ஞாயிறு, 16 அக்டோபர், 2016

இந்து மதம் என்று உண்மையில் கிடையாது


21.7.1929- குடிஅரசிலிருந்து...
இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லை என்பதைப் பற்றி நாமே தனித்து சொல்லுவதாகவும், அதைப் பற்றிய படிப்பு சிறிதும் இல்லை என்றும், அதுவும் பார்ப்பனர்கள் மீதுள்ள துவேசத்தால் சொல்லுவதாகவும் சிலர் சொல்லு கின்றார்கள். ஆனால் இப்போது நமது நாட்டில் ஆங்கி லத்திலும் தமிழிலும் வல்லவர் என்றும்,
சமய ஆராய்ச்சியில் தேர்ந்தவர் என்றும், மிக்க நுண்ணிய அறிவுடையவ ரென்றும், பல்லோரால் மதிக்கப்படும் உயர்திருவாளர் திருநெல்வேலி கா.சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல், அவர்கள் சுமார் 7, 8 வருடங்களுக்கு முன் செந்தமிழ்ச்செல்வி என்னும் புத்தகத்தில் எழுதி இருப்பதை இங்கு அப்படியே எழுதுகின்றோம்.
முதல் முதல் மக்கள் உள்ளத்தே பதிக்க வேண்டியது யாதெனில் இந்து மதம் என்ற ஒரு சமயம் உண்மையில் கிடையாது என்பதும் இந்துமதம் என்பது இந்திய நாட்டிலுள்ள மக்களின் சமயம் என்று கொள்ளப்படும் சிந்து நதிக் கரையில் உள்ளவர்களைக் குறிக்கும் ஹிந்து என்ற பாரசீகச் சொல்லை கிரேக்கர் இந்து என வழங்க அவர் வழக்கைப் பின்பற்றி மேலைதேசத்தார் யாவரும் இந்நாட்டி லுள்ளாரை இந்துக்கள் எனவும், இந்நாட்டை இந்தியா எனவும் வழங்கலாயினர். இந்து என்ற சொல் இப்பொருளில் ஆரியம், தமிழ் என பண்டைய இரு மொழி நூல்களிலும் கிடையாது.
இந்நாட்டிலே சமயங்களைப் பற்றி சிறிதும் அறியா தவர்கள் தங்கள் மதத்தை இந்துமதம் என்று கூறுவார்கள். அய்ரோப்பியம், அமெரிக்கம் ஆங்கிலம் என்ற சொற்கள் வாயிலாக அன்னோரது சொற்களும், நாகரிகங்களும் குறிக்கப்படுவதே அல்லாது சமயம் குறிக்கப்படாமை போல இந்து என்ற சொல்லும் இமயம் முதல் குமரி வரையிலுள்ள மக்களின் நாகரிகத்தைக் குறிப்பதேயன்றி சமயத் தைக் குறிப்பதன்று. இருக்கருத்தை சுவாமி விவேகானந் தரும் தமது சொற்பொழிவு பலவற்றில் சுட்டியுள்ளார்...
ஒரு சமயத்திற்குப் பெயர் அதன் கடவுளை வைத்ததால், தலைமை ஆசிரியரை வைத்ததால் அருள் நூலை வைத்ததால் எழுதுவது முறை... கிறித்துமதமும் மகம்மதிய மதமும் தங்கள் தலைவரது பெயரைத் தமக்குப் பெயராகக் கொண்டுள்ளன. அவ்வாறே புத்தமதமும், ஆருகதமுமாம். ஆனால், இந்து என்ற சொல்லோ சமயக்கருத்து யாதொன் றையும் குறிப்பதில்லை.  இக்குறிப்பில் திரு. பிள்ளை அவர்கள் சுவாமி விவேகானந்தரும் இதே அபிப் பிராயம் கொண்டதாகக் கூறி இருக்கின்றார்.
எனவே, இப்படி ஒரு அர்த்தமே இல்லாத வார்த்தையின் பேரால் மதம் என்ற ஒன்றைக் கற்பித்துக் கொண்டு சமயத்திற்கேற்றபடியெல்லாம் தங்கள் தங்கள் சுயநலத்திற் கேற்றபடியெல்லாம் கொள்கைகளைச் சொல்லிக்கொண்டு 20 கோடி மக்களையும், பல வளப்பமுள்ள ஒரு பெரிய தேசத்தையும் பாழாக்கி வருவதை இனியும் எத்தனைக் காலத்திற்கு மக்கள் பொறுத்துக் கொண்டி ருப்பது என்பது விளங்கவில்லை.
இதைப்பற்றி மற்றொரு சமயம் டாக்டர் எஸ். சுப்பிர மணிய அய்யரான ஒரு பார்ப்பனர் அவர்கள் காமன்வீல் என்ற பத்திரிகையில் எழுதி இருப்பதாவது:-
இந்துக்களின் தற்கால நிலைமையைக் கவனித்துப் பார்த்தால் தாறுமாறாகச் சீர்குலைந்து அலங்கோலப்பட்டு இடிந்து பாழாகிக் கிடக்கும் இந்து மதம் என்னும் பழைய கோட்டை, அங்கே சிறிது இங்கே சிறிதாக எவ்வாறு ஒழுங்குபடுத்தி முட்டுக்கொடுத்து பழுது பார்த்தாலும் பயன்படாது. தயவு தாட்சண்ணியமின்றி வெட்டித்தள்ளி ஒதுக்கிவிட்டு ஆதி அடிப்படைகளின் மீது நமது தற்கால அவசியத்திற்கும், உபயோகத்திற்கும் ஏற்றதாகச் சாதாரணமான புதுக்கட்டிடம் ஒன்று கட்டுவதே உத்தமம் என்று தோன்று கின்றது என்று எழுதி இருக்கின்றார்.
இன்னும் அநேக பெரியோர்களும் ஆராய்ச்சியாளர் களும் இதே அபிப்பிராயம் கொண்டிருக்கின்றார்கள். இந்நிலையில் குழந்தை மணத்தைத் தடுக்கவும் மக்கள் தெருவில் நடக்கவும், சாமிகளின் பேரால் கோயில்களில் நடக்கும் விபசாரித்தனத்தைத் தடுக்கவும், சிறு குழந்தை களைப் படுக்கை அறையில் தள்ளுவதை ஒழிக்கவும் செய்யப்படும் முயற்சிகளை இம்மாதிரி ஒரு பொய் மதம் தடுப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கும் மக்கள் எந்த விதத்தில் மானமும் வீரமும் யோக்கியமும் உடையவர்கள் என்று சொல்லிக்கொள்ள முடியும்.
எனவே, ஆதிதிராவிட மக்கள் தங்களை எப்படி இந்துக்கள் என்கின்ற பதிப்பில் பதியக்கூடாது என்கின் றார்களோ அதுபோலவே நாமும் சொல்ல வேண்டியவர் களாயிருக்கின்றோம். ஏனெனில், இந்துக்கள் என்கின்ற பதிப்பில் நம்மைப் பதிந்து கொள்ள நாம் சம்மதிப்பதனால் நமக்கு ஆதிதிராவிடர் களை விட கீழான நிலையான சூத்திரன் என்கின்ற பதவிதான் கிடைக்கின்றது.
அதை நீக்கிக் கொள்ள இதுவரை எந்த சீர்திருத்தக்காரரோ, சட்டசபை பிரதி நிதியோ, வேறு எந்த சமுகத் தலைவரோ முயற்சித்த தாகத் தெரியவில்லை. ஆஸ்திகம் போச்சு, கடவுள் போச்சு, மதம் போச்சு, சமயம் போச்சு, புராணம் போச்சு,
கலை போச்சு என்று கூப்பாடு போட்டு கூலிபெற நமது நாட்டில் ஆட்கள் மலிந்து கிடக் கின்றதே யல்லாமல் மானம் போச்சு, மனித உரிமை போச்சு, மிருகத்திலும் கீழாச்சு என்று சொல்லி மனிதத் தன்மைபெற யாரையும் காணோம். எனவே நாமும் ஆதிதிராவிட சகோதரர்கள் போலவே நம்மையும் இந்து என்னும் தளையில் இருந்து பிரித்து விடுஎன்று கேட்கும் நாள் சீக்கிரத்தில் வரும் என்றே கருதுகின்றோம்.


தந்தை பெரியார் பொன்மொழி
தீண்டாமை: இந்து மதத்தின் காரணமாக இந்துக்கள் என்பவர்களுக்குள் மாத்திரம், ஜாதி காரணமாக, மேல்ஜாதி என்பவர்களுக்கும் கீழ்ஜாதி என்பவர்களுக்கும் மாத்திரம் இருந்துவரும் காரியமே தவிர, தீண்டாமை - மதத்திற்கும் ஜாதிக்கும் அப்பாற்பட்டதல்ல.
-விடுதலை,2.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக