செவ்வாய், 24 செப்டம்பர், 2019

இது போதுமா? (அன்றைய வளர்ச்சியும் இன்றைய முடக்கமும்)



02.12.1944 - குடிஅரசிலிருந்து...

திராவிட நாடு இன்றிருப்பது போல் உலகில் வேறு எந்த நாடும் இருப்பதைப் பார்க்க முடியாது. இந்நாட்டு மக்கள் அரசியலிலும், சமுதாயத்திலும், பொருளாதாரத்திலும் அடிமைப்படுத்தப்பட்டுச் சுரண்டப்படுவதைப் போல் வேறு எந்த நாட்டிலும் பார்க்கவே முடியாது. உலகில் எங்காவது இந்தியன் என்ற பெயரால் யாராவது இருப்பார்களேயானாலும் அதிலும் கூலி வேலை செய்து வாழ்கிறவர்களாய் இருப்பார்களேயானாலும் அவர்கள் திராவிடர்களைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது. உலகம் போற்றும்படி இருந்த நாடு இவ்வுபகண்டத்திலும் வடநாட்டு மன்ன ரையும் ஒரு காலத்தில் பணிய வைத்த நாடு இன்று உலகத்தவராலும், வடநாட்டாராலும் இழிவுபடுத்தப்படும் நிலையில் இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் என்ன? இந்நாட்டின் பழங்கால சரித்திரத்தையும் இன்றைய சரித்திரத்தையும் ஆராய்ந்து பார்ப்பவர்களால் ஆரியம் இந்நாட்டில் புகுந்ததுதான் உண்மையிலேயே உணர்ந்து கொள்ளாமல் இருக்க முடியாது. என்று ஆரியம் இந்நாட்டில் புகுந்ததோ அன்று தொட்டே, திராவிட மக்கள் வீரம் இழந்தனர்; பண்பு குன்றினர்; கோழை களாயினர்; மவுடீகர்களாயினர். தன்னுணர்வு அற்ற நடைப் பிணங்களாயினர். இவ்வாறு வீரம் நிறைந்த நாட்டு மக்களை நடைப் பிணங்களாக்கியதினால், நம் திராவிட மக்கள் எடுப்பார் கைப்பிள்ளைகளாய் குரங்காட்டி யின் கையில் சிக்கிய குரங்கைப்போல் ஆடி வருகிறார்கள். இவர்கள் நிலை இவ்வாறு இருக்க, ஆரியர்கள் நிலை - வடநாட்டார் நிலையோவெனில், மதத்தின் பேராலும், சமயத்தின் பேராலும், அரசியலின் பேராலும் நம்மை சுரண்டி வருவதோடு நிற்காமல் பொருளாதாரத் துறையிலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்தியும் சுரண்டிக் கொண்டும் வருகிறார்கள். ஆனால் நம்மவர்கள் அவர்கள் ஆதிக்கத்திற்குக் கண்ணை மூடிக்கொண்டு இடங்கொடுத்துக் கொண்டும், குடி இருக்க இடமில்லையென்றாலும், வாழ இடமில்லை யென்றாலும் நாட்டைவிட்டு வெளியேறி யாவது அட்டைக் கடிக்கும், மூட்டைக் கடிக்கும், பாம்புக் கடிக்கும் உள்ளாகிக் கஷ்டப்பட்டு மாண்டு மடிகிறார்கள். இவர்கள் உழைப்பால் வேறு நாட்டார்கள் லட்சக் கணக்கில் பொருள் சம்பாதித்து, நம்மவர் களையே இழிவுபடுத்தி வருகிறார்கள். இந்நிலையைக் காணும் உண் மைத் திராவிட இரத்தம் ஓடும் எவர் மனம்தான் பற்றி எரியாமல் இருக்கும்?

மற்றும் 1.12.1944ஆம் தேதி சுதேசமித்திரன் பத்திரிகையில் மடகாஸ்கரிலிருந்து 9 இந்தியர் பிரஷ்டம் என்ற தலைப்பில்,

தென்னாப்பிரிக்காவுக்குச் சமீபத்திலுள்ள மடகாஸ்கர் தீவிலிருந்த 9 இந்தியர்களை பிரெஞ்சு அதிகாரிகள் பிரஷ்டம் செய்து இந்தியாவுக்குச் செல்லும்படி ஆக்ஞையிட் டனர்... இவர்கள் மடகாஸ்கரில் மனைவி மக்களைவிட்டு வெளியேறினர். எல்லோரும் கூட மடகாஸ்கரில் பல வருஷங்களுக்கு முன்பு குடியேறியனவர்கள். இவர்களுக்கு இந்தி யாவில் சமுகத் தொடர்பு எதுவும் இல்லை என்று காணப்படுவதைப் பார்ப்பவர் எவரால்தான் இந்நிலைமையைப் போக்க வழி தேடாது சகித்துக் கொண்டிருக்க முடியும்; எவர் மனம்தான் மாறாமல் இருக்கும்?

எனவேதான், நம் தலைவர் பெரியார்

ஈ.வெ.ரா. அவர்கள் திராவிட நாடெங்கும் இத்தள்ளாத வயதிலும், தளர்ந்த உடலுடன், தன் உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் நாடு நாடாக சுற்றித் திரிந்து திராவிட முழக்கம் செய்து வருகிறார். ஏன் பெரியார் அவர்கள் இவ்வாறு சுற்றித் திரியவேண்டும்?எதற்காகப் பாடுபடுகிறார்? என்பதை திராவிடர் ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்றுள்ள திராவிடரின் நிலை, இழிந்த நிலை மாற வேண்டுமானால், திராவிட நாடு தனியாகப் பிரிந்தாக வேண்டும். திராவிட நாடு பிரிந்தால்தான், திராவிட மக்களும் உலகில் உள்ள இதர நாட்டு மக்களைப்போல் தலை நிமிர்ந்து நிற்க முடியும். இந்தியா என்ற பெயரால் இவ்வுபகண்டத்திற்கு சுதந்திரம் வந்தாலும் விடுதலை ஏற்பட்டாலும், நம் திராவிட நாட்டின் நிலைமை ஒரு அங்குல மாவது முன்னேற முடியுமா? என்று கேட் கின்றோம். எந்த வகையில், இன்றுள்ள சமுதாய இழிவு போகும்? பொருளாதார ஆதிக்கம் ஒழியும்? என்று கேட்கின்றோம். பிரிட்டிஷார் சில காலம் அரசியலிலே ஆதிக்கம் செலுத்தி வந்ததற்கு பதிலாக வடநாட்டார் - ஆரியர், ஆதிக்கம் செலுத்தி வருவார்கள். இதைத்தவிர வேறு என்ன மாற்றம் ஏற்பட முடியும் என்பதை எண்ணிப் பாருங்கள். திராவிட நாட்டுப் பிரிவினை என்றால் என்ன? என்று கேட்பவர்கள் சென்னையில் சென்ற மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பெரியார் ஈவெ.ரா. அவர்கள் பேசியி ருக்கும் பேச்சை தயவு செய்து ஒரு முறைக்கு மூன்று முறை படித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறோம். (அப்பேச்சு இவ்வார இதழின் முதல் பக்கத்தில் வெளிவருகிறது).

நாம் கோரும் திராவிட நாட்டின் விஸ்தீர ணம் என்ன? திராவிட நாட்டுக்கும், இதர நாடுகளுக்கும் உள்ள தொடர்பு என்ன? முஸ்லிம்கள், ஆதி திராவிடர்கள், கிறிஸ்துவர்கள், ஆகியவர்கள் நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் நன்கு விளக்கியிருக்கிறார்கள். ஆகவே, இனியாவது, திராவிட நாட்டுப் பிரிவினையென்றால், வீண் விதண்டாவாதம் பேசாமல், பிரிவினைப் போரில் சேர்ந்து போராட முன்வருவார்கள் என்று எதிர்பார்க் கிறோம். இதற்காக இதுவரை, திராவிடர் கழகத்திற்குச் சேர்ந்திருக்கும் அங்கத்தினர்களின் தொகையை எண்ணிப் பார்த்தால், நமது லட்சியம் அவ்வளவு அண்மையில் கைகூடுமா என்று அய்யுற வேண்டியிருக்கிறது.

ஏனெனில் இதுவரை, சுமார் 14,500 அங்கத்தினர்கள்தான் சேர்ந்திருக்கின்றனர். அதிலும் தஞ்சை, சேலம், திருச்சி, ஆகிய ஜில்லாக்களில் 2000-க்கு மேலும், கோவை தென் ஆர்க்காடு, சென்னை ஆகிய ஜில்லாக்களில் 1000-க்கு மேலும் சேர்த்திருக்கின்றனர். இதர ஜில்லாக்களில் உள்ளவர் உறக்கத்தில் இருப் பது நியாயமா என்று எண்ணிப் பாருங்கள். பெரியார் அவர்களுக்கு உண்மையிலே மன ஆறுதல் ஏற்பட வேண்டுமென்றால் ஒரு லட்சத்திற்கும் குறையாத அங்கத்தினர்களாவது சேர வேண்டாமா எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக திராவிடர் கழகத்தில் உறுப்பினர் சேருகிறார்களோ அவ்வளவுக்கவ்வளவு திராவிட நாட்டுப் பிரிவினை கோரிக்கைக்குப் பலம் அளித்ததாக ஆகும். எனவே இனியாவது ஆங்காங்குள்ள தோழர்கள் ஆயிரக்கணக்கில் அங்கத்தினர்களைச் சேர்த்து நமது பெரியார் அவர்களுக்கு ஊக்கமளிப்பார்களாக.

- விடுதலை நாளேடு, 14 .9 .19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக