வெள்ளி, 16 ஆகஸ்ட், 2019

மக்களினம் மாண்புற வள்ளுவர் தந்த குறள்! (2)

13.11.1948-குடி அரசிலிருந்து...

சென்றவாரத் தொடர்ச்சி

எனவே, தான் மேல் இரண்டு நூல் களில் காணப்படும் அநாகரிகமும், அமானுஷ்யமும் (மனித வல்லமையைக் கடந்த), இயற்கைக்கு மாறான பிறவிகளும் சற்று குறைவாகக் காணப்படுகின்றன. அடிப்படையில், கதைப்போக்கில் கந்தபு ராணமும் ராமாயணமும் ஒன்றாகத்தான் காணப்படுகின்றன.

இப்படியா கடவுள் பேரால்?


கந்தபுராணத்தில் கந்தனும், ராமா யணத்தில் ராமனும் ஆரியத் தலை வர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். இரண்டும் தேவர்கள், அசுரர்கள் என்கிற இரு கட்சிகளை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான் எழுதப்பட்டுள் ளன. ஆனால், கந்தபுராணத்தில் காட்டு மிராண்டித்தனம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது. பெரும் பெரும் புளுகுகளும் அதில்தான் அதிகம் காணப் படுகின்றன. அதில்தான் வைக்கப் புல்லி லிருந்து பட்டாளங்கள் தோன்றியதாகவும், நெற்றியிலிருந்து மனித உருவம் பெற்ற குழந்தை தோன்றியதாகவும் பகிரண்டப் புளுகுகள் எழுதப்பட்டிருக்கின்றன. கடவுள் பேரால் எதை வேண்டுமானாலும் எழுதலாம் என்று தம் இஷ்டம் போல் எதை எதையோ புளுகிவைத்து விட் டார்கள்.

பாரதமோ இன்னும் மோசம், ஒருத் திக்கு 5 புருஷர்கள் இருந்ததாக எழுதி விட்டு, அவளையே பதிவிரதையாகவும் கற்பித்துவிட்டார்கள். அந்த புருஷர்களும் அதாவது பஞ்சபாண்டவர்களும் யார் யாருக்கோ எந்தெந்தவிதமாகவோ பிறந்த தாகத்தான் கதை எழுதப்பட்டிருக்கிறது. அக்கதையில் காணப்படும் குழந்தைகளில் பெரும்பாலான வற்றிற்குத் தகப்பன் மாரைக் கண்டறிவது கஷ்டமாகவே இருக்கிறது. அக்காலத்திய ஆரிய நாகரிகம் அப்படித்தான் இருந்தது போலும்.

கந்தபுராணமும் ராமாயணமும்


கந்தபுராணமும் ராமாயணமும் எப்படி ஒரே அடிப்படைக் கதையை வைத்துக் கொண்டு எழுதப்பட்டவை என்று விளக்கிக் காட்டுகிறேன் பாருங்கள். கந்த புராணத்தில் சுப்பிரமணியன் கடவுளாகவும், ராமாயணத்தில் ராமன் கடவுளின் அம்சமாகவும் குறிக்கப்பட்டி ருக்கிறது. இவர்கள் பெண்டாட்டிமார் இருவருமே காட்டில் கண்டெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டவர்கள். பெற்றோர்கள் யாரென்று தெரிவிக்கப்படாதவர்கள். அனுபவத்திற்கு ஒட்டிப் பார்த்தால் யாரோ திருட்டுத்தனமாகப் பெற்றுப் போட்டுவிட்டுப் போன குழந்தைகள் என்றே கொள்ளத்தக்கவைகள். ராமனும், கந்தனும் இருவருமே தேவர்களின் முறையீட்டால் அவர்களை அசுரர் ராட் சதர்களிடமிருந்து காப்பாற்றுவதற்குத் தோற்றுவிக்கப்பட்டவர்கள். இருவருக் கும் விரோதிகள் சூரனும், ராவணனும் ஆகிய அசுரர்கள்தான். (அசுரர்கள் என்றால் மது அருந்தாதவர்கள், ராவணன் என்றால் கருத்தவன்) இருவருடைய தங்கைமார் இருவருமே மேலே கூறப்பட்டவர்களின் தம்பிமாரால் மூக்கும், முலையும் அறுபடுகிறார்கள். ராமனுக்கு அனுமார் கிடைத்தது போல், கந்தனுக்கும் ஒரு வீரபாகு என்கிறவன் கிடைக்கிறான். இலங்கை எரிக்கப்பட்டது போல், சூரனுடைய நகரமும் எரிக்கப் பட்டிருக்கிறது. சூரன் தேவேந்திரன் மனைவியைச் சிறைபிடிக்க ஆசைப்பட்டு அவன் மகனைச் சிறையில் வைத்தான். ராவணன் ராமன் மனைவியைச் சிறை பிடித்தான். இன்னும் பல நடப்புகள் ஒன்று போலவே பேர்தான் மாறியிருக் கின்றனவே ஒழிய, கதைப்போக்கில் எவ்வித முக்கிய மாறுதலும் காணப்பட வில்லை. கந்தபுராணத்தில் கந்தனை தெய்வமயமாகவே காட்டப்பட்டிருக் கிறது. ராமாயணத்தில் கொஞ்சம் அது குறைவாக்கப்பட்டு, அதாவது ராமன் கடவுள் அவதாரமாக மட்டுமே காட்டப் படுகிறான். சில இழி தன்மையையும் சுமத்தப்படுகிறான்.

ஆண்டவனைப் படைத்ததில் ஆரியரும் வள்ளுவரும்


திருவள்ளுவர் குறளோ ஆரியத்தை, ஆரிய தர்மத்தை அப்படியே மறுக்க எழுதப்பட்ட நூலாகக் காணப்படுகிறது. கடவுள் வாழ்த்தில்கூட வள்ளுவர் ஒழுக் கத்தையும், அறிவையும், பற்றற்ற தன்மை யையும்தான் கடவுளாகக் காட்டியுள்ளார். கடவுளை அறிஞன் என்றார். பிறப்பு, இறப்பு அறுத்தோன் என்கிறார். ஆசை அறுத்தோன் என்கிறார். அவர் ஒரு இடத் திலாவது கடவுளை அயோக்கியனாகவோ, ஒழுக்க ஈனம் உடையவனாகவோ, வஞ்சகனாகவோ, விபசாரியாகவோ சிருஷ்டித் திருக்கவில்லை. ஆரிய நூல்களில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள கடவுள் தன்மையிலுள்ள ஆபாசக் கேட்டிற்கோ அளவு சொல்ல வேண்டியதில்லை. கீதை போற்றும் கிருஷ்ணனைப் போன்ற விப சாரக்காரனை வஞ்சகனை, கீழ்மகன் தன்மையை ஆரியர்கள் தவிர்த்த வேறு யாரும் கடவுளாக, நீதியாக சிருஷ்டித் திருக்க மாட்டார்கள். அவன் ஒரு விபசாரிக்கல்ல, லட்சக்கணக்கான பெண்களைக் கெடுத்து விபசாரிகளுக்கும், குடிப்பெண்களுக்கும் காமுகனாய், காதக னாய் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான். பிறந் தது முதற்கொண்டு சாகும் வரையில் அவன் ஒரு சந்தர்ப்பத்திலாவது ஒழுக் கமாக நடந்து கொண்டிருப்பதாக யாரா லும் காட்ட முடியாது. அவன் நடத்தைகள் லீலைகளாக்கப் பட்டிருக்கின்றன.

விஷ்ணுவின் விரக வெறி!


ராமனை எடுத்துக் கொண்டால் அவன் யாருக்கோ பிறந்ததாகத்தான் காட்டப்பட்டிருக்கிறதே ஒழிய, தசரதனுக்கே பிறந்ததாக இல்லை. அவன் பெண்டாட்டியை இழந்து அலைவதற்குக் கூறப்படும் காரணமோ, அதை விடப் படுமோசம். மகாவிஷ்ணு எந்தப் பெண் மீதோ மோகங்கொண்டாராம்; மோகத் தைத் திருப்தி செய்ய அவள் இடம் கொடுக்கவில்லையாம்.


எனவே, அம்மகாவிஷ்ணு அவளு டைய புருஷன் இறக்கும் தருவாயைப் பார்த்துக் கொண்டேயிருந்து இறந்ததும் அவனுடலில், தான் புகுந்துகொண்டு அப்பெண்டை அடைந்து கூடி இன் புற்றுக் கொண்டிருந்தாராம். அந்தப் பெண் எப்படியோ தன் புருஷனுடைய உயிரல்ல அவ்வுடலில் வேலை செய்வது என்று அறிந்த உடனே உண்மையைக் கேட்டுணர்ந்து, மறு ஜென்மமெடுத்து மகாவிஷ்ணு தன் மனைவியை பிற கையில் விட்டுத் தன்னைப் போல் கற்பும் கெட்டவளாக வேண்டுமென்று சாபம் கொடுத்தாளாம்.                  - தொடரும்


- விடுதலை நாளேடு, 16 .8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக