திங்கள், 16 நவம்பர், 2015

கலைகள் மனித சமுதாயத்திற்குப் பயன்பட வேண்டும் - தந்தை பெரியார்



பெரியார் என்றால் அவர் கலைகளை விரும்பாதவர் இலக்கியங்களை நேசிக்காதவர் என்பன போன்ற கணிப்புகளை, கருத்தூகங்-களை பலரும் கொண்டுள்ளனர், அதையே மற்றவர்களுக்கும் பரப்புகின்றனர்.

பெரியார் ஒரு மானுடப்பற்றாளர். அதற்குரிய அத்தனை இயல்புகளும், உணர்வுகளும் விருப்பங்களும் அவரிடம் காணப்பட்டன. அவர் இலக்கியங்களை, கலைகளை, கேளிக்கை-களை நேசிக்காதவர் அல்லர். மாறாக அவை மக்களை மானமும், அறிவும், விழிப்பும், சிந்தனையும், நல்லொழுக்கமும், நன்னோக்கும் உடையவர்களாக ஆக்க பயன்பட வேண்டும் என்றே விரும்பினார். அந்த அளவுகோலின்படி அதற்கு பயன்படாத பல கலைகளையும், இலக்கியங்களையும் அவர் வெறுத்தார். குறிப்பாக ஆதிக்கத்தை ஏற்றத்தாழ்வை, மூட நம்பிக்கைகளை, பேதத்தை, அடிமைத்தனத்தை ஆதரிக்கக்கூடிய, வளர்க்க கூடியவற்றை எதிர்த்தார். பெரும்பாலான கலையும் இலக்கியங்களும் வெறுக்கத் தக்கனவாய், எதிர்க்கத் தக்கனவாய் இருந்தமையால் அவற்றை அவர் எதிர்த்தமையால், பெரியாருக்கு கலை, இலக்கியங்களைப் பிடிக்காது என்பது போன்ற ஒரு கருத்தேற்றத்தை பலரும் கொண்டனர். எனவே அவர் கலை இலக்கியங்களை விரும்பக்கூடியவர் மட்டுமல்ல  அவற்றை கூர்மையாக ஆய்வு செய்து கருத்தும் கூறியவர் என்பதை அவர்கூறிய மொழிகளிலே நாம் அறியலாம்.
கலைகள் பற்றி பெரியாரின் கருத்துக்கள்
(அ) நாடகம்:
தன்னலமற்ற தொண்டர்கள் தெருவெங்கும் அறிவுப் பிரச்சார நாடகங்கள் நடத்த வேண்டும். இதற்கு தோழர் இராதா ஓர் எடுத்துக்காட்டு.
நம்நாட்டுக் கலைகள் கடவுள் பிரச்சாரத்திற்கே பயன்படுத்தப்படுகின்றன. ஆரியர்கள் தங்கள் நலத்திற்கும் ஆதிக்கத்திற்கும் ஏற்ப கருத்துக்களைப் பரப்ப பதியச்செய்ய கலைகளைப் பயன்படுத்துகின்றனர்.
கலைகள் பல இருப்பினும் அவற்றில் உள்ள கலைஞர்கள் பலர் இருப்பினும் எல்லாம் பார்ப்பன ஆதிக்கம் வளர்க்கவும், பகுத்தறிவிற்கு ஒவ்வாத கருத்துக்களைப் பரப்பவும் பயன்-படுத்தப்படுகின்றன. கலைஞர்களும் பார்ப்பனர்-களின் விருப்பத்தை, நோக்கத்தை நிறைவேற்றி வைக்கவே உழைக்கின்றனர்.
நடிகர்களுக்கு இன உணர்ச்சியில்லை காசுக்காக நடிக்கிறார்கள்.
நாங்கள் பணத்திற்காக நடிக்கிறோம். மக்கள் விரும்பும்படி நடிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று சிவாஜிகணேசன் உட்பட பல நடிகர்கள் என்னிடம் கூறியுள்ளனர். எதற்கு முதன்மைத் தரவேண்டுமோ அது தரப்படாமல், சாதி, மதம், பார்ப்பன மேலாண்மை வளர்க்கவே கலைகளில் அதிக கவனமும், முன்னுரிமையும் அளிக்கப்படுகின்றன.
கலையென்பதை மனித சமுதாய வளர்ச்சிக்கு பயன்படும்படியாக கற்பனை செய்து நடிக்க வேண்டும். அதன்மூலம் மக்கள் அறிவு பெற்று சிந்திக்கத் தூண்ட வேண்டும்.
நாடகம் என்பது சாயம் பூசிக்கொண்டு, கூத்தாடவும், காசு சம்பாதிக்கவும் இருக்கிற-தென்றால் அது மிகவும் முட்டாள்தனம் என்றே சொல்வேன்.
மாறாக மக்கள் முன்னேறவும், உண்மை உணரவும் உகந்த வகையில் நாடகங்கள் நடிக்கப்படுவது அவசியம் என்றார்.
ஆக பெரியாரின் மேற்கண்ட கருத்துக்களைச் சிந்தித்துப்பார்த்தால் அவர் கலையை வெறுத்தவர் அல்லர் மாறாக, கலை உயர் நோக்கத்தை, மனித மேம்பாட்டை எட்டச் செய்ய துணைநிற்பதாய் இருக்க வேண்டும் என்றவர்.
நாடக நடிகர்களும் பணம் தான் குறிக்கோள் என்றில்லாமல் மக்கள் நலத்தை முதன்மையாகக் கொண்டு தொழில் செய்ய வேண்டும் என்று வரையறுத்துக்கூறுகிறார்.
அதுமட்டுமல்ல அவர் கலைகளைக்கூர்ந்து நோக்கிக் கருத்துக்களும் சொல்லியுள்ளார்.
நாடகங்களில் பொருத்தமற்ற இடங்களில் பாட்டு வருவது, அதிக அளவில் தேவையில்லா இடங்களில் எல்லாம் பாட்டு வருவது சரியல்ல என்றார்.
அக்கால நாடகங்களில் கருத்துகள் அதிகம் இடம் பெறாது, வெறும் பாடல்களாகவே பாடிக் கொண்டிருப்பர். அதை நுட்பமாகக் கண்டு அதை அகற்றி, இலக்கு எட்டும் வகையிலும் சலிப்பு ஏற்படா வண்ணமும் இருக்க வேண்டும் என்பதை கலைக்-கண்ணோட்டத்தோடு, மக்கள் உளவியல் அடிப்படையில் கருத்துக் கூறிய அவரது நுட்பம் வியப்புக்குரியது.
அதற்கு ஓர் எடுத்துக்காட்டும் தருகிறார். உதாரணமாக நெருப்பு பிடித்துக்கொண்ட நேரத்தில் பதட்டமும் பரபரப்பும், கவலையும், கலக்கமும் கொண்டு நடிக்க வேண்டும். மாறாக அப்போது சுதி, தாளம், ராகம் முதலியவற்றைச் சேர்த்து பாட்டுப்பாடி கொண்டிருக்கக்கூடாது.
ஆனால், தற்போது நாடகங்களில் பாடிக்-கொண்டுதான் இருக்கிறார்கள். இது இயல்பான போக்காக, நடிப்பாக இருக்க முடியுமா? என்று அறிவார்ந்த சிந்தனையைத் தூண்டினார்.
அதே போல் சீர்திருத்த நாடகங்களில் நல்ல சீர்திருத்தத்தை, மாற்றத்தைக் கொண்டுவரும்-படியாக, உணர்வை அறிவைத் தூண்டக்-கூடியதாக வார்த்தைகளை வசனங்களைச் சொல்ல வேண்டும் என்ற நுட்பமான கருத்தையும் தந்தை பெரியார் அவர்கள் கூறினார்கள்.
(ஆ) ஓவியம், சிற்பம்:
இந்தியாவில் ஓவியம், சிற்பம் எல்லாம் இந்துமத சம்பந்தமான, கடவுள் சம்பந்தமானதாக இருக்கிறதே தவிர பகுத்தறிவிற்கு இயற்கை கலை ரசனைக்கு உரிய வகையில் எங்கு உள்ளன? அதிலுள்ள ஆபாசங்களை நாம் குறை சொன்னால் நமது பண்டிதர்கள், அவை இருக்க வேண்டும், அவை இல்லையென்றால் இக்கலைகள் அழிந்துவிடும். அதை ஆபாசமாகப் பார்க்கக்கூடாது. கலையாகப் பார்க்க வேண்டும் என்கின்றனர். காட்டுமிராண்டிதனமான உணர்ச்சிகளை கோயில்களில் வளர்ப்பதுதான் கலைகளா?
நமது கோயில்களில் உள்ள சிற்ப ஓவியங்களில் 90% இயற்கைக்கு முரண்பட்டவை. மிருக உடல் மனிதத்தலை, விலங்கைப் புணர்தல், பறவை மீது மனிதன் அமர்வது, பூமீது பெண்கள் அமர்வது! இவையெல்லாம் அறிவிற்கும் இயற்கைக்கும் பொருந்துவதா?
அருமையான ஓவியங்களையும் சிற்பங்-களையும் விட்டுவிட்டு - அநாகரிகமும், காட்டுமிராண்டித்தனமும், மிருகப்பிராயமும் கொண்டதுமான உருவங்களை வைத்துக்-கொண்டு கொஞ்சமும் வெட்கமில்லாமல் இவற்றைக் கலை என்பதா? என்று கடுமையாகச் சாடினார்.
ஓவியமும், சிற்பமும், அறிவையும், கலை உணர்வையும் தூண்டக்கூடியதாய், இரசிக்கத்தக்க-தாய் இருக்க வேண்டும் என்கிறார்.
(இ) இசை:
உலகில் மனித உணர்ச்சித் தோற்றங்களில் இசையும் ஒன்று. இச்சங்கீதம் நாட்டிற்கும், சீதோஷ்ண நிலைக்கும், அறிவு வளர்ச்சிக்கும் உரியதாய் இருக்க வேண்டும். மாறாக அதே சங்கீதம் உலகிற்கே பொருந்தக் கூடியதாகாது. ஒரு நாட்டுக்கு இன்பமாய் இருக்கும் இசை இன்னொரு நாட்டிற்கு இன்பம் தராது.
அதுவும் சங்கீதம் தாய்மொழியில் பாடப்பட வேண்டும். மாறாக அன்னிய மொழிகளில் பாடி அதைத்தான் பிற மொழிக்காரன் கேட்க வேண்டும் என்பது கொடுமையல்லவா. தமிழன், தெலுங்கு கீர்த்தனை தான் கேட்கவேண்டும் என்று திணிப்பது ஆதிக்கம் அல்லவா? என்று கலை சார்ந்த உரிமைக்குரல் எழுப்பினார் பெரியார்.
(ஈ) இலக்கியம்:
இலக்கியம் என்பது, அறிவையும், மானத்தையும், சமத்துவத்தையும் வளர்ப்பதாய் இருக்க வேண்டும். அப்படிப்பார்த்தால், திருக்குறள் தான் ஏற்கத் தக்கதாய் இருக்கிறது. அதிலும் ஏற்க இயலாத கருத்துக்கள் இருந்தாலும், பெரும்பாலும் நல்ல கருத்துக்கள் உள்ளன. ஆரிய ஆதிக்கத்திற்கு எதிராய் குரல் எழுப்பிய வள்ளுவர், சமணர்கள் எழுதியவை  தவிர மற்ற பக்தி இலக்கியங்களில் எல்லாம் பார்ப்பன ஆதிக்கமும் தமிழன் இழிவும்தானே மிகுந்துள்ளன என்று கூறி இலக்கியம் என்பது மானம், அறிவு, சமத்துவம், விழிப்பு இவற்றை ஊட்டக்கூடியதாய் விளக்கக்கூடியதாய் இருக்க வேண்டும் என்கிறார்.
ஆக, தந்தை பெரியார் கலை, இலக்கியங்-களை எதிர்த்தவர், வெறுத்தவர் அல்லர், மாறாக அவை உயர்நோக்கும் உயர் கருத்தும் இயல்பான போக்கும் உடையதாக இருக்க வேண்டும் என்று விரும்பியவர்.
(தரவு: 29.8.1956இல் திருச்சி பெரியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளி 7.4.1951 காஞ்சிபுரம், 22, 23.5.1950இல் பெங்களூர். 22.7.1951இல் சேலம், 16.4.1961இல் ஜோலார்பேட்டை, 7.2.1944இல் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் 9.9.1934 சென்னை, 27.3.1952இல் கரூர் பேசிய பேச்சுகள்.)
உண்மை இதழ்,1-15.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக