ஞாயிறு, 13 டிசம்பர், 2015

வைஷணவாள் செம்பு - தந்தை பெரியார்


இந்திய யூனியனின் மத்திய சர்க்கார் நேரடி நிருவாகப் பொறுப்பிலுள்ள ரயில்வே இலாகாவில் நமது நாட்டு அய்யங்கார் பார்ப்பனர்கள் அடியெடுத்து வந்தவன் சீர்திருத்த வேலையைச் செய்யத் தொடங்கியிருந் தார்கள். இவர்களின் இந்தச் சீர்திருத்தத்தைப் பார்க்கும்போது இந்தத் தொடக்கமே முடிவாகவும் இருந்து விடட் டும் என்று தான் நாம் ஆசைப்படுகிறோம்.
இப்படி நாம் ஆசைப்படுவதற்குக் காரணம், இவர்களின் சீர்திருத்தப் படையை நோக்கும் போது, அய்யர் பார்ப்பனர்கள் என்பவர்கள், அய்யங்கார் பார்ப்பனர் களைப் பற்றிக் கூறும் கிண்டல் தான் நமக்கு ஞாபகத்துக்கு வருகிறது. அய்யர், அய்யங் கார் ஆகிய இருவராகப் பார்ப்பனர்களும், பார்ப்பனச் சமுதாயம் பற்றிய பொதுக் காரியங்களில் ஒருவர்க்கொருவர் எவ் வளவு பகையாயிருந்தாலும் எவ்வளவு கருத்து மாற்றத்திடையேயும் கொள்கைக் காரர்களா இருந்தாலும் அவற்றை யெல்லாம் அப்போது மறந்துவிட்டு ஒன்று கூடிக் கொள்கிறார்கள் பதவி, மற்றபடி அவர்களுக்குள்யேயே ஏதாவது தகராறு என்றால் அது மிக மிகப் பிரபலமாகவும் ருசியுள்ளதாகவும் இருக்கும். சர்வதேச வர்த்தமானங்களை அனுசரித்து இந்த இரண்டு வகைப் பார்ப்பனர்களும் கோவில் முறையில் சண்டையிட்டுக் கொண்டு, கோர்ட்டுக்குப் போய் திராவிடன் பணத்தைப் பங்கு போடும் பழக்கம் இப்போது சில காலமாகக் குறிப்பிடத் தகுந்த முறையில் இல்லை யென்றாலும், சுமார்த்தப் பார்ப்பனர்களும், வடகலை அய்யங் கார்களும் சாதாரண வாழ்விலேயே சண்டை பிடித்துக் கொள்வதைச் சர்வ சாதாரணமாகக் காணலாம். ஆனால், அவர்களோடு சற்று நெருங்கிப் பழக வேண்டும். அய்யங்கார் பார்ப்பனர்களைப் பற்றிக் குறை சொல்ல வேண்டும் என்றெண்ணுகிற அய்யர் பார்ப்பனர்கள், போடாபோ! எல்லாம் ஒங்க வைஷ்ணவாள் செம்புதான் என்று வேடிக்கையாகவும் அதே சமயத்தில் மானமுள்ள நெஞ்சை ஈட்டியால் குத்துவது போலவும் நறுக் கென்று கூறுவதை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். இதற்கு அவர்களும் வேடிக்கையாக ஏதாவது திருப்பிக் கூறுவார்களே தவிர மான ரோஷத்துடன் நம்மைப்போல் கைகலந்து விட மாட் டார்கள்.
இந்த ஷைஷ்ணவாள் செம்பின் ரகசியம் தெரியாதவர்களுக்கு, இதை அநுபவிக்க முடியாது. ஆகவே, அந்த ரகசியத்தைக் கூறி விடுகிறோம். இது பித்தளையினாலோ, தாமிரத்தினாலோ அல்லது இரண்டுங்கலந்தோ செய்யப் படுகிற செம்பு. அடிப்பாகம் (வயிறு) பெருத்திருக்கும். வாயின் விரிவுக்கேற்றபடி கழுத்தும் இல்லாமல் கையே நுழைய முடியாதபடி கழுத்து மிகமிகச் சிறுத்திருக் கும். இந்தச் செம்பு துலக்கியவுடன் நல்ல பயபளப்பாக, முகம் காட்டும் கண்ணாடி போலக் காட்சியளிக்கும். ஆனால் உள் ளேயே அழுக்கு இருக்கும். அது தான் கை நுழைய முடியாதே, அதற்குள் புகுந் திருக்கும் பாதியை - அழுக்கை எப்படிப் போக்குவது? உள்ளே அழுக்கும் வெளியே மினு மினுப்பும் உடையதுதான் அய்யங் கார்கள் செயல்கள் என்பது இதன் ரகசியம்.
நம் நாட்டு ரயில்களில் சமீப காலத்தில் யாரேனும் பிரயாணம் செய்து, ரயில்வே ஜங்ஷன்களில் செய்யப் பட்டிருக்கும் பெயர் மாறுதல்களை உற்றுப் பார்த்திருந் தால், இந்தச் சீர்திருத்தம் என்ன என்பது தெரியும். ஜங்ஷன்களிலுள்ள உணவுக் கடைகளின் பெயர்கள் எல்லாம், சுமார் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே மாற்றி எழுதப் பட்டிருக்கின்றன. அய்ரோப்பியன் ரெரிப்ஃரெஷ்மென்ட் ரூம் என்பது அய்ரோப்பியன் ஸ்டைல் ரெரிப்ஃரெஷ் மென்ட் ரூம் என்பதாகவும், இண்டியன் ரெரிப்ஃரெஷ்மென்ட் ரூம் என்பது வெஜிட்டேரியன் (சைவ) ரெரிப்ஃரெஷ் மென்ட் ரூம் என்பதாகவும், முஸ்லிம் டீ ஸ்டால் என்பது ஜெனரல் டீ ஸ்டால் என்பதாகவும் புகுத்தியும் மாற்றியும் எழுதப்பட்டிருக்கின்றன.
இந்தப் பெயர் மாற்றத்திற்குக் கோபால் சாமி அய்யங்கார் ஒருவர் மட்டும் தான் பொறுப்பா? அல்லது சந்தானமய்யங் காரும் சேர்ந்தா? என்பது எப்படியிருந்தாலும், இந்தப் பெயர் மாற்றம் வைஷ்ணவாள் செம்பைத்தான் நினைப்பூட்டுகிறது.
மதம், இனம், ஜாதி, ஆண் அல்லது பெண்ணாயிருத்தல், பிறந்த இடம் ஆகிய வற்றில் ஒன்று அல்லது பலவற்றின் காரணமாக எந்தப் பிரஜைக்கும் எதிராகச் சர்க்கார் பாரபட்சமாக நடக்கக் கூடாது என்று நான்கு நாளைக்கு முன் அரசியல் நிர்ணய நாடக சபாவில் நிறைவேற்றப்பட் டிருக்கிற, அடிப்படை உரிமை என்கிற தீர்மானம் இருக்கிறதே அதை முன்னறிந்து பிரதிபலித்ததுதான் இந்த ரயில்வே கடைகளின் பெயர் திருத்தம் என்றாலும் சரி, தீர்மானம் எப்படிப் பிற நாட்டவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு, உள் நாட்டில் வர்ணாச்சிரமப் பாகுபாடும் அதன் வக்கிரமப் போக்கும் தலைவிரித்தாட இடங் கொடுக்க உதவுகிறதோ, அதைப் போலவே தான் பெயர் திருத்தமும் வெளித் தோற்றத் தில் மிகவும் உயர்ந்த சமத்துவ முறையிலும் நடை முறையில் வர்ணாச்சிரம முறையிலும் அமைந் திருக்கிறது.
நமது நகைச்சுவையரசு என்.எஸ்.கே. அவர்கள் கூறுவது போல், திராவிட நாட்டிலேயே தீண்டாமை இல்லாத இடம் ரயில்களும் ரயில்வேக்களும்தான். தீண் டாமையைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப் பட வேண்டாத இந்தத் திராவிட நாட்டு ரயில்வே நிலையங்களில் மட்டும் எதற்காக இந்தப் பெயர் மாற்றம்? இந்து-முஸ்லிம் வித்தியாசத்தை நீக்குவதற்காக என்றால் அது நம் திராவிட நாட்டைப் பொறுத்த வரையிலும், இல்லாத ஒன்றை உண்டென்று பெயர் பண்ணி, அதை ஒழித்துக்கட்ட முயலும் முயற்சியாகும். இந்து - முஸ்லிம் சாயாக்களுக்கு இடமும், அதையொட்டி மதவெறிக்கு இடமுமாக இல்லாத திராவிட நாட்டில், தென்னாட்டு அய்யங்கார் பார்ப்பனர்கள் ஏன் இந்தத் திருத்தத் திருப்பணியில் இறங்கவேண்டும்?
பழைய, இண்டியன் ரெரிப்ஃரெஷ் மென்ட் ரூமை எடுத்து கொண்டால் சமைப்பதும், அதைச் சப்ளை பண்ணுவதும், அதை ஏற்று நடத்தும் மானேஜிங் பொறுப்பும் பார்ப்பனர் சமூகத்துக்கே ஏகபோகமாயிருந்து வந்திருக்கிறது. இப் போது இண்டியன் ரெரிப்ஃரெஷ்மென்ட் ரூம் என்பது வெஜிட்டேரியன் ரெரிப்ஃ ரெஷ்மென்ட் ரூம் என்று மாற்றப்பட்டிருப்ப தால் சமைப்பவர்கள் மாறிவிடுவார்களா? சப்ளையர்கள் மாறிவிடுவார்களா? மானே ஜர்கள் மாறிவிடு வார்களா? அதாவது சைவ உணவு தயாரிக்கும் மற்ற திராவிடர் களும், வெஜிட்டேரியன் ரெரிப்ஃரெஷ்மென்டை ஏற்று நடத்த அய்யங்கார்களின் இந்தத் திருத்தம் பயன்படுமா? அப்படி யில்லாத வரையிலும் ஏன் இந்தக் கண் துடைப்பு வேலை?
இனி, வடநாட்டைப் பொறுத்த வரை யிலும் கூட இது பயன்படுமா? உண்மை யான சீர்திருத்த வேலையாகுமா? என்றால், அதுவும் இல்லை என்கிற முடிவுக்குத் தான் வரவேண்டும். இந்தச் சாயா தயாரிப்பவர்கள், இனியும் இந்துக்களாகத்தானிருப்பார்கள். முஸ்லிம் சாயா தயாரிப்பவர்கள் இனியும் முஸ்லிம்களாகத்தான் இருப்பார்கள். இப்படியாக வடநாட்டுக்கு இந்தப் பெயர் மாற்றம், மத வித்தியாசம் - ஜாதி வித்தியாசம் ஆகியவற்றை ஒழிப்பதற்குப் பயன்படாது என்றால் வேறு எதை முன்னிட்டு இப் பெயர் மாறுதல்?
அரசியலில் நாங்கள் தான் மெஜாரிட்டி என்று கூறி, அதற்கு அனுசரணையாகப் பல பெருங்குடி மக்களிலிருந்து வீபிஷணர் களைத் தயார் செய்த காங்கிரஸ், பழங்குடி மக்களான ஆதித் திராவிடர்களை அன்று ஹரி ஜனங்கள் என்று பெயர் மாற்றம் செய்து, அவர்கள் வாழ்வுக்கு எந்த மாறு தலையும் செய்யத் துணியவில்லையோ அந்த வழியைத்தான் மத்திய அரசாங்க ரயில் மந்திரிகளான அய்யங்கார்களும் பின்பற்றி இருக்கிறார்கள். காங்கிரசின் அன்றைய நடத்தை எப்படி வெள்ளையன் கண்ணை மறைக்கப் பயன்பட்டதோ, அப்படியே இன்று திராவிடன் கண்ணை மறைக்க இந்தப் பெயர் மாற்றம் பயன் படட்டும் என்று கருதியிருக்கிறார்கள். இன்று திராவிட நாட்டில், ஆரியரின் அக்கிரமச் செயல்கள் மீது வெறுப்பும், வடநாட்டுச் சுரண்டலை யொழிக்க வேண்டுமென்கிற உறுதியும், மத்திய அரசாங்கப் பிணைப்பிலிருந்து விடபட வேண்டுமென்கிற அவசியமும், வர வர வெளிப்படையாகக் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டது. மத்திய அரசாங்கத் தின் கையில் லகான் இல்லாமல், மாகாணங் களுக்கே சுயாட்சி என்று, எந்த வடிவத் திலோ அமையப் போகிற ஆட்சி உரிமை அமைந்து விட்டால், எப்படியும் பார்ப் பனர்கள் மற்றவர்களோடு ஒத்த முறையில் தான் வாழவேண்டியதாய் வரும் என்பதை நன்கு அறிந்து கொண்டார்கள். பிரிவினை இல்லாத வரைக்கும், இந்த நாட்டிற்குப் பார்ப்பனர்கள் வைத்ததுதான் சட்டம் என் பதையும் கண்டுகொண்டவர்கள், திராவிட னுக்கு மத்திய அரசாங்கத்தின் மீது வளரும் வெறுப்பைப் போக்க வேண்டும். அதே நேரத்தில் மாகாண சர்க்கார் மீது ஒரு அவ நம்பிக்கையை யுண்டு பண்ண வேண்டும். அதாவது மத்திய அரசாங்கம் பார்ப்பனர் களுக்கே ஏக போக மிராசாய் இருந்தும் கூட, வைதிக சிகாமணிகளான அய்யங்கார் பார்ப்பனர்கள் ரயில்வே மத்திரிகளாயிருந் தும்கூட, அவர் களுடைய நிருவாகத்தில் மத வித்தியாசம் - ஜாதி வித்தியாசம் போக்கடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மாகாண சர்க்காரோ அதற்கடங்கிய ஸ்தல ஸ்தாபனங்களோ இந்தக் காரியத்தைச் செய்ய முன் வரவில்லை என்கிற எண்ணத்தை வளர்க்க வேண்டும். இந்த அளவுக்குத் தான் இந்தப் பெயர் மாற்றம் பயன்படுத்தலாம் என்றெண்ணப் படுகிறதே தவிர வேறு என்ன?
உண்மையாகவே மதவித்தியாசம், ஜாதி வித்தியாசம் ஒழிய வேண்டுமென்கிற ஆசை நம் அய்யங்கார்களுக்கும், மத்திய அரசாங்கத்திற்கும் இருக்கிறது என்பது உண்மையானால், பெயர் மாற்றம் நடந்த போதே மாகாண சர்க்கார்களுக்கும் உத்தரவு போட்டிருக்கவேண்டும். நாட்டின் எந்த மூலையிலும் எந்த ரூபத்திலும் ஜாதி, மத வித்தியாசம் வெளிப்படாதிருக்க வகை செய்திருக்க வேண்டும். பெயர் மாற்றம் செய்து அன்றே இதற்கு ஏற்பாடு செய்யவில்லை யென்றாலும் இனியாவது மாகாண சர்க்கார் பின்பற்றுவதற்கான வழிவகை செய்யப்படுமா என்றால் அது இவர்களால் ஆகக் கூடிய காரியமல்ல வென்றே உறுதியாகச் சொல்லுவோம்.
ஆலயப் பிரவேசத்தை அனுமதித்துச் சட்டம் செய்துவிட்டு, மாகாண சர்க்கார் பல இடங்களில் முகத்தில் கரிபூசிக் கொள்ள வேண்டியதாய் ஆகிவிட்டது. இந்த வெட்கம் கெட்ட நிலையை வெளியில் சொல்லவு முடியவில்லை, விழுங்கவும் முடிய வில்லை. அந்த நிலையில், பொது இடங்களில் அடிப்படையான பிரஜாவு ரிமையைக் காப்பாற்ற மாகாண சர்க்கார் எந்த நியாயத்தால் முன் வந்து விட முடி யும்? வேண்டுமானால் ஆலயப் பிரவேச சட்டத்தைப் போல் மாகாண சட்டசபை களும் ஏட்டில் நிறைவேற்றிக் கொண்டி ருக்க முடியுமே தவிர, நாட்டு நடப்பில் அதை எப்படிச் செயல்படுத்திக் காட்ட முடியும்?
ஜாதியின் பேரால் தெருக்களுக்குப் பெயர், ஜாதி மதங்களையொட்டிக் கடை களுக்குப் பெயர், என்றிருக்கிற இழி நிலையை ஆங்காங்கே ஸ்தல ஸ்தாப னங்கள் தான் நீக்க வேண்டும் என்றிருக்கும் இப்போதைய சட்டத்தை நாமறிவோம். ஆனால், மற்ற காரியங்களில் ஸ்தல ஸ்தாபனங்களைக் கட்டுப்படுத்தி வரும் மாகாண அரசாங்கம், ஏன் இந்தக் காரியத்தில் தனக்கு நியாயம் என்று படுகிற ஒரு விசயத்தைக் கட்டாயப்படுத்தக் கூடாதா? அதைப் போலவே மற்ற காரியங் களில் மாகாணங்களைக் கட்டாயப்படுத்தும் மத்திய அரசாங்கம் இந்த விஷயங்களில் ஏன் கட்டாயப்படுத்தக் கூடாது? மத்திய அரசாங்கத்துக்கு உண்மையில் ஜாதி மத வேறுபாடுகளைப் போக்கவேண்டுமென்கிற கவலையிருக்கு மானால் பிரஜா உரிமை பற்றிய தீர்மானம் எந்த வடிவத்தில் இருக்க வேண்டும். மதம், இனம் முதலியவற்றின் காரணமாக எந்தப் பிரஜைக்கும் எதிராகச் சர்க்கார் பாரபட்சமாக நடக்கக் கூடாது என்கிற தீர்மானம் மதம், இனம், ஜாதி, ஆண் அல்லது பெண்ணாயிருத்தல் பிறந்த இடம் முதலியவற்றால் வித்தியாசம் இருக்க வேண்டுமென்று வற்புறுத்து கிறதா? அல்லது அவ்வித்தியாசங்களை ஒழித்துக் கட்ட வேண்டுமென்கிறதா? வித்தியாசங்கள் இருக்கத் தான் வேண்டும். அவற்றை ஒழித்துவிட வேண்டுமென்பது நோக்க மல்ல என்பதை இந்தத் தீர்மானமே வெளிப்படுத்தவில்லையா?
ஜாதி மத வித்தியாசத்தை - உயர்வு தாழ்வை - பிறப்பைக் காட்டியே ஒருவன் சுகவாழ்வு வாழ்வதற்கும் தன்னாலேயே மற்றொருவன் துயர வாழ்வு வாழ்வதற்கு மான நிலையை - இந்த அரசியல் நிர்ணய சபாவின் அடிப்படை பிரஜாவுரிமைத் தீர்மானம் எப்படி நீக்கி விடாதோ, அது எப்படி மற்ற நாட்டவர்களின் முன்பு தன் பெருமையைக் காப்பாற்றிக் கொள்ளவும் சமத்துவமான நாடு என்று விளம்பரம் செய்யவும் பயன்படுமோ அப்படித்தான் அய்யங்கார்களின் நடவடிக்கையும் வைஷ் ணவாள் செம்பாகத்தான் இருக்கிறது. அதனால்தான் இந்தக் கண்துடைப்பு நாடகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டுமென்கிறோம். ஏன்? திராவிடன் வெள்ளையனைப் போல வெளிநாட்டான் அல்ல.
- தந்தை பெரியார் அவர்கள் எழுதிய தலையங்கம், (குடிஅரசு, 4.12.1948).
-விடுதலை,17.8.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக