சனி, 28 செப்டம்பர், 2019

பெண்கள் விடுதலை

-சித்திரபுத்திரன்

27.09.1947  -குடிஅரசிலிருந்து...

இராஜன்: ஏண்டா, டேய்! இராமா! பெண்கள் விடுதலை, பெண்கள் விடுதலை என்று பேசுகிறார்களே, அதென்ன விடு தலை? எனக்கு ஒன்றும் புரியவில்லையே?

இராமன்: உனக்கெப்படியப்பா புரியும்? உனக்கு கால் டஜன் பெண்டாட்டிகள் இருக்கிறார்கள்; அரை டஜன் வைப் பாட்டிகள் இருக்கிறார்கள். அதோடு நிறையப் பணமும் இருக்கிறது?

இராஜன்: நான் சொல்லுவது உனக்குக் கேலியாக இருக்கிறது. இந்தப் பெண் களிடமிருந்து எனக்கு (ஆண்களுக்கு) விடுதலை கிடைப்பதுதான் பெரிய கஷ்டமாயிருக்கிறது? ஒருத்தி விட்டால் மற்றொருத்தி இழுக்கிறாள். இவர் களைவிட்டு நான் எப்படி விடுதலை அடைகிறது?

இராமன்: சரிதான் இப்போது புரிந்தது. நீ அந்தப் பெண்களிடம் கஷ்டப் படுவதினால் உனக்குத் தான் விடுதலை வேண்டும் என்கிறாய். உனக்கு 9 பெண்கள் எதற்கு? ஒரு பெண் இருந்தால் போதா தோ? ஒரு பெண் 9 கணவனை மணம் செய்து கொண்டும் காதலனாக வைத்துக் கொண்டும் இருந்தால் நீ அந்த ஒன்பதில் ஒருவனாக இருக்க சம்மதிப்பாயா?

இராஜன்: ஒரு பெண்ணுக்கு 9 புருஷன் என்றால் அது என்ன மிருகமா? நாமென்ன மிருக சாதியா? நன்றாய்ச் சொல்லுகின்றாய் நாக்குக் கூசாமல்!

இராமன்: பெண்கள் விடுதலை என் றால் இப்போது உனக்கு அருத்தமாச்சுதா? நீ ஒன்பது பெண்களை வைத்துக் கொண்டு அவர்களுடைய இயற்கை உணர்ச்சிக்கு உன்னை வலிய இழுக்க வேண்டிய மாதிரிக்கு அவர்களை அடைத்து வைக்க லாம். அது மனுஷத்தன்மை என்கிறாய். ஒரு பெண் 9 கணவர்களை வைத்துக் கொண்டிருந்தால் அது மிருகத்தனம் என்கிறாய், இந்தக் கொள்கை போகவேண்டுமென்பதைத்தான் பெண்கள் விடுதலை என்று சொல்லுவது. புரிந்ததா?

இராஜன்: புரிந்தது. நன்றாய்ப் புரிந்தது. நான் அவசரப்பட்டு மிருகத்தன்மை என்று சொல்லிவிட்டேன். ஒரு பெண் ணுக்கு 9 பேர் என்பது இன்றும் தாராள மாய் நடக்கின்றதே. நம்ம தேவதாசிகளைப் பாரேன். நம்ம விலைமாதர்களைப் பாரேன். 9 தானா 90ம், 900மும் கூட இருக்கும் போலிருக்கின்றதே. மக்கள் அங்கு போவதில்லையா? அவர்களை மரியாதை செய்வதில் லையா? அந்தப் பெண்களுக்குச் சுதந்திர மில்லையா? தங்கள் இஷ்டம் போல் பணம் கேட்பதும் தங்கள் இஷ்டம்போல் ஒருவனை  நீ வேண்டாம் வெளியில் போ என்பதும் நாம் தினமும் பார்க்கவில்லையா? ஆகவே அவர் களுக்குச் சுதந்திரமில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்?

இராமன்: பொறு, பொறு, அவசரப் படாதே. சுதந்திரம் இருப்பதாக நீ சொல்லும் பெண்கள் யார் என்பதைத் தெரிந்து கொண்டாயா? தேவதாசிகளுக் கும் விலை மாதர்களுக்கும் சுதந்திரம் இருப்பதாகச் சொன்னாய். நீ சொல் லுகிறபடி பார்த்தால் ஒரு பெண் சுதந்திரமாக இருக்கவேண்டுமானால் ஒன்று தேவதாசியாகப் போய்விட வேண்டும், அல்லது விலைமாதாகப் போய்விட வேண்டும். வெள்ளைத் தமிழில் சொல்ல வேண்டுமானால் தேவடியாளாக அல்லது குச்சுக்காரியாகப் போய்விட வேண்டும் என்கிறாய். ஒருவ னையே கணவனாகக் கொண்டு திருமணம் செய்து வாழ்க்கை நடத்துகிற பெண் களுக்கு விடுதலை என்பது ஒரு ஆளுக்குப் பல பெண்களில் ஒருத்தியாய் இருந்து அடைபட்டுக்கிடக்க வேண்டியதுதான் கடமைபோல் இருக்கிறது?

இராஜன்: ஒரு பெண் தனிமையில் இருந்து வாழ்க்கை நடத்திக் கொள் ளட்டுமே, யார் வேண்டாம் என்கின் றார்கள்? பெண்கள் தாமாகத்தானே யாருக்காவது ஒருவனுக்கு வாழ்க்கைப் படவேண்டும் என்று துடிக்கிறார்கள். அவர்கள் பெற்றோர்களும் வயது வந்துவிட்டதே என்ன செய்வது? யார் தலையிலாவது கட்டிவிடவேண்டுமே, இல்லாவிட்டால் கெட்டபெயர் வந்து விடுமே என்று கவலைப்படுகிறார்கள். அதற்கேற்றபடியே கல்வி இல்லாமலும் தொழில் பழக்காமலும் வளர்க்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்ணைக் கட்டிக் கொள்ள வருபவனும் தனக்கு அடிமை தொழில்செய்ய ஒரு ஜீவன் வேண்டும் என்று கருதியே பெண்ணைத் தேடுகிறான். அதோடு இவள் பெறுகின்ற குழந்தை களுக்கும் இவளுக்கும் வாழ்விற்கு வேண்டியதை எல்லாம் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டு செய்கிறான். இதற்கு மேல் அடிமை புகுந்தவளுக்கு எஜமானன் வேறு என்ன செய்ய முடியும்? தான் தேடிய சொத்துக்களையும் அடிமைபெற்ற குழந்தைகளுக்கே வைத்துவிட்டுப் போ கிறான். இன்னும் என்னதான் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறாய்?

இராமன்: நீ சொல்லுவதைப் பார்த்தால் பெண்களைக் கல்யாணம் செய்துகொள்ள வேண்டாம் என்கிறாய்போல் இருக்கிறது. கல்யாணம் செய்துகொண்டால் அடிமை யாய்த்தான் இருக்க வேண்டும் என்கின் றாயாக்கும்?

இராஜன்: நான் அப்படிச் சொல்ல வில்லை; இயற்கை அது. கொடுப்பவன் கை மேலாகவும், வாங்குபவன் கை கீழாகவும்தான் இருக்கும். கல்யாணம் இல்லாமல் இருந்தால் என்ன முழுகிப் போய் விடும். மலையாளத்தில் சில இராணிகளும் ஜமீன்தாரணிகளும் சம் பளம் கொடுத்து புருஷன்மார்களை வைத்துக்கொண்டு இருக்கிறார்களே, அவர்கள் கவுரவம் குறைந்துபோய் விட்டதா? அல்லது சமுதாயத்தில் குறை கூறுகிறார்களா? அவ்வளவுதூரம் போக உன்னால் முடியாவிட்டால் பெண்களை நன்றாய்ப் படிக்கவைத்து அல்லது ஏதாவது ஒரு தொழிலில் அமர்த்தி, 25 வருடம்வரை கல்யாணப் பேச்சு பேசாமல் 25 முதல் 30 வயதிற்குள் அந்தப் பெண்ணையே தனக்குப் பிடித்த வனை ரிஜிஸ்டர் கல்யாணம் செய்து கொள் ளும்படி செய். வாழ்க்கைக்கு (அன்ன வஸ்திரத்துக்கு) புருஷன் கையை எதிர் பார்க்காமல் செய். அப்போது பெண் விடுதலை வேண்டி இருக்குமா அல்லது ஆண் விடுதலை வேண்டி இருக்குமா? அல்லது இருவரும் தங்களை ஒருவருக் கொருவர் கட்டுப்படுத்திக் கொள்வார் களா என்று பார்!

 - விடுதலை நாளேடு, 28 .9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக