ஞாயிறு, 6 டிசம்பர், 2015

இயக்கம் படைத்த இந்தி எதிர்ப்பு மாநாடு!

இயக்கம் படைத்த இந்தி எதிர்ப்பு மாநாடு!
இந்திய நடுவணரசு இந்தி மொழித் திணிப்பு இல்லை இல்லை என்று ஒருபுறம் கூறிக்கொண்டு, இந்தித் திணிப்பில் மிகத் தீவிரம் காட்டிவரும் கொடுமையைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் தக்க தருணத்தில் திராவிடர் கழகம் ஏற்பாடு செய்த இந்தி எதிர்ப்பு மாநாடு 15.8.1978 அன்று காலை பெரியார் திடலில் எழுச்சியோடு கூடியது.
தமிழினத் தலைவர்கள் _ அனைத்துக் கட்சி தலைவர்கள் இம்மாநாட்டில் கலந்துகொண்டு இந்தி ஆதிக்கத்தைக் கண்டித்து எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க  மாநாட்டுக்கான டிக்கெட் வாங்க நீண்ட வரிசை நின்று கொண்டிருந்தது. காலை எட்டு மணி முதலே திடலை நோக்கி மக்கள் வெள்ளம் புகத் தொடங்கியது. தந்தை பெரியார் பற்றிய இசைப் பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.
மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் என்னுடைய தலைமையில் பொருளாளர் கா.மா.குப்புசாமி, விவசாயத் தொழிலாளர் பிரிவுச் செயலாளர் ஜோசப் மற்றும் கழகத் தோழர்கள், மூலக்கொத்தளத்தில் உள்ள இந்தி எதிர்ப்பு மாவீரர்களான தாளமுத்து, நடராசன் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
அய்யா நினைவிடத்திலும் அஞ்சலி செலுத்தப்பட்டு, மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாநாட்டு மேடையில் தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர், குன்றக்குடி அடிகளார், ராஜா சர்.முத்தையா செட்டியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம், தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திரனார்,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் அப்துல் சமது, காண்டீபம் ஆசிரியர் எஸ்.எஸ்.மாரிசாமி, தினகரன் ஆசிரியர் கே.பி.கந்தசாமி, பார்வர்டு பிளாக் கட்சியைச் சேர்ந்த திருமறவன் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
இம்மாநாட்டிற்கு ராஜா சர்.முத்தையா செட்டியார் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். குன்றக்குடி அடிகளார் மாநாட்டுச் சிறப்புரையாற்றினார்.
நான் வரவேற்புரை ஆற்றும்போது இந்தி திணிப்புக்கு நியாயம் கற்பிக்கும் எல்லா வாதங்களுக்கும் ஆதாரப்பூர்வமான மறுப்புரைகளை உணர்ச்சிபூர்வமாக எடுத்து விளக்கினேன்.
இந்தியை எதிர்த்து இந்தியாவிலேயே முதல் குரல் கொடுத்தவர் தலைவர் தந்தை பெரியாரவர்கள். முதல் குரல் கொடுத்த பகுதி தமிழ்நாடுதான். 1926லேயே இந்தியின் ரகசியம் என்று ஒரு தலையங்கம் தீட்டி, தமிழுக்கு வரப்போகும் ஆபத்தினைத் தக்க முன்னுணர்வுடன் தெளிவுப்படுத்தியவர் தந்தை பெரியார் அவர்கள்.
அவர்தம் தானைத் தளபதியாக நின்று வென்று இந்தி அறப்போரில் ஈடுபட்ட பகுத்தறிவுக் குடும்ப தலைமகனாம் பேரறிஞர் அண்ணாவும் இன்று உருவத்தால் இல்லை என்றாலும் அவர்கள் இங்கு மட்டுமல்ல, இந்தி எதிர்ப்புக் குரல் கேட்கும் எங்கும் நீக்கமற உணர்வுப்பூர்வமாக வாழ்ந்துகொண்டே இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டேன்.
1938இல் தமிழன் தொடுத்த போர் இன்னும் முடியாத போராக, முற்றுப் பெறாத போராக -_ தொடர் போராக இருக்கின்ற வேதனையுடன் மக்களின் உரிமை காக்க வேறு வழியின்றி திராவிடர் கழகம் முக்கியமான நேரத்தில், இம்மாநாட்டினைக் கூட்டியிருக்கிறது என்றும், இந்திதான் இந்தியாவின் ஆட்சிமொழி: அதை எதிர்ப்பவர்கள் அத்துணைபேரும் தேசத்துரோகிகள் என்ற வாதங்கள் இனி செல்லாது.
முன்பு இந்தியை ஏற்றுக்கொண்டு விட்டார்கள்; இப்போது எதிர்ப்பதேன்? எதிர்க்க உங்களுக்கு என்ன உரிமை? என்று கேட்பது போல இருக்கிறது அவரது பேச்சு!
அரசியல் சட்டத்திலேயே இந்திதான் ஆட்சி மொழி என்று ஆகிவிட்டது என்று கூறி, அதை இனிமேல் யாரும் மாற்றிட முடியாது என்று வாதாடும் இந்தி வெறியர்களுக்கு நாம் பல பழைய உண்மைகளை நினைவூட்டுவது இப்போது மிகவும் அவசியம் என்றே கருதுகிறேன்.
இந்தி ஆட்சிமொழியானது எப்படி? அரசியல் சட்டத்தை வரைந்த டாக்டர் அம்பேத்கர் கூறும் ரகசியத்தை எடுத்துக்காட்டினேன். அதில்,
“Can the South tolerate dominence of the North?”
It may now not be a breach of secret if I revealed to the public what happened in the Congress Party meeting when the Draft Constitution of India was being considered, on the issue of adopting Hindi, as the national language. There was no article which proved more controversial than Article 115 which deals with the question. No article produced more opposition, no article more heat. After a prolonged discussion when the question was put the vote was 78 against 78. This tie could not be resolved. After a long time when the question was put to the party meeting the result was 77 against 78 for Hindi. Hindi won its place as a nation language by one vote. I am stating these facts from my personal knowledge. As a chairman of the Drafting Committee. I had naturally entry to the Congress Party enclosure.”
(Chapter 5, Page 14 Thoughts on Linguistic States.” by Dr. B.R. Ambedkar.)
இதே போல், திரு பி.ஜி.கெர் தலைமையில் அமைக்கப்பட்ட ஆட்சி மொழிக் கமிஷனில் உறுப்பினராக இருந்து, தனது மாறுபட்ட குறிப்பினைத் துணிவோடும், சுயமரியாதையோடும் எடுத்துரைத்த டாக்டர் பி.சுப்பராயன் அவர்களது குறிப்பில்,
“During the ensure of our discussions, I become convineed that Hindi having been accepted in the  constitution, as the official
language, its exponents do not like to alter the constitution as if it were a  sacrosanct
document. No constitution is immutable in its scope and our constitution cannot stand in the way of being amended as and when necessary in the  interest of the country. We have already altered the constitution several times without any compunction. Those who oppose the proposal for the amendment of the constitution do not appreciate that due  preparation should be made before Hindi could  become the official language of the Union. In their  enthusiasm of the present constitutional provisions they overlook the fact that they will be coercising the non-Hindi speaking people to adopt it, “while neither those people nor the Hindi language is ready for the purpose? In a very vital matter like the official language of India, a question which seriously affects the non Hindi speaking areas, the constitution can  certainly be amended.”
Page 327, Kher Commission Report
தேசாயின் குறிப்பிலும்
டாக்டர் சுப்பராயன் அவர்களைப் போலவே அக்குழுவின் மற்றொரு உறுப்பினர் திரு. மகன்பாய் பி. தேசாய் எழுதியுள்ள ஒரு தனிக் குறிப்பில், (அக்குழுவின் அறிக்கை பக்கம் 338).
“In this connection I may note a significent
answer that a very important witness of a non-Hindi speaking state gave to a question if the centre decides to use Hindi in its communication with States how would you prepare for it? The answer given was, ‘if it is imposed on me, I would secede from the Union. This emphasises still further not only the need of a policy and a time schedule, but also that it must be such as may be accepted by non-Hindi speaking areas in
particular”
என குறிப்பிட்டிருக்கிறார். இந்தித் திணிப்பு விபரீத விளைவுகளை உண்டாக்கும் என்பதை இந்த அடிப்படையில்தான் ஆச்சாரியார், காமராசர் போன்ற தலைவர்கள் எல்லாம் வெளிப்படையாகவே பேசினார்கள். எனவே, இந்தியாவின் அய்க்கியத்தை, ஒருமைப்பாட்டினை விரும்புபவர்கள் இந்தியைத் திணிக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளதை எடுத்துக்காட்டினேன்.
இந்தியர் என்று 100 ஆண்டுகளுக்கு முன் இல்லாத ஒரு நாட்டை உண்டாக்கிய பெருமை இங்கிலீசுக்குத்தான் உண்டு என்பதில் இரண்டு கருத்துகளே இருக்க முடியாது! நம் அனைவரையும் மட்டுமல்ல, உலகத்தையே ஒற்றுமைப்படுத்தும் இங்கிலீசை ஏன் விரட்டியடிக்க வேண்டும்? அம்மொழி உலக அறிவின் அறிவு வாயில் அல்லவா? என்று கேள்வியை எழுப்பினேன்.
அனைத்துலகில் எம் மூலையில் அறிவியல் வளர்ச்சி ஏற்பட்டாலும் நாம் அதை அறிந்துகொள்ளுவது ஆங்கிலத்தின் உதவியால் அல்லவா? எனவே அதை ஏன் வெறுத்து விரட்ட வேண்டும்? அதை விரட்டுவது ஏன்? என்றும்,
இங்கிலீஷ் அந்நிய மொழி அல்லவா? சுதந்திரம் பெற்ற ஒரு நாட்டில் அயலவர் மொழியா ஆட்சி மொழியாக இருப்பது? என்று ஒருவாதம் வைக்கப்படுகிறது. இதைவிட கீறல் விழுந்த கிராமஃபோன் பாட்டு போன்ற வாதம் வேறு இருக்கவே முடியாது!
இங்கிலீஷ் என்பது வேற்று மொழி; அந்நிய மொழி என்று வெறுத்து ஒதுக்கத் துடிப்போர், வெளி ஆயுதங்களைத் தானே _ தளவாடங்களைத் தானே இன்னமும் நமது படைகளுக்கு உபயோகிக்கிறார்கள்?
வெளிநாட்டு விமானம் மூலம் பறக்கிறோமே! நம்முடையது புராதனமான பாரதீய கலாச்சாரம் பெருமை பொருந்தியது என்பதற்காக, கட்டை வண்டியிலா பயணம் செய்கிறோம்?
வெளிநாட்டின் நாடாளுமன்ற முறைகள், மரபுகளைத்தானே நடைமுறையில் நோக்குகிறோம்!
இந்தி வாலாக்கள் என்ற எழுத்தாளர்கள் எழுத்தாணி மயில் இறகு கொண்டா எழுதுகிறார்கள்? வெளிநாட்டுக்காரர்கள் ரயிலும், ஒலிபெருக்கியும், வானொலியும் வானொளியும், (டி.வி.யும்) இருக்கையில் அதைவிடப் பன்மடங்கு பயன்பட வேண்டிய இங்கிலீஷ் மட்டும் அந்நிய மொழி என்பதால் விரட்டப்பட வேண்டும் என்பது என்ன நியாயம்? எப்படி தர்க்கரீதியாக சரியாகும்? என்று எல்லாம் அன்று கேள்விகளை எழுப்பினேன்.
ஆங்கிலம் அந்நியமொழி என்று கூறப்படுவதே நடைமுறைப்படிகூட அல்ல; சட்டப்படியேகூட சரியான வாதம் அல்ல.
ஆங்கிலம் இந்திய மொழிகளில் ஒன்றுதான் என்பதை பம்பாய் உயர் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பில் மிகவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக் காட்டினேன்.
பம்பாய் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான ஜஸ்டிஸ் எம்.சி.சாக்ளா அவர்களும், ஜஸ்டிஸ் கே.டிக்சிட் அவர்களும் பம்பாய் அரசுக்கும், பம்பாய் கல்வி சொசைட்டி ஒன்றுக்கும் நடைபெற்ற ஒரு வழக்கில் (AIR 1945 Page 468) தீர்ப்பு எழுதியுள்ளதை இங்கு சுட்டிக்காட்டினேன்.
ஆங்கிலம் சிறுபான்மையோர் மொழி என்றும், அனைத்திந்தியப் போட்டித் தேர்வுகளில் ஆங்கிலம் எல்லோர்க்கும் அந்நிய மொழி. இந்தி ஆட்சிமொழி என்றால், ஒரு சிலருக்குத் தாய்மொழியாக, இருப்பதால் அவர்கள் முதற்குடிமக்களாகவும் இந்தி பேசாத ஏனையோர் இரண்டாந்தர குடிமக்களாகவும் ஆக்கப்படும் பேரபாயமும் தலைவிரித்தாட-வில்லையா?
நாகாலாந்தில் இங்கிலீஷ்தானே அம்மக்கள் மொழி? ஆங்கிலோ_இந்தியர்கள் என்று ஒரு பிரிவே அரசியல் சட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டு, அவர்களுக்கு நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றங்களிலோ, பிரதிநிதித்துவ நியமனம் மூலம் தருகையில் ஆங்கிலம் எப்படி அந்நிய மொழியாகும்?
மெஜாரிட்டி_மைனாரிட்டி வாதம் கூறப்படுகிறது. நாட்டில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் 35 சதவிகிதம்தான். எஞ்சிய 65சதவிகிதத்தினர் தற்குறிகள் என்பதாக, அவர்களைப் பின்பற்றி பள்ளிகளை, கல்லூரிகளை மூடிவிடலாம் என்பதா முறை? நெறி?
எனவே, இங்கிலீஷ் என்பது நமக்கு அந்நிய மொழி அல்ல; காலம் நமக்களித்த அழியாத அறிவுச் செல்வமாகிய அதனைத் தூக்கி எறிந்து விட்டு அந்த இடத்தில் லம்பாடி மொழி அமர்வது நமக்கு அறிவுச் சூனியத்தை, அருமையான பல வாய்ப்புகளையும் அடைக்கும்  அடாத செயல்களே ஆகும் என்று குறிப்பிட்டு பல்வேறு, வரலாற்று நிகழ்வுகளை எடுத்துரைத்து வரவேற்புரையை நிறைவு செய்தேன்.
(நினைவுகள் நீளூம்)
உண்மை இதழ்,16-31.5.15
அய்யாவின் அடிச்சுவட்டில்.... 131 ஆம் தொடர்
நம் மீது இந்தி திணிக்கப்பட்டால் நாலந்தர குடிமக்கள் ஆவோம்!
- கி.வீரமணி
இந்தி எதிர்ப்பு மாநாட்டுக் கூட்டத்தில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் ஆற்றிய தொடக்க உரையில், இந்தி மொழியின் நிலையைக் குறிப்பிடும்பொழுது இந்தி மொழியின் வரலாறு கி.பி.1100இல் தொடங்குகிறது. பிராகிருதத்தின் சிதைவிலிருந்து தோன்றிய வடமொழிக் கலப்பினைப் பெற்று, கங்கைச் சமவெளியின் மேல்பாகத்திலுள்ள டில்லியைச் சுற்றிலும் பேச்சு வழக்கிலிருந்த இந்தோ_ஆரிய மொழிக்கு அய்ரோப்பியர் இந்துஸ்தானி என்று பெயரிட்டனர். விடுதலைக்கு முயன்ற காங்கிரஸ் கட்சியில் அம்மொழியைப் பேசுவோரின் ஆதிக்கம் இருந்ததால் இந்தி தேசிய மொழி என்ற தகுதியை அந்த இந்துஸ்தானி செயற்கையில் பெற்றது. இந்திய மொழிகளில் இந்தியும் ஒன்று. இந்தி ஒரு மொழியாக உருவம் கொடுக்கப்பெற்றதே கி.பி.14ஆம் நூற்றாண்டில் லல்லுஜிலால் என்பவரால்தான்.
இவர் பிராகிருதச் சிதைவான மொழியிலிருந்தும் அராபிய மொழி, பாரசீக மொழி, உருதுமொழி ஆகியவற்றின் கலப்பிலிருந்தும் சீர்திருத்தம் செய்து இந்தி மொழியை உருவாக்கினார். இன்றைக்கு 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இராமானந்தர் இராமன் மீது பாடிய பாடல்களே இந்தி இலக்கியத்தின் தொடக்கம். இந்தி இன்றுகூட மொழி என்று கூறுவதற்குரிய தகுதி பெறவில்லை. இந்தி ஒரு மொழி என்பது மாயையின் தோற்றம். இந்தி மொழியானது நாட்டின் பல்வேறு பகுதிகளில் வேறுபட்ட ஒலி விரிவுகளோடு பேசப்படுகிறது. எல்லா இடத்திலும் இந்தி ஒரே ஒலி வடிவைப் பெற்றிருக்கவில்லை. இந்தியை மேல்நாட்டு இந்தி, கீழ்நாட்டு இந்தி, பிகாரி என்ற மூன்று பெரும் பிரிவுகளாக்கியுள்ளனர்.
ஒவ்வொரு பெரும் பிரிவும் பல்வேறு உட்பிரிவுகளாகவும் பிரிந்துள்ளன. இந்த அவல நிலையில் இந்தியை பாரதத்தின் ஆட்சிமொழியாக ஏற்பது பற்றிய விவாதம் அரசியலமைப்புச் சபையில் நடந்த வாக்கெடுப்பிற்கு விட்டபோது இந்திக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் சமநிலை வாக்குகளே கிடைத்தன. 74_74 வாக்குகளே கிடைத்தன. இந்தி மொழி _ ஆட்சிமொழி பற்றி விவாதம் மீண்டும் அரசியலமைப்புச் சபையில் வந்தது. கடைசி வரையில் இந்தி அரசியல் அமைப்பு சபையில் பெரும்பான்மை வாக்குப் பெற்று வெற்றிபெறவே முடியவில்லை. உடன்பாடுதான் செய்விக்கப்பெற்றது. தழுவிச் செல்லும் மனப்போக்கினால் இந்தி எதிர்ப்பு உணர்ச்சிமுனை மழுங்கிவிட்டது. காங்கிரஸ் கட்சி தென்னகத் தலைவர்கள் இந்தி எதிர்ப்பு உணர்ச்சி பெற்றிருந்தும் உடன்பாட்டின் வயப்பட்டதால் இந்தியை ஆட்சிமொழியாக ஏற்றுக்கொள்ளத் தலைப்பட்டனர் என்று இந்தியைப் பற்றி அதன் தொடக்க கால வரலாறு மற்றும் இந்திய அரசு எப்படி ஏற்றுக்கொள்ள முடிந்தது போன்றவற்றை விரிவாக அன்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இந்தி எதிர்ப்பு மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய செட்டிநாட்டரசர் ராஜா சர்.முத்தையா செட்டியார் அவர்கள் தலைமையுரை ஆற்றியபோது குறிப்பிட்டதாவது: தமிழைப் பிறமொழி ஆதிக்கத்தினின்று காக்கவும், இந்தித் திணிப்பை எதிர்க்கவும் நாம் இங்கே கூடியிருக்கின்றோம். இந்தியைத் திணிக்கமாட்டோம் என்று கூறிக்கொண்டே மத்திய அரசு பலவழியில் இந்தியைத் திணித்துக்கொண்டு வருகிறது. வாசல் வழியாக வந்தால் வரவேற்பு இருக்காது என்று எண்ணி, இந்தி கொல்லைப்புற வழியாக கோலோச்ச வருகிறது. முன் வழியானாலும், பின் வழியானாலும், தன் வழிப்படியே போவதுதான் முறையாகும் என்று குறிப்பிட்டார்கள்.
இந்திமொழி பொதுமொழி ஆவதால், ஆட்சி _ மொழி ஆவதால் தமிழ் மக்கள், வடநாட்டு மக்களோடு பதவியில் பல்வேறு வேலைவாய்ப்புகளில் போட்டிபோட முடியாத காரணத்தால் இரண்டாம் தரக் குடிமக்கள் ஆகிவிடுவார்கள். இதனால், இருபகுதி மக்களிடையேயும் மனக்கசப்பும், வெறுப்புணர்ச்சியும் வளரும். இவ்வுணர்ச்சி நாட்டின் ஒற்றுமையைப் பாதித்து, முன்னேற்றம் தளர்ச்சியில் போய் முடியும் என்று குறிப்பிட்டார்.
மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்துக் கட்சியினரின் ஒப்புதலுடன் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழகத்தின் முதுபெரும் தலைவர்களான தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முன்பு இந்தியைத் திணித்து பிறகு கடுமையாக எதிர்த்த திரு.இராஜகோபாலாச்சாரியார் எழுப்பிய என்றைக்கும் இந்தியில்லை, என்றுமே ஆங்கிலம்தான் (English ever and Hindi never) முழக்கத்தையே தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் ஒருமித்த குரலில் அரசுக்கு இம்மாநாட்டின் மூலம் தெரியப்படுத்துகிறார்கள். இருமொழிக் கொள்கையே, (English and Tamil)  தமிழ் மக்களுக்கு உடன்பாடான ஒரே கொள்கை என்பதை இம்மாநாடு ஒரு மனதுடன் உறுதிபடுத்துகிறது.
காண்டீபம் ஆசிரியர் எஸ்.எஸ்.மாரிசாமி, அப்துல் சமது மற்றும் பலர் இந்தி திணிப்பைக் கண்டித்துப் பேசினர்.
இந்தி எதிர்ப்பு மாநாட்டின் மாலை நிகழ்ச்சிகள் 4 மணியளவில் தொடங்கின. காலையில் இருந்ததைவிட மும்மடங்கு கூட்டம் திடலில் குழுமியதால் இடநெருக்கடி அதிகரித்தது. அனைத்துக் கட்சித் தலைவர்களின் ஆவேச உரையைக் கேட்க ஆவலுடன் மக்கள் காத்திருந்தனர்.
பிற்பகல் நிகழ்ச்சியில் குடந்தை ஜோசப், வழக்குரைஞர் சாமிதுரை, கழகப் பொருளாளர் கா.மா.குப்புசாமி ஆகிய இயக்க முன்னணியினரும், பேராசிரியர் ராமநாதன், டாக்டர் கிருஷ்ணசாமி, கி.ஆ.பெ.விசுவநாதம், தினகரன் ஆசிரியர் கே.பி.கந்தசாமி, அலைஓசை பத்திரிகை நிறுவனர் வழக்குரைஞர் வேலூர் நாராயணன், பிரான்சிஸ் ராயன், பெருஞ்சித்திரனார் மற்றும் சர்வகட்சி சார்பில் திருமறவன் டி.என்.அனந்தநாயகி, குமரி அனந்தன் எம்.பி., டாக்டர் சந்தோஷம், மாணிக்கம் எம்.எல்.சி. ஆகியோர் உரையாற்றினர்.
இறுதியாக தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெருத்த கரவொலிக்கிடையே சிறப்புரையாற்றி மக்கள் உணர்ச்சியைப் பிரதிபலித்தார்.
இந்தி எதிர்ப்பு மாநாட்டில் கலைஞர் கலந்து உரைநிகழ்த்தும்போது குறிப்பிட்டதாவது:
நாம் தமிழ் இனம்; இந்தி மொழி பரப்பப்பட்டு, மற்ற மொழிகளெல்லாம் அடியோடு அழிக்கப்பட்டு, இந்தி ஆதிக்கம் தலைதூக்குமேயானால், அதற்குப் பிறகு நாம் நண்பர் குமரி அனந்தன் இங்கே குறிப்பிட்டதைப் போல _ இரண்டாந்தர மக்களாகக்கூட அல்ல. நாலாந்தர மக்களாக ஆக்கப்பட்டு விடுவோம். அதை தயவுசெய்து நீங்கள் மறந்துவிடக் கூடாது.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.அவர்கள்கூட, மூன்றே நாளில் இந்தியைப் படித்துவிடலாம். படிப்பது எளிது என்று கூறினார்கள். படித்தால் என்ன என்றுகூட உங்களுக்கு ஆசை வரலாம். இந்தி படிப்பது எளிது. ஆனால் படித்தால் அது மிகக் கொடிது. எளிது என்பதற்கும், கொடிது என்பதற்குமுள்ள பொருள் நீங்கள் உணர வேண்டும்.
மும்மொழித் திட்டத்தால் இந்தியைப் படித்தால் நல்லதுதானே என்று கேட்கத் தோன்றும். அதே நேரத்தில் நமது தாய்மொழி தமிழ். நாம் மும்மொழித் திட்டத்தால் இரண்டாவதாகப் படிக்க வேண்டிவருவது இந்தி, மூன்றாவதாகப் படிக்க வேண்டிவருவது ஆங்கிலம். இந்த மூன்றையும் படித்துத் திறமையாக ஒருவர் அல்லது இருவர் வரலாம்.
ஆனால் அதே நேரத்தில் இந்தி பேசுகிற மாநிலத்தில் உள்ளவர்களின் தாய்மொழி. இந்தி அவர்களுக்கு மும்மொழித் திட்டம் பெயரளவுக்குத்தான். அடுத்தது ஆங்கிலம். அவர்களுடைய தோள்களிலே சுமத்தப்படுகிற சுமை ஒரே ஒரு சுமைதான். ஆங்கிலம் என்கின்ற ஒரேஒரு சுமைதான். ஆனால் தமிழர்களுடைய தோள்களிலே சுமத்தப்படுகிற சுமை இந்தி, ஆங்கிலம் என்ற இரண்டு சுமைகள்.
கர்நாடகத்தில் இருக்கிற ஒரு கன்னடியர் மீது, மலையாளத்தில் இருக்கிற ஒரு மலையாளி மீது, ஆந்திரத்திலே இருக்கிற ஒரு தெலுங்கர் மீது, பஞ்சாபிலே இருக்கிற ஒரு பஞ்சாபி மீது, வங்காளத்திலே இருக்கிற ஒரு வங்காளி மீது சுமத்தப்படுகிற சுமை இந்தி, ஆங்கிலம் இரண்டும்.
நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆங்கிலத்தைப் படித்து திறமைமிக்கவர்களாக ஆகி நூற்றுக்குத் தொண்ணூறு பேர் திறமைசாலிகளாக ஆவார்கள். அதே நேரத்தில் தமிழர்கள் தமிழையும் படித்து இந்தியையும் படித்து ஆங்கிலத்தையும் படிக்க வேண்டும் என்கின்ற நிலைக்கு ஆளாவார்கள். நூற்றுக்கு ஒரு சதவிகிதம்தான் இங்கே திறமைசாலிகளாக வரமுடியும். அது எங்கே கொண்டுபோய் நம்மைவிடும்? மத்திய அரசின் வேலைவாய்ப்புகளிலிருந்து மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலே இருக்கிற வேலைவாய்ப்புகள் வரை தமிழனுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.
அப்படியானால் இந்தியை ஏற்றுக்கொண்டால் என்ன? தமிழனுக்கு இடம் கிடைக்குமல்லவா என்று கேட்கத் தோன்றும். என்ன ஆகும்? இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவன்தான் _ நடைபெறுகின்ற தேர்வுகள் அனைத்திலும் பெருவாரியாக வெற்றி பெறுவான். தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவன் பெருவாரியாக வெற்றிபெற மாட்டான். எனவே எதிர்காலத்திலே தமிழனுக்கு அவனுடைய வாழ்வில் இருள் கவ்வக்கூடிய சூழ்நிலை ஏற்படும். எனவேதான் நாம் இப்போதிருந்தே திட்டமிட்டு ஆங்கிலம், அவரவர்களுடைய தாய்மொழி ஆகிய இரண்டு மொழிகளும் போதும் என்கிறோம் என்று குறிப்பிட்டார்.
தினகரன் ஆசிரியர் கே.பி.கந்தசாமி அவர்கள் பேசுகையில், விரைவில் ஆங்கில நாளேடு ஒன்றைத் தாம் தொடங்க இருப்பதாக அறிவித்தார்.
நான் எழுந்து, தமிழர்களுக்கென்று ஆங்கில நாளேடு ஒன்று தொடங்கப்பட வேண்டும் என்பது தந்தை பெரியார் அவர்களின் பெரு விருப்பமாகும். அதை நிறைவேற்றும் வகையில் திரு.கந்தசாமி அவர்கள் அறிவித்துள்ளதைக் கண்டு மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். தொடங்க இருக்கும் நாளேட்டிற்கு கழகத்தின் சார்பில் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையில் ரூ.100 அளிக்கிறோம் என அறிவித்து, மேடையிலேயே நன்கொடை நிதியையும் வழங்கினேன்.
மக்கள் கடல் வெள்ளம்போல் பல்வேறு ஊர்களிலிருந்து திரண்டிருந்தனர். ஏராளமான பொதுமக்களும், கழகத் தோழியர், தோழர்கள், தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சியைச் சேர்ந்த தோழர்களும் பெருந்திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(தொடரும்)
உண்மை இதழ்,1-15.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக