சனி, 3 ஆகஸ்ட், 2019

கண்ணை மூடிப் பின்பற்றுங்கள்! கருப்புச் சட்டையை எங்கும் பரப்புங்கள்! -II (3)

05.06.1948 - குடிஅரசிலிருந்து.... -

சென்ற வாரத் தொடர்ச்சி

நீங்கள் இன்ப வாழ்வு வாழ.....?

தாய்மார்களே! நீங்கள் எதையும் பகுத்தறிந்து பார்க்கவேண்டும். கல்லை கடவுளென்று நம்புவதையும், பார்ப் பானைக் கடவுள் அவதாரம் என்று நம்பி அவனுக்கு அரிசி பருப்பு அழுவதையும் அறவே விட்டொழிக்க வேண்டும். சாணி மூத்திரத்தைக் கலக்கிக் குடிப்பது மதம் அல்ல. மக்களுக்கு ஒழுக்கத்தைக் கற்பித்துக் கொடுப்பது தான் மதம் என்பதை, மனிதனை மனிதனாக மதித்து நடத்துவதுதான் மதம் என்பதை, நீங்கள் உய்த்துணர வேண்டும். புராண சம்பந்தமான நாடகங்களுக்கோ, சினிமாக்களுக்கோ, புண்ணிய ஷேத்திரங்கள், புண்ணிய தீர்த்தங்கள் என்பனவற்றிற்கோ நீங்கள் கட்டாயம் போகக் கூடாது. இவையாவும் பார்ப்பனர்கள் உங்கள் காசைப் பறித்துச் சுகபோகவாழ்வு வாழ்வதற்கு வகுத்துக் கொண்ட வழிகள். நீங்களும் மேல்நாட்டுப் பெண்களைப் போல் சகல உரிமைகளும் பெற்று இன்ப வாழ்வு வாழ வேண்டும். அதற்கு நீங்கள் ஆண்களைப் போல் படிக்க வேண்டும். உங்களுக்குச் சட் டத்தின் மூலம் பல உரிமைகள், சொத் துரிமை, விவாகரத்துஉரிமை ஆகிய உரிமைகள் வரக் காத்திருக்கின்றன.

அவ்வுரிமைகளை அனுபவிக்க உங்களுக்குக் கல்வியறிவு அவசியமாகும். நகைகளிலோ, சேலைகளிலோ உங்களுக் குள்ள பிரியத்தை ஒழித்து விடுங்கள். இவற்றில் பிரியம் வைத்துக் கொண்டி ருப்பீர்களானால் ஜவுளிக்கடையிலும், நகைக்கடையிலும் சேலை விளம் பரங்களுக்காக, அவ்வப்போது வெவ்வேறு சேலையுடுத்தி, வெவ்வேறு நகை மாட்டி வெளியே நிறுத்தி வைக்கும் வெறும் பொம்மைகளாகத்தான் நீங்கள் ஆக நேரிடும். பழிச்சொல்லுக்காளாகிப் படு மோசம் போகாதீர்!

ஆகவே, அவ்விருப்பங்களை விட்டு கல்வி அறிவில் விருப்பம் கொள்ளுங்கள். வீரத்தாய்மார்களாக ஆக ஆசைப் படுங்கள். உங்கள் நன்மைக்காகத்தான் பெரும்பாலும் திராவிடர் கழகம் இருந்து வருகிறது. நீங்கள் மாறினால் உங்கள் கணவன் மார்கள், மற்ற ஆண்கள் மாற்றம் அடை வது வெகு சுலபம். ஆண்கள் உங்களைத் தான் பிற்போக்காளிகள் என்று உங்கள் மீது பழி சுமத்தி வருகிறார்கள்.

ஏனப்பா, மூடநம்பிக்கைக் கிடமான இக்காரியங் களைச் செய்கிறாய்? என்று ஒரு ஆணைப் பார்த்துக் கேட்டால், நான் என்ன செய்யட்டும்? என் வீட்டில் ஒரு பெரிய சனியன் இருக்கிறது. எல்லாம் அதன் தொல்லைதான் என்று கூறி விடுகிறான். அப்பழிச் சொல்லுக்கு ஆளா காதீர்கள். எதிர்காலத்தில் இவள் இன் னாருடைய மனைவி என்று அழைக்கப் படமாட்டாது.

இவர் இன்னாருடைய புருஷர் என்று அழைக்கப்பட வேண்டும். அந்த நிலைக்கு உங்களைக் கொண்டுவர அனுதினமும் பாடுபட்டு வரும் திராவிடர் கழகத்தை நீங்கள் அனைவரும் ஆதரித்து வர வேண்டும். கடைசியாக உங்களை ஒன்று வேண்டிக் கொள்கிறேன்; உங்களை என்றென்றும் மடமையிலும், அடிமைத் தனத்திலும் ஆழ்த்தி வைக்க நினைக்கும் மதங்களையோ.

மதக் கர்த்தர்களையோ, மகான்களை யோ, ரிஷிகளையோ நம்பி நீங்கள் மோசம் போகாதீர்கள். மனித சக்திக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும் அவன் எவ்வளவுதான் உயர்நிலையிலிருந்தாலும் சரி, அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை உறுதியாக மனதில் வைத்துக் கொள் ளுங்கள். இந்நாட்டில் ஏன் இந்த உலகிலே கூட எத்தனையோ மகான்கள், மகரிஷிகள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் தோன்றியிருக்கிறார்கள் என்றாலும் இதுவரை யாரும் உங்களுடைய இழிவைப் போக்க பாடுபட்டதாகக் காணப்பட வில்லை. ஏசுகிறிஸ்து தோன்றி அன்பு மதத்தைப் போதித்ததாக பைபிள் கூறு கிறது. அவருடைய சிஷ்யர்கள்தான் இன்று அணுகுண்டு உற்பத்திக்கு முக்கிய காரண தராயிருந்து வருகிறார்கள். முகம்மது நபி சிஷ்யர்களும், இந்துமத பாதுகாப்பாளர் களும் இன்று ஒருவரை ஒருவர் கொன்று கொள்கிறார்கள். காந்தி யாரின் அகிம்சை அவரையே கொன்று விட்டது.

கண்ணை மூடிப் பின்பற்றுங்கள்! கருஞ்சட்டையைப் பரப்புங்கள்!!

ஆகவே, இன்றைய மதங்கள் பயனற்ற தாகப் போய் விட்டன; அன்பையும், சத்தியத்தையும், வருணாசிரம தர்ம ஒழிப்பையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு புது மதத்தைக் காந்தியின் பேரால் துவக்குங்கள் என்று என்னால் கூறப்பட்ட ஆலோசனையும் செவிடன் காதில் ஊதிய சங்கொலியாகிவிட்டது.

ஆகவே, தோழர்களே! தாய்மார்களே! நீங்களும் உங்கள் மக்களும் மனிதத் தன்மையோடு வாழ வேண்டுமானால் உங்களுக்குள்ள ஒரே வழி திராவிடர் கழகத்தைக் கண்ணை மூடிக்கொண்டு பின்பற்றி நடந்து வருவதுதான்.

திராவிட நாட்டில் எங்கெங்கும் கருப்புச் சட்டையைப் பரவச் செய்ய வேண்டியதுதான்.

(08.05.1948 அன்று  தூத்துக்குடியில்  நடந்த

திராவிடர் கழக மாகாண மாநாட்டில்

தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு)

 


- விடுதலை நாளேடு, 3.8.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக