் தெரியாதா ? இந்த மனிதர்களைக் கவனியாது இவர்களுக்கு வீடு வாசல் வேண்டாமா என்பதை கவனியாது கடவுள் ஆலயங்களின் திருப்பணி பேரால் எவ்வளவோ பணத்தை விரயம் செய்கிறார்கள்.  பாலின்றி வாடும் பச்சைக் குழந்தைகள் லட்சக்கணக்கில் இருக்க நெய் என்பதைக் கண்ணில் கண்டறியாத குடும்பங்கள் எவ்வளவோ லட்சம் இருக்க, பழனி, திருவண்ணாமலை, சிறீரங்கம் முதலிய இடங்களில் ஆயிரக்கணக்கான குடம் பாலையும் கொட்டி சாக்கடை போய்ச்சேரும்படி பாழாக்குவதும் ஆயிரக்கணக்கான டின் நெய்யை  நெருப்பை எரித்தும் நெருப்பில் கொட்டியும் வீணாக்குவதும் சரியா ?  கடவுள் உணர்ச்சியை இப்படித் தான் காட்டுவதா ? பாலும் நெய்யும் மக்களுக்கு உண்ண ஏற்பட்டதா? கல்லிலும், நெருப்பிலும் கொட்ட ஏற்பட்டதா? ஏ ஆஸ்திகர்களே! உங்களைத்தான் கேட்கின்றேன்.
இந்த முட்டாள் தனத்தையும், கொடுமையையும் ஒழிக்க இதுவரை என்ன செய்தீர்கள்? பச்சைவெண்ணெயை டின் டின்னாக கொண்டுபோய் களிமண் மாதிரி வாரி வாரி நெருப்பில் எறிகிறதைப்பார்த்து ஆனந்தப்படுகிறாயே! கடவுளும் ஆனந்தப்படும் என்று எண்ணுகிறாயே! ஏ ஆஸ்திகனே! நீ உன்னை மனிதன் என்று எண்ணிக் கொண்டு தானே இருக்கிறாய்.
ஒழுக்கத்துக்காக மனிதனின் - நல்வாழ்க்கைக்கு ஆக கற்பிக்கப்பட்ட கடவுளை தாசி வீட்டுக்கு கூட்டிக் கொண்டு போகிறாயே.  மற்றொருவன் பெண்ணை தூக்கி கொண்டு வருகிற உற்சவம் நடத்துகிறாயே, குறத்தியையும், துலுக்கச்சியையும் கூட்டி வந்ததாக அதற்கு ஒரு கோவிலும் கட்டி பொம்மை வைத்து விளையாடுகிறாயே இதுவா கடவுள் ஒழுக்கம்?
அஹிம்சை, அன்பு, கருணை ஆகிய குணங்களைக் கொண்டது கடவுள் என்று சொல்லிவிட்டு, கழுவேற்றுவதும், கழுத்தை வெட்டுவதும் வயிற்றை கிழிப்பதும் இப்படிபட்ட கடவுள்கள் கைகளில் கத்தி ஈட்டி சூலாயுதம் வில்லு வேல் தண்டாயுதம் கொடுத்திருப்பது யோக்கியமா? இவற்றிற்கு வேலை கொடுப்பதும் உற்சவம் செய்வதுமான காரியத்தால் மனிதனுக்கு ஒழுக்கம் அஹிம்சை அன்பு ஏற்படுமா ? ஏ ஆஸ்திகர்களே சிந்தித்துப்பாருங்கள்.
கடவுளுக்கு என்று ஒரு காசு தான் ஏன் செலவழிக்க வேண்டும்? செங்கல்பட்டு மாகாண சுயமரியாதை மகாநாட்டில் கடவுளுக்கு ஒரு காசுகூட செலவழிக்கப்படாது என்று சகல ஹிந்துமத ஆஸ்திகர்களும் வந்திருந்து தீர்மானம் செய்தார்கள். அது சிறிதாவது கவனிக்கப் படுகிறதா? கடவுளுக்கு ஆக செலவழிக்கப்படும் பணம், காசு, செலவுகள் யார் வயிற்றை நிரப்புகிறது? பாடுபடாது வயிறு வளர்க்கும் பார்ப்பனர்களுக்கும், ரயில்காரனுக்கும் தான் பெரிதும் இப்பணம் போய்ச் சேருகிறது.  இப்படிச்சேரும் பணம் வருஷம் பலகோடி என்பது உங்களுக்குத் தெரியாதா?
புதுப்பார்ப்பன தந்திரம்
இருக்கும் ஸ்தலங்கள் போதாதென்றும் இருக்கும் புண்ணியஸ்தலங்களும் தீர்த்தங்களும் போதாதென்றும் ஒரு புதிய ஸ்தலத்தை புண்ணிய ஸ்தான கரையை பார்ப்பனரும் ரயில்வேக்காரரும் ஒப்பந்தம் செய்து கொண்டு பிரமாதமாக விளம்பரப்படுத்துகிறார்கள்.  அதாவது கோடியக்கரை என்ற இடத்து, உப்புத் தண்ணீரில் ஒரு முழுக்கு போட்டுவிட்டால் எப்படிப்பட்ட பாபமும், முன்னோர் செய்த பாபமும்.  இனி மேல் செய்யும் பாபமும் போய்விடுமெனவும் அவ்வளவு மகிமை உடையதெனவும் மித்திரன் விளம்பரப்படுத்துகிறது. இதற்கு மஹோதய புண்ணிய கால ஸ்நானம் எனப் பெயராம்.  ரயில்வேக்காரரும் பார்ப்பனரும் சேர்ந்து செய்யும் இச்சூழ்ச்சியில் எத்தனையோ ஆயிரக்கணக்கானவர்கள் சிக்கி அங்குசென்று தங்கள் பணம், மானம், சுகாதாரம் ஆகியவற்றைப் பாழாக்கிக் கொண்டு, திரும்பிவரும் போது கூடவே காலராவையும் அழைத்துக் கொண்டுதான் வீடு திரும்பப் போகிறார்கள்.  இது என்ன நியாயம் என்று கேட்கிறேன். கோடியக்கரை சென்று குளிக்க வேண்டிய அவ்வளவு பாபம் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்கிறேன்.  காலை முதல் மாலை வரை பாடுபட்டு, உழைத்து, பணத்தை முதலாளிக்கும், பார்ப்பானுக்கும் கொடுத்துவிட்டு, கையைத் தலையின்கீழ் வைத்துக்கொண்டு படுக்கிற நீங்கள் கோடியக்கரை செல்ல வேண்டிய அவ்வளவு பாபம் நீங்கள் எப்படிச் செய்தீர்கள்? தொழிலாளியின் வாழ்வே இதனால் பாழாகிறது முதலாளியுடன் போட்டியிட்டு, தன் நிலைமையை உயர்த்திக் கொள்ள வேண்டிய சக்தியை இழந்து இதனால் பணம், நேரம் புத்தி ஆகியவை இழந்து அவன் தவிக்கிறான்.  இதற்குத்தானே இந்த கடவுள் திருவிழாவும் புண்ணிய ஸ்நானங்களும் உதவுகின்றன. இந்து மத ஊழல்களை திருத்தப்பாடு செய்த புதுமதக் கொள்கைகளே இன்று கிறிஸ்துமார்க்கம், முஸ்லீம் மார்க்கம் முதலிய பல புதிய மார்க்கங்களாக தோன்றலாயின.
இந்து மத கொடுமை தாங்கமாட்டாமலேதான் பல கோடிப்பேர்கள் முஸ்லீம்களாகவும், கிறிஸ்துவர்களாகவும் ஆனார்கள்.  இன்றும் இந்துக்கள் தான் பிறமதம் புகுகிறார்கள் என்றாலும் முஸ்லீம் மார்க்கம் தவிர வேறு எந்த மார்க்கத்துக்கு மனிதன் போனாலும் அவன் பின்னாலேயே ஜாதிச் சனியன் தொடர்ந்துகொண்டே போகிறது. உதாரணமாக, ஒருவர் கிறிஸ்துவனான பிறகும், பார்ப்பன கிறிஸ்துவனாகவும், பள்ளக்கிறிஸ்துவன், பறைகிறிஸ்துவன், நாயுடு கிறிஸ்துவன், ஆசாரி கிறிஸ்துவன், நாடார் கிறிஸ்துவன் என்கின்ற பாகுபாடும் சடங்கு ஆச்சார அனுஷ்டானமும் எந்தக் கிறிஸ்துவனையும் விட்டுத் தொலைவதில்லை.  பிரார்த்தனை ஸ்தலங்களிலும் இந்து கோவில்கள் போல் பேதங்கள் பல இருந்து வருகின்றன.
ஆனால் இந்த இழிவு ஆபாசம் முஸ்லீம் மார்க்கத்திலே காண முடிவதில்லை.  ஒரு தீண்டாதான், முஸ்லீம் மதத்தை தழுவிவிட்டால், உடனே தீண்டாமை பறந்து போகிறது.  அவன், அந்த சமுதாயத்தில் மனித சுதந்திரத்தை, சமத்துவத்தைப் பெறுகிறான்,  அங்கு பற முஸ்லீம் என்று யாரேனும் சொல்லி, தங்கள் பற்களைக் காப்பாற்றிக் கொள்ள முடியாது.  ஏன்? அவர்கள் தங்கள் மதத்தினிடை சமத்துவம் நிலவ வேண்டுமென்ற உணர்ச்சியை அவ்வளவு அதிகமாகக் கொண்டுள்ளார்கள்.  அதனாலேயே தீண்டாமையை விலக்கிக் கொள்ள வேண்டுமென்கிறவர்களை முஸ்லீம் மார்க்கத்தை தஞ்சமடையும்படி இந்த 10 வருஷமாய் சொல்லிவருகிறேன்.  இந்த மாபெரும் சனியனான ஜாதிமத பேத தொல்லைகள் மனித சமூகத்தை விட்டு தொலையவேண்டுமானால் மனிதனுக்கு விஞ்ஞான வளர்ச்சியும் தேவை.  தொழில் காரணமாகத்தான் ஜாதிகளோ ஜாதிக் கொடுமைகளோ ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  தோட்டி என ஒரு ஜாதியும் அவனுக்கு இழிவும் தீண்டாமையும் எப்படி ஏற்பட்டது? மலம் எடுக்கும் தொழிலை நாற்றமுள்ள தொழிலை அவன் ஏற்றுக்கொண்டதால் தான் இப்படியே கஷ்டமானதும் இழிவானதும் வேலை செய்பவர்கள் எல்லாம் கீழ் ஜாதியாகவும், சுகமாகவும் மேன்மையாகவும் உள்ள வேலை செய்கிறவர்கள் மேல் ஜாதியாகவும் ஒரு வேலையும் செய்யாமல் ஊரார் உழையில் வயிறு வளர்த்துக் கொண்டு மக்களை ஏமாற்றி கொண்டு வஞ்சித்துத் திரிகிறவர்கள் மகாமகா மேல் ஜாதியாகவும் ஏற்பட்டதற்குக் காரணம் விஞ்ஞான ஞானமில்லாமையே.  மேனாட்டிலே, இம்மாதிரியான தொல்லை அநேகமாக தீர்ந்து விட்டது.
விஞ்ஞான வளர்ச்சியால்
விமோசனம் ஏற்படும்
விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, சமத்துவம் அந்த சமூகத்திலே உண்டாக மார்க்கம் ஏற்பட்டுவிட்டது.  நாம் என்ன கூறினாலும், இனிமேல் நமது பின் சந்ததியார்கள், பழைய தொழில் முறை ஜாதிமுறை திட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பது உறுதி, உலகம் இன்று புதிய பாடத்தைக் கற்பித்துக் கொண்டு வருகிறது.  விஞ்ஞான வளர்ச்சி மூலமாகவே விமோசனம் ஏற்படும் என்ற உறுதி எனக்கு ஏற்பட்டிருக்கிறது, பழமையான சகல முறைகளிலும் மாறி சகலதுறைகளிலும் புதுமை தோன்றியிருக்கிறது.  வெகு சீக்கிரத்தில் புதிய உலகம் காணப்போகிறோம்.
மக்கள் பிறப்பதுகூட இனி அருமையாகத்தான் போய்விடும்.  அதுபோலவே சாவும் இனி குறைந்துவிடும்.  மனிதன் வெகு வெகுசுலபமாக நூறு ஆண்டு வாழ முடியும்: யாரும் சராசரி ஒன்று இரண்டு பிள்ளைகளுக்கு மேல் பெறமாட்டார்கள்.  ஆண் பெண் புணர்ச்சிக்கும் பிள்ளைப் பேறுக்கும் சம்பந்தமில்லாமலே போய்விடும்.
வேலை செய்கிற குதிரைகள் வேறு, குட்டிபோடுகிற போடச் செய்கிற குதிரை வேறு, என்கிற மாதிரி மனித சமூகத்தில் இருக்கும் பிள்ளை பெறும் தொல்லை, வளர்க்கும் தொல்லை, அதற்கு சொத்து, சுகம் தேடும் தொல்லை ஒழிந்து போகும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உண்டு.  மனிதன் அறிவு பெற்றதற்கு காரணம் சாமி விளையாட்டும் பிள்ளைகள் உண்டாக்கும் விவசாயப் பண்ணையும் தானா? மனித அறிவின் எல்லையைக் காண வேண்டாமா? செல்வம் தரித்திரம்,  கஷ்டம், கவலை-தொல்லை இதுதானா மனிதனின் கதி மோட்சம்?
பெண்களை ஆண்கள் நடத்துகிற மாதிரியும், படுத்துகிற பாடும் போல் உலகத்தில் வேறு எந்த ஜீவனாவது செய்கிறதா? பெண்களிடம் சக்தி சொரூபத்தையும், தெய்வத்தன்மையும் , காதல் களஞ்சியத்தையும், தாய்மையையும், அன்பையும் கண்ட பெரியார்கள் என்னும் மிருக சிகாமணிகள் பெண்களைப்பற்றி எப்படி நடத்தும்படி எழுதி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்தால் உலகில் சுயமரியாதை உள்ள பெண்கள், குழந்தைகள்  பெறவே மாட்டார்கள்.  அப்படி பெற நேர்ந்தாலும் பிறந்தது ஆண்குழந்தை என்று கண்டால் கழுத்தை திருகிவிடுவார்கள்.  இது விஷயத்தில் மனிதன் திருத்தப்பட முடியாவிட்டால் எந்த மனிதனும் மனிதத்தன்மைக்கு அருகதையற்றவன் என்றே சொல்லுவேன். பெண்ணுக்கு சொத்து கூடாதாம், காதல் சுதந்திரம் கூடாதாம் அப்படியானால் மனிதன் தன் தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளும் ரப்பர் பொம்மையா? அடிமை உருவா? அது என்று கேட்கிறேன்
பெண்களுக்கு விதவைகள் என்று ஒரு நிலைமை ஏன் இருக்க வேண்டும்? கல்யாணம் செய்து கொண்டதால் தானே இந்தக் கொடுமை? கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் பெண் எப்படி விதவையாக  முடியும்? கல்யாணம் செய்து கொள்ளாமல் இருப்பதில் பெண்களுக்கு இரண்டுவித லாபம் இருக்கிறது.  குழந்தை பிறக்காது என்பதுடன் விதவையும் ஆகமுடியாது. அடிமை நிலையும், சொத்து வைத்திருக்க உரிமையற்ற நிலையும் இருக்க முடியாது.  உலகில் உள்ள சகல கொடுமைகளிலும் விதவைக் கொடுமையே அதிகமானது மற்றும் விபசாரம் பெருகுவதற்கு விதவைத்தன்மையே காரணம்.  ஒவ்வொரு பெற்றோர்களும் பெரிதும் தங்கள் குழந்தை சகோதரி விதவைகளை இலை மறைவு காய்மறைவாய் கலவி உணர்ச்சியை தீர்த்துக் கொள்ள சம்மதிக்கிறார்களே ஒழிய ஒரு புருஷனுடன் சுதந்திரத்துடன் வாழ இடம் கொடுப்பதில்லை.  இது தானா கடவுள் மதத்தன்மை ஏற்பட்ட பலன் என்று கேட்கின்றேன்.
- 'குடிஅரசு', 30.01.1938
- விடுதலை நாளேடு, 16.2.20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக