புதன், 4 செப்டம்பர், 2019

ஹிந்து மதப் போக்கு கடவுள்களுக்கு மனைவிகள் ஏன்? ஆலயங்கள் ஏன்? நகைகள் ஏன்?

நாமக்கல் கூட்டத்தில் ஈ.வெ.ரா. பேச்சு


(வாசக நேயர்களே,


ஊன்றிப் படித்துப் பயன்பெற வேண்டிய முக்கியப் பகுதி இது.


இதுபற்றி தங்களது கருத்தினை சுருக்கமாக எழுதி அனுப்புமாறு வேண்டுகிறோம்.


திராவிடர் இயக்கம் - 80 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ்நாடு அரசியல் களத்தின் முக்கிய நிகழ்வுகள் - வரலாறு பற்றிய காலக்கண்ணாடியாக - திராவிடத்தின் தேவைக்கான நுண்ணாடியாக இது அமையும் ஒன்று. இதற்கான தேவை - பயன் - நுகர்வு பற்றிய உங்கள் கருத்துக்கள் பெரிதும் வரவேற்கப்படுகிறது. - ஆசிரியர்)


நமது கடவுள்கள்

இந்த விஞ்ஞானப் பெருக்கமுள்ள நாளில் நாம் இன்னமும் கடவுள்களைப் பற்றியும் அவைகளின் திருவிளையாடல் களைப் பற்றியும் பேசிக்கொண்டிருப்பது உண்மையிலேயே ஒரு காட்டு மிராண்டித்தனமேயாகும் என்றாலும் நமது எதிரிகள் நம்மீது வேறு எவ்வித குற்றமும் சுமத்த யோக்கியதையற்றுப் போனதால் நம்மை நாஸ்திகர்கள் என்று விஷமத்தனமாய் கெட்ட எண்ணத்துடன் பிரசாரம் செய்து வருவதால் அதைப் பற்றியும் பேசியாக வேண்டியிருக்கிறது.

கடவுள் தன்மை

கடவுள்களைப் பற்றிய அபிப்பிராயத்தில் பழையகால அதாவது காட்டு மனிதன் காலத்தைவிட கிறிஸ்தவர்களில் ஒரு சாராரும் முகமதியர்களும் எவ்வளவோ சீர்திருத்தத்திற்கு வந்து விட்டார்கள். அவர்கள் ஒரே ஒரு கடவுள்தான் இருக்க முடியும் என்றும், அக்கடவுள் வாக்குக்கும் மனதுக்கும் எட்டாதது என்றும் அது பெயரும் குணமும் உருவமும் இணையும் இல்லாதது என்றும் மனிதரில் நன்மையான காரியங்கள் செய்தவர்களுக்கு நன்மையும், தீமையான காரியம் செய்தவர்களுக்கு தீமையும் அளிக்கக்கூடியது என்றும் சொல்லி குணம் கற்பிக்கிறார்கள். அப்படிப்பட்ட கடவுளைப்பற்றி இப்பொழுது நாம் விவகாரம் பேசவேண்டிய அவசியம் இல்லை. இக்கருத்துடன் உணர்ந் திருக்கும் கடவுளால் மனிதன் தீமை செய்யப் பயப்படுவான் என்றும் நன்மை செய்ய ஆசைப்படுவான் என்றும் அது சமுதாய வாழ்விற்கு மிக்க பயனளிக்கும் என்றும் பல அறிஞர்களும் அதை ஒப்புக்கொண்டு காரணம் சொல்லுகிறார்கள். ஆகையால் இன்றைய தினம் இந்துக்கள் என்பார்களுடைய சிறப்பாக பார்ப்பனர்களால் கற்பிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கடவுள்களை எடுத்துக் கொள்ளுவோம். இந்துக்களுக்கு இத்தனை கடவுள்கள் ஏன்? அவை எப்படி வந்தன? பல்லாயிரக் கடவுள்கள் தவிர மற்றும் என்னவெல்லாம் கடவுள்களாகி இருக்கின்றன பாருங்கள். மாட்டு மலம் முதல் மாடு, குதிரை, எருமை, குரங்கு, பெருச்சாளி, கழுகு, காக்காய், பாம்பு, மரம், செடி, கல், மண், உலோகம், காகிதம் முதலிய வைகளும் மற்றும் பல ஆபாச உருவங்களும் கடவுளாக வணங்கப்படுகின்றன. காசியில் ஒரு கோவிலில் 2 உயிருள்ள நாய்கள் படுத்திருக்கின்றன. அவைகளுக்கும் பூசை போட்டு வணங்குவதை நேரில் பார்த்தேன். இப்படிச் செய்வதற்கு பண்டிதர்களால் தத்துவார்த்தம் சொல்லப்படுகிறது. இவ்வள வோடு இல்லாமல் இக்கடவுள்களுக்கு பெண்டு பிள்ளைகள் வைப்பாட்டி, தாசி விபசாரித்தனம், ஆகாரம், உறக்கம், புணர்ச்சி முதலியவைகளும் கற்பிக்கப்படுகின்றன. மற்றும் இக்கடவுள்களுக்கு கல்யாணம், சாவு முதலியனவும் கூட கற்பிக்கப்படுகின்றன.

திருவிழா ஆபாசம்

கற்பிக்கப்படுவதோடு தொலைந்து போனாலும் பரவாயில்லை. செய்கையில் செய்து காட்டி அதாவது கடவுள் விபசாரிதனம் செய்வதாகவும், தாசிவீட்டுக்குப் போவதாகவும் மற்றவர்கள் வீட்டுப் பெண்களை அடித்துக் கொண்டு போவ தாகவும் உற்சவங்கள் செய்துகாட்டி அவைகளுக்காக பல கோடிக்கணக்கான ரூபாய்களும் மனிதனின் விலை உயர்ந்த நேரமும் ஊக்கமும் உணர்ச்சியும் பாழாக்கப்படுகின்றன. இக்காரியங்கள் இந்த 20ஆவது நூற்றாண்டில் செய்யக் கூடியதா என்பதை யோசித்துப் பாருங்கள். இம்மாதிரி கடவுள்களை கற்பித்துக்கொண்டு அவைகள் மேல்கண்ட மாதிரியான காரியங்கள் செய்ததாக புராணங்களையும் இதிகாசங்களையும் கற்பித்துக் கொண்டு அக்காரியங்களை நாமும் கடவுள்கள் பேரால் செய்து கொண்டு திரிவது பற்றி மனிதனுக்கு வெட்கம் வரவேண்டாமா என்று கேட்கின்றேன். இதைச் சொன்னால் எங்களை நாஸ்திகர்கள் என்று சொல்லுவது யோக்கியமும் நாணயமுமான பேச்சாகுமா என்று கேட்கின்றேன். கடவுள் இருந்தால் இப்படித்தான் இருக்க வேண்டுமா? இப்படி இருப்பதை கடவுள் என்று அறிவுடையவன் ஒப்புக் கொள்வானா? இன்று நாம் இம்மாதிரி கடவுள்களுக்காக செய்கிற பூஜையும், படையல்களும், கல்யாணம் முதலிய உற்சவங்களும் கடவுளுக்கு எதற்கு? எந்தக்கடவுளாவது ஏற்றுக்கொள்கிறதா? கடவுள்களை பொம்மைகள் மாதிரி வைத்து வருஷா வருஷமும் சில கடவுள்களுக்கு வருஷத்தில் இரண்டு தரம் 3 தரமும் கல்யாணங்கள் செய்கின்றோமே அவை எதற்கு? சாமிக்கு உண்மையிலேயே பெண்ஜாதி வேண்டியிருந்தால் போன வருஷம் செய்த கல்யாணம் என்ன ஆயிற்று? என்று கேட்க வேண்டாமா? விவாக விடுதலை ஆகிவிட்டதா? அல்லது தள்ளி வைக்கப்பட்டு விட்டதா? அல்லது ஓடிப்போய்விட்டதா? அல்லது முடிவெய்தி விட்டதா? என்று கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? எதற்காக வருஷா வருஷம் கல்யாணம்? அக் கல்யாணத்துக்கு கொட்டு முழக்கு ஆடம்பரம், பணச்செலவு ஏன்? சாமி கல்யாண சமாராதனை சாப்பாட்டை எந்த ஜாதியார் சாப்பிடுகிறார்கள் தெரியுமா? கண்டபடி பதார்த்தங்களை பாழாக்குவதேன்? இந்தப்படி வருஷம் எத்தனை உற்சவம் ? எங்கெங்கு உற்சவம்? இவைகளால் இதுவரை அடைந்த பலன் என்ன? நம் மக்கள் படிப்பு விஷயத்தில் 100க்கு 95 பேர்கள் தற்குறி, நமது உலகத் திலேயே மிக்க ஏழ்மை நாடு என்கின்றோம். ஒரு மனிதனுக்கு தினம் சராசரி 2 அணா படி கூட இல்லை என்று சொல்லு கிறோம். இப்படிப்பட்ட நாம் கடவுள்களுக்கு என்று எவ்வளவு செல்வங்களை பாழாக்குகிறோம் என்று யோசிக்கின்றோமா?

படையல் யார் வயிற்றில் போகிறது?

ஒரு கடவுளுக்கு தினம் எத்தனை தடவை பூஜை படையல்? ஒவ்வொரு பூஜை படையலுக்கு எத்தனை படி அரிசி பருப்பு சாமான்கள் ? இவைகள் எல்லாம் யார் வயிற்றில் அறுத்து வைக்கப்படுகின்றன? மக்களுக்கு கல்வி இல்லை, தொழில் இல்லை, சாப்பாடு இல்லை என்று புறம் சொல்லிக் கொண்டு, மற்றொரு புறம் இம்மாதிரி செல்வம் பாழாக்கப் படுவதென்றால் யோக்கியன் எப்படி சகித்திருக்க முடியும்? தயவு செய்து நீங்களே யோசித்துப் பாருங்கள். வைகுண்ட ஏகாதசிக்கும் ஆருத்திரா தரிசனத்துக்கும் தை பூசத்துக்கும் கார்த்திகை தீபத்துக்கும் திருப்பதிக் குடைக்கும் திருச்செந்தூர், ராமேஸ்வர ஸ்நானத்துக்கும் என்று வருஷாவருஷம் எத்தனை கோடி ரூபாய் பாழாகிறது? மக்கள் போக்குவரத்து செலவு, மெனக்கேடு செலவு, உடல் கேடு, ஒழுக்கக்கேடு ஆகிய காரியம் எல்லாம் சேர்த்துப் பார்த்தால் இக்கடவுள் களால் மக்களுக்கு நன்மையா? தீமையா? என்று கேட் கின்றேன். இச்செலவுகளைத் தடுத்து அச்செல்வங்களை வேறு வழிக்கு பயன்படுத்த முயற்சி செய்தால் வரியே இல்லாமல் அரசாங்கத்தை நடத்தக் கூடிய பணம் மீதியாகாதா? நம் நாட்டில் கடவுள்களுக்கு இருக்கும் செல்வங்களை கைப்பற்றி தொழில் சாலைகள் பள்ளிக் கூடங்கள் ஏற்படுத்தினால் வேலை இல்லாத் திண்டாட்டமும் தற்குறித் தன்மையும் அந்நிய நாட்டார் வியாபாரத்தின் பேரால் சுரண்டு தலும் இந்நாட்டில் அரை நிமிஷமாவது இருக்க முடியுமா? என்று கேட்கின்றேன். ஏதோ ஒரு கூட்டம் சோம்பேறியாய் இருந்து வயிறு வளர்க்க வேண்டி மற்ற மக்கள் தாங்கள் பாடுபட்டு தேடிய செல்வத்தை பாழாக்கி இவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுவதா? என்று கேட்கின்றேன்.

மற்றும் கடவுள் பேரைச் சொல்லிக்கொண்டு பக்தியின் காரணம் காட்டிக்கொண்டு எவ்வளவு முட்டாள் தனமாய் நடந்து கொள்ளுகிறோம் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். காவடி எடுத்துக்கொண்டு கூத்தாடுவதும், மஞ்சள் துணி கட்டிக்கொண்டு வீதியில் கிடந்து புரளுவதும் மொட்டை அடித்துக்கொள்ளுவதும், பட்டை பட்டையாய் மண்ணையும் சாம்பலையும் அடித்துக் கொள்ளுவதும், உடம்பில் கம்பிகளையும் கத்திகளையும் குத்திக் கொள்ளு வதும் அழுக்குத் தண்ணீரில் குளிப்பதும் ஆனகாரியங்கள் எதற்கு என்று சிந்திக்கிறோமா?

கோவில்கள் எதற்கு?

மற்றும் மக்கள் சாப்பிடக்கூடிய பால், நெய், தயிர், தேன், பழச்சத்து முதலியவைகளை கல்லின் தலையில் குடம் குடமாய் கொட்டி சாக்கடைக்குப் போகும்படி செய்து வேடிக்கை பார்ப்பது எதற்கு? இந்தச் சாமிகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் பெறும்படியான நகைகள் எதற்கு? பட்டு பீதாம்பர துணிகள் எதற்கு ? லக்ஷம் 10 லக்ஷம் கோடி பெறும்படியான ஆறு மதில் ஏழு மதில்கள் உள்ள பெரும் மதில்கள் கட்டிடங்கள் கோபுரங்கள் எதற்கு? தங்கம் வெள்ளி வாகனங்கள் எதற்கு? இவைகள் எல்லாம் நாட்டு பொது செல்வங்கள் அல்லவா? இவைகளை கல்லுகளுக்கு அழுது விட்டு சோம்பேறி சூழ்ச்சிக்கான பார்ப்பன வயிற்றை நிரப்பி அவன் மக்களை அய்.சி.எஸ்., ஹைகோர்ட் ஜட்ஜ் திவான் களாக ஆக்கி விட்டு இதுதான் கடவுள் தொண்டு என்றால் இந்தக் கடவுள்கள் இருக்க வேண்டுமா? என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட கடவுள்களையும் கடவுள் தொண்டு களையும் முஸ்லீம்கள் ஒப்புக் கொள்ளு கிறார்களா? கிறிஸ்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா? அல்லது இந்து பகுத்தறிவுவாதிகளாவது ஒப்புக் கொள்ளு கிறார்களா? என்று கேட்கிறேன்.

உண்மை பேசுகிறவன் நாஸ்திகனா?

இனி எப்பொழுது தான் நமக்கு புத்தி வருவது. இதைச் சொன்னால் பார்ப்பான் நம்மை நாஸ்திகன் என்கிறான். அவன் பேச்சையும் அவனது எச்சிலைத் தின்று வயிறு வளர்க்கும் கூலிகள் பேச்சையும் கேட்டுக்கொண்டு முட்டாள் ஜனங்கள் மதம் போச்சு, கடவுள் போச்சு என்று கூப்பாடு போடு கிறார்கள். அப்படியானால் இந்த கடவுள்களை ஒப்புக் கொண்டு இம்மாதிரி காட்டுமிராண்டித்தனமாய் கூத்தாடுவது தானா ஆஸ்திகம்? இல்லாவிட்டால் நாஸ்திகரா? அப்படி யானால் அப்படிப்பட்ட நாஸ்திகத்தைப் பற்றி எங்களுக்கு சிறிதும் கவலையில்லை. அந்தப் பூச்சாண்டிக்கு நாங்கள் பயப்படமாட்டோம். ஏதோ எங்களுக்கு தோன்றியதை - நாங்கள் சரி என்று நம்புவதை அதாவது நம் நாட்டுக்கு மேற்கூறிய மதமும் கடவுள்களும் கொடிய வியாதியாய் இருக்கின்றனவென்றும் இவை ஒழிந்தாலொழிய நாடும் மனித சமூகமும் அறிவும் ஆற்றலும் முற்போக்கடையாது என்றும் கருதுவதை உங்களிடம் விண்ணப் பித்துக்கொள்ளு கிறோம். பொறுமையாய் கேட்டு பிறகு உங்கள் இஷ்டப்படி நடவுங்கள் என்று தான் சொல்லுகிறோமே ஒழிய பார்ப்பனர்கள் போல் நாங்கள் சொல்வதை எல்லாம் நம்புங்கள் என்றோ நம்பினால்தான் மோக்ஷம். நம்பாவிட்டால் நரகம் என்றோ சொல்லுவதில்லை என்பதாக பேசிவிட்டு காங்கிரஸ் அரசியல் திருவிளையாடல்களைப்பற்றி பேசினார்.

- விடுதலை 18.12.1937

- விடுதலை நாளேடு, 16. 8 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக