சனி, 14 செப்டம்பர், 2019

கடவுள் மறுப்புத் தத்துவம் : ஒரு விளக்கம்!

* தந்தை பெரியார்


நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்?


II




"கடவுளைப் பரப்புகிறவன் அயோக்கியன் என்பதற்கு இவ்விளக்கம் எழுதப்படுகிறது.

கடவுளைப் பரப்புகிறவன் எவனுமே 'கடவுள் தத்துவத்திற்கு' ஏற்பக் கடவுளைக் கற்பித்துக் கொண்டு பரப்புகிறவன், அல்லது பிரசாரம் செய்பவன், அல்லது கற்பித்துக் கொள்பவன், அல்லது கடவுளுக்காகவென்று கதைகள் புரா ணங்கள், இதிகாசங்கள், இலக்கியங்கள் எழுதி னவன்கள் மற்றும் அதற்கு ஆகக் கோவில்கள் கட்டி அவற்றுள் உருவங்கள் வைத்தவன்கள், கடவுளுக்காகவென்று பூசைகள், உற்சவங்கள், பண்டிகைகள் முதலியவைகளை நடத்துகிற வன்கள் செய்கின்றவன்கள் யாவருமே நாண யத்தையோ, யோக்கியத்தையோ, ஒழுக்கத் தையோ ஆதாரமாக வைத்துக் கடவுளைப் பரப்பு வதில்லை, நடத்துவது இல்லை .

"கடவுளுக்கு உருவமில்லை, குணமில்லை" என்று ஆரம்பித்துக் "கடவுள் சர்வ வல்லமை யுடையவர், சர்வத்தையும் அறியக் கூடிய சக்தி (சர்வஞ்ஞத்துவம்) கொண்டவர் கருணையே வடிவானவர்" "அன்பு மயமானவர்" 'அவரின்றி அணுவும் அசையாது' என்பன போன்ற கடவுளின் எல்லாக் குணங்களையும், சக்திகளையும், தன்மை களையும் அடுக்கடுக்காகக் கடவுளுக்குக் கற்பித்து மக்களை 'நம்பச் செய்துவிட்டு, இந்தக் குணங் களுக்கும், தன்மைக்கும் மாறான குணங்களை, தன்மைகளை அதற்கு ஏற்றி அதற்காகக் கோவில்கள் கட்டியும், உருவங்கள் உண்டாக்கி வைத்தும், நடவடிக்கைகளை ஏற்றியும், அவைகளை ஆதாரமாய்க் கொண்டு பூசை, உற்சவம், பண்டிகை முதலியவைகளைக் கொண்டாடச் செய்வதன் மூலம் கடவுளைப் பரப்புவதென்றால் இக்காரிய முயற்சியில் ஈடுபட்ட மக்கள் அயோக்கியர்களா அல்லவா என்று சிந்தித்துப் பார்க்கும்படி கேட்கிறேன்.

இக்கூட்டத்தார் மக்களை ஏய்க்கவல்லாமல் வேறு எக்காரியத்திற்காக இக்காரியங்களில் ஈடுபடுகிறார்கள், ஈடுபட வேண்டியவர்களா னார்கள் என்று சொல்ல முடியுமா?

இவர்கள் தங்கள் சுயநலத்திற்காக, தங்கள் பிழைப்பிற்காக இக்காரியங்களைச் செய்யும் அயோக்கியர்களாக முட்டாள்களாக இருந்து வருகிறார்கள் என்பதல்லாமல் வேறு கருத்து, காரணம் என்ன சொல்ல முடியும்?

இன்று இந்தப்படியான அயோக்கியர்களால் பரப்பப்பட்டிருக்கும் எந்தக் கடவுளை எடுத்துக் கொண்டாலும் அதற்கு வீடு, உணவு, பெண்டாட்டி, வைப்பாட்டி, குழந்தை குட்டிகள், நகைகள், சொத்துக்கள், கல்யாணம், உற்சவம், ஊர்வலம் முதலியவை செய்து கூட்டத்தை கூட்டி ஆயிரம், பல ஆயிரம், இலட்சம், பல லட்சம் ரூபாய்கள் செலவு ஏற்படும்படியும் அது போலவே மக்க ளுக்கும் நாள் கணக்கில் மெனக்கேடு ஏற்படும் படியும் செய்வதோடு கோடிக்கணக்கான மக்களை இழிசாதி மக்கள்களாகவும், இருக்கும்படி செய் கின்றனர். "அன்பும் கருணையும், ஒழுக்கமும் உள்ள கடவுள்கள்"  யுத்தம் செய்ததாகவும் கோடிக் கணக்கான மக்களை, ஆண்களை, பெண்களைக் கொன்று குவித்ததாகவும், வெட்டி வீழ்த்திச் சித்திரவதை செய்து நாசமாக்கியதாகவும், விப சாரம் செய்ததாகவும், நடப்பில் நடத்திக்காட்டிப் பரப்புவதென்றால் இப்படிப் பரப்புகிறவர்கள் அயோக்கியர்களா அல்லவா என்று மறுபடியும் கேட்பதோடு இதற்கு இரையாகிறவர்களை முட்டாள்களாக மானமற்றவர்களாக ஆக்கு கிறார்கள் அல்ல வா என்று திரும்பவும் கேட்கிறேன்.

இப்படிக் கடவுளைப் பரப்பும் அயோக்கியர் களால் எத்தனை எத்தனை கோடி மக்கள் மடையர் களாகிறார்கள் என்பதை அறிவாளிகள் முதலில் சிந்திக்க வேண்டும்.

சாதாரணமாக இந்தியாவை எடுத்துக் கொண்டால், சிறப்பாக இந்துக்களை எடுத்துக் கொண்டால் சுமார் 40 கோடி மக்களும் இந்த விஞ்ஞான காலத்தில் டாக்டர், எம்.ஏ., பி.ஏ., ((Doctor, M.A.,  B.A.,) படித்த மக்களும், புலவர்கள், வித்வான் கள், மகா மேதாவிகள் என்று கூறப்படும், கூறிக்கொள்ளும் மக்களும் இக்காரியங்களில் பரம் முட்டாள்களாக இருப்பதற்குக் கடவுளைப் பரப்பினவர்களும், பரப்பி வருபவர்களும் இப்படிப்பட்ட கடவுள் கதை எழுதினவர்களும் இந்தக் கடவுள்களுக்குக் கோவில் கட்டி உருவம், உற்சவம், நடப்பு, தேர், திருவிழா நடத்தும் அயோக்கியர்களுமல்லாமல் வேறு யாராய் இருக்க முடியும்?

இந்த மடையர்கள் எவ்வளவு துணிவோடு ஆண் பெண் கடவுள்களைக் கற்பித்து அவற்றிற்கு விபசாரத் தன்மைகளை (ஒழுக்க ஈனங்களை)க் கற்பித்துப் பரப்புகிறார்கள்! என்றால் இவர்களை எத்தனை முறை அயோக்கியர்கள் என்று கூற வேண்டும்! என்பதை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ள விட்டு விடுகிறேன்.

இப்படி நான் எழுதுவதில் "சிலர் மனம் புண்படாதா?" என்று கேட்கலாம். அயோக்கியர்கள் மனம், மடையர்கள் மனம் புண்படுமே என்று பார்த்தால் ஒரு சிலரால் முட்டாள்களாக ஆக்கப் பட்ட கோடிக் கணக்கான மக்களை அறிவாளிகளாக ஆக்க வேறு வழி யாராவது சொல்லட்டுமே. பார்க்கலாம்!

"கோவில்கள் கள்ளர் குகை" என்று கூறிய கிறிஸ்து கொல்லப்பட்டாலும் இன்று அவரை நூற்றுக் கணக்கான கோடி மக்கள் கடவுளுக்கு மேலாகக் கருதுகிறார்கள்.

'கடவுளுக்கு உருவம் கற்பித்து வணங்கு கிறவர்கள் முட்டாள்கள், மடையர்கள்' என்று கூறிய முகம்மது நபியைச் சிலர் துன்புறுத்தினார்கள் என்றாலும் இன்று அவரைப் பல பத்துகோடி மக்கள் கடவுளைவிட மேலாகக் கருதுகிறார்கள், இவ்வளவு ஏன்?

நம் கண் முன்னால் "கோவில்கள் குச்சுக்காரிகள் விடுதி" என்று கூறிய காந்தியை இன்று பார்ப்பனர் உட்பட ஏராளமான மக்கள் மகாத்மா என்கிறார்கள்.

உயிருக்குத் துணிந்து உண்மையை எடுத்துக் கூற மக்கள் இல்லாததால் இன்று நம் நாட்டில் இவ்வளவு முட்டாள்களும், அயோக் கியர்களும், காட்டு மிராண்டிகளும் தோன்றி இந்த விஞ்ஞான காலத்திலும் இருந்து வர இடம் ஏற்பட்டதே தவிர வேறு காரணம் என்ன? சிந்தியுங்கள், மற்றும் இந்தப்படியான நம்மை உலகம் - அறிவுலகம் எப்படிப்பட்டவர்கள் என்று கருதும் என்பதையும் சிந்தியுங்கள்.

எவ்வளவோ பொறுமைக்கு மேல் தான் இந்த விளக்கத்திற்கு வந்திருக்கிறேன்.

- ஈ.வெ.ரா - 'உண்மை' , 14.4.1970

III


'நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வர வேண்டும்' என்ற தலைப்பில் 'உண்மை' மூன்றாவது இதழ் முதல்  'கட்டுரையில் கடவுளைக் கற்பித்தவன் முட்டாள்' என்ற கருத்திற்கு விளக்கமும், நான்காவது இதழ் இரண்டாவது கட்டுரையில் 'கடவுளைப் பரப்பினவன் அயோக் கியன்' என்ற கருத்திற்கு விளக்கமும் எழுதி யிருந்தேன். இந்த மூன்றாவது கட்டுரையில் "கடவுளை வணங்குகிறவன் காட்டு மிராண்டி என்ற கருத்திற்கு" விளக்கம் எழுத ஆசைப் படுகிறேன்.

பொதுவாகச் சொல்கிறேன், உலகிலேயே கடவுளை வணங்குகிற எவனும் கடவுள் என்றால் என்ன? அது எப்படிப்பட்டது? அதன் தன்மை என்ன? குணம் என்ன? என்பனவாகிய விஷயங்களை உணர்ந்தோ , அல்லது உணர்ந்ததன் படியோ வணங்குவதே இல்லை; மற்றெப்படி யென்றால், ''கடவுளை" மனிதனாகவே கருதிக் கொண்டு, மனித குணங்களை யே அதற்கு ஏற்றிக் கொண்டு, தான் எப்படி நடந்து கொண்டான், தான் எப்படி நடந்து கொள்ளுகிறான், தான் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பனவைகளைப் பற்றிக் கவலைப் படாமல் தான் நடந்து கொண்ட கூடாத் தன்மைகளுக்குப் பரிகாரம் (பாவ மன்னிப்பு) தேடும் முறையிலும், நியாயமோ பொருத்தமோ விகிதமோ இல்லாமல் தனக்கு வாழ்வில் எல்லாத் துறைகளிலும் உயர் நிலையே வேண்டு மென்கின்ற பேராசையுடனுந்தாம் கடவுளை வணங்குகிறான்.

இப்படிப்பட்டவனை அயோக்கியன் என்று சொல்லா விட்டாலும் அறிவாளி என்று சொல்ல முடியுமா?

இப்படிப்பட்ட இவர்கள் வணங்கும் கடவுளை , இவர்களை, இன்றைய நம் ஜனநாயக ஆட்சிக்கும், ஆட்சிப் பிரஜைகளுக்கும், பிரதிநிதிகளுக்கும் ஒப்பிட்டுச் சொல்ல வேண்டுமே ஒழிய யோக் கியர்கள், அறிவாளிகள் என்று எப்படிச் சொல்ல முடியும்? இம்மாதிரியான கடவுள் வணக்கம் உலகில் ஏற் பட்டபின் இதன் பயனாக இயற்கையான யோக்கிய மான மனிதன் என்று சொல்லக்கூடிய ஒரு மனித னாவது தோன்ற முடிந்ததா? இருக்க முடிந்ததா? பொது மக்கள் பயமில்லாமல் வாழ முடிந்ததா? அல்லது கடவுள் களோ, கடவுள்கள் வீடுவாசல் சொத்துக் களாவது மக்கள் பயமில்லாமல் வாழ முடிந்ததா? இது பொது விளக்க மாகும்.

இனி நமது மக்கள் கடவுளை வணங்குவதன் மூலம் எவ்வளவு காட்டுமிராண்டிகள், மடை யர்கள் என்பதைப் பற்றி விளக்குகிறேன்.

நான் பந்தயம் கட்டிச் சொல் லுவேன். நம் மக்களில் (இந் துக்கள் என்பவர்களில்) கட வுளை வணங்குகிறவர்களில் ஒருவர் கூட அறிவாளரோ, யோக்கியரோ, உண்மை அறிந் தவரோ இல்லை! இல்லை!! இல்லவே இல்லை!!! என்று கூறுவேன்.

ஏனெனில் எப்படிப்பட்ட கடவுள் பக்தனும் கடவுள் என்று கல்லைத்தான், மனித உருவத் தைத்தான், மாடு குரங்கு, மீன், ஆமை, பன்றி, கழுகு, யானை முதலிய உருவங்கள் கொண்ட கல்லைத்தான் வணங்குகிறான். அவற் றிலும், மிகமிக முட்டாள்தனமாக வணங்கப்படும் போக்கு என்னவென்றால் ஒருதலை, இரண்டு தலை, மூன்றுதலை, நான்குதலை, அய்ந்து தலை, ஆறுதலை, ஆயிரம்தலையும் அவை போன்ற கைகளும் உடைய மனித உருவங்களையும், மற்றும் தலை மனிதன், உடல் மிருகம், முதலிய உருவங்கள் கொண்ட சிலைகளையும் வணங்கு கின்றான் என்பதே.

கடவுள் இருப்பதற்கு இப்படிப்பட்ட தோற் றங்கள் எங்கு இருக்கின்றன? ஒவ்வொரு அயோக்கியனும் ஒவ்வொரு  கூற்றைக் கற்பித்தால், பலப்பல முட்டாள்கள் இதை ஏற்பது என்றால், இதை வணங்குவது என்றால் இது முட்டாள் காட்டுமிராண்டித்தனமானது அல்லவா என்று தான் கேட்கிறேன்.

மற்றும் கடவுள்களுக்குப் பெண்டாட்டி, பிள்ளை, வைப்பாட்டி முதலியவைகளுடன் பூசை செய்து வணங்குவது முதலிய காரியங்களும், கடவுள் மற்றவன் (மனிதனின்) மனைவியைக் கெடுத்தான், மற்றவனைக் கொன்றான், மற்றவனை ஏய்த்து மோசம் பண்ணினான், திருடினான். பதினாயிரம் பெண்டாட்டி, பதினாயிரம் காதல் என்றெல்லாம் கதை கட்டி, அதைத் திருவிழாவாக்கி வணங்குவதும் காட்டுமிராண்டித் தனமா? அறிவுடைமையா? என்று கேட்கிறேன்.

மற்றும் பலர் ஒரு வேளை உணவுக்கும் திண்டாட, தலைக்கு எண்ணெய் இல்லாமல் வருந்த, தினம் அய்ந்து வேளை ஆறுவேளை பொங்கல் அக்கார வடிசில் முதலியன படைத்தல், பால், நெய், தேன், தயிர், இளநீர் எண்ணெய் அபிஷேகம் என்னும் பெயரால் கல்லுகளின் தலையில் கொட்டிச் சாக்கடைக்கு அனுப்புதல் வடிகட்டிய முட்டாள் தனமா? கடவுள் வணக்கமா? என்று அழுத்திக் கேட்கிறேன். இவற்றால், இந்த முட்டாள்தனமான கடவுள் வணக்கத்தால் நலம் பார்ப்பனருக்கு அல்லாமல் மற்ற யாருக்கும் முட்டாள் பட்டம் அல்லாமல்) பயன் உண்டா? என்று கேட்கிறேன்.

மேலும் இதற்காக ஏற்படும் பொருள் செலவு, நேரச்செலவு எவ்வளவு?. இந்த நிலை ஒருபுற மிருந்தாலும் நம் மக்கள் இப்படியே போய்க் கொண்டிருந்தால் நமது பின் சந்ததிகளின் நிலை என்ன ஆவது? என்று கேட்டு இதை முடிக்கிறேன்.

- ஈ.வெ.ரா - 'உண்மை' , 14.5.1970

- விடுதலை நாளேடு, 8. 9.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக