ஞாயிறு, 8 நவம்பர், 2015

கற்பு (சித்திர புத்திரன் எழுதுவது)
கற்பு என்கின்ற வார்த்தையானது மனித சமூகத்தில் சரிபகுதியான எண்ணிக்கையுள்ள பெண்-களை அடிமைப்படுத்தி வைப்பதற்காக மாத்திரமே உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்கின்ற தத்துவத்தின் மேல் இதை எழுதுகின்றேன்.
கற்பு என்கின்ற வார்த்தையைப் பகுபதமாக்கி பார்ப்போமானால் கல் என்பதிலிருந்து வந்ததாகவும் அதாவது படி - படிப்பு என்பது போல் கல் - கற்பு என்-கின்ற இலக்கணம் சொல்லப்படுகிறது. அன்றியும் கற்பெனப் படுவது சொற்றிறம்பாமை என்கின்ற வாக்கியப்படி பார்த்தால் கற்பு என்பது சொல்-தவறாமை அதாவது நாணயம், சத்தியம் என்கின்ற கருத்து கொண்டதாக இருக்கின்றது.
அதைப் பகாப்பதமாக வைத்துப்பார்த்தால் மகளிர் நிறை என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்கின்ற பெண் களையே குறிக்கும் பதம் எப்படி சம்பந்தப்பட்டது என்பது விளங்கவில்லை. நிறை என்கின்ற சொல்லுக்குப் பொருள் பார்த்தால் அழிவின்மை, உறுதிப்பாடு, கற்பு என்கின்ற வார்த்-தைகள் காணப்படுகின்றன. ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டது என்பதற்கு ஆதாரம் கிடைக்காவிட்டாலும் அழி வில்லாதது, உறுதி உடையது என்கின்ற பொருள் கிடைக்கின்றது.
அழிவில்லாதது என்கின்ற வார்த்தைக்குக் கிரமமான கருத்துப் பார்க்கும்போது இந்த இடத்தில் சுத்தம் அதாவது கெடாதது என்பதாகத்தான் கொள்ளலாம். இந்த சுத்தம் என்கின்ற வார்த்தையும் கெடாதது என்கின்ற கருத்தில்தான் ஆங்கிலத்திலும் காணப்படுகிறபடி அதாவது சேஸ்டிடி (Chastity) என்கின்ற வார்த்தைப்படி பார்த்தால் வர்ஜினிட்டி (Verginity) என்ற பொருள் என்பதும்,
அதை அந்த உணர்ச்சிப்படியும் பார்த்தால் இது ஆணுக்-கென்றோ பெண்ணுக்கு என்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே எவ்வித ஆண் பெண் புணர்ச்சி சம்பந்தமே சிறிதும் இல்லாத தன்மைக்கே உபயோகப்படுத்தி இருக்கின்றது.
ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்பட்டதல்ல என்பதும் அதுவும் ஆணோ பெண்ணோ ஒரு தடவை கலந்த பிறகு எவ்வளவு சுத்தமாயிருந்தாலும் கற்பு அல்ல என்கின்ற கருத்து கொள்ளக் கூடியதாகின்றது. ஆனால் ஆரிய பாஷையில் பார்க்கும்போது மாத்திரம் கற்பு என்கின்ற பதத்திற்குப் பதிவிரதை என்கின்ற பொருள் கொள்ளப்படுகின்றது.
இந்த இடத்தில்தான் கற்பு என்கின்ற வார்த்தைக்கு அடிமைக் கருத்து நுழைக்கப்படுகின்றது என்பது எனதபிப்பிராயம். அதாவது பதியைக் கடவுளாகக் கொண்டவள், பதிக்கு அடிமையாய் இருப்பதையே விரதமாகக் கொண்டவள் எனப் பொருள் கொடுத்திருப்பதுடன் பதி என்கின்ற வார்த்தைக்கு அதிகாரி, எஜமான், தலைவன் என்கின்ற பொருள்கள் இருப்பதால் அடிமைத் தன்மையை இவ்வார்த்தைகள் பலப்படுத்து கின்றன.
ஆனால் தலைவி என்ற பதத்திற்கும் நாயகி என்ற பதத்திற்கும் மனைவி என்ற பொருள் குறிக்கப்பட்டிருந்தாலும் அது காதல் கொண்ட நிலையில் மாத்திரம் ஆணையும் பெண்ணையும் குறிக்கின்றதேயொழிய வாழ்க் கையில் கட்டுப்பட்ட பெண்களுக்குத் தலைவி என்கின்ற வார்த்தை அதன் உண்மைக் கருத்துடன் வழங்கப்படுவதில்லை.
நாயகன் நாயகி என்கின்ற சமத்துவமுள்ள பதங்களும் கதைகளிலும் புராணங்களிலும் காதல்களை உணர்த்தும் நிலைகளுக்கே மிகுதியும் வழங்கப்படு-கின்றது. ஆகவே காமத்தையும் காதலையும் குறிக்குங் காலங்களில் சமத்துவப் பொருள் கொண்ட நாயகர், நாயகி, தலைவர் தலைவி என்கின்ற வார்த்தைகளை உபயோகித்துவிட்டு,
கற்பு என்கின்ற நிலைக்கு வரும்-போது அதைப் பெண்களுக்கு மாத்திரம் சம்பந்தப்படுத்தி, பதி ஆகிய எஜமானனையே கடவுளாகக் கொள்ள வேண்டுமென்கின்ற கருத்து கொண்டிருக்கின்றது. கற்பு என்பதற்கு பதிவிரதம் என்று எழுதவிட்டதின் பலனாலும், பெண்களை விட ஆண்கள் உடல் வலி கொண்டவர்களான தினாலும், பெண்கள் அடிமையாவதற்கும் புருஷர்கள் மூர்க்கர் களாகி கற்பு என்பது தங்களுக்கு இல்லையென்று நினைப்பதற்கும் அனுகூலம் ஏற்பட்டதே தவிர வேறில்லை.
தவிர, புருஷர்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைபட்டுக் கிடப்பதற்கும் காரணம்  ஆண்களின் ஆதிக்கமே தவிர வேறில்லை.
இந்த விஷயத்தில் உலகத்தின் இன்ன நாடோ, இன்ன மதமோ, இன்ன சமூகமோ யோக்கியமாய் நடந்து கொண்டிருப்பதாகச் சொல்லமுடியாது. உதாரணமாக அய்ரோப்பிய தேசத்திலும் பெண்களுக்குப் பலவித சுதந்திரங்கள் இருப்பதுபோல் காணப் பட்டாலும் புருஷன் பெண்சாதி என்பதற்காக ஏற்பட்ட பதங்களி லேயே உயர்வு தாழ்வு கருத்துகள் நுழைக்கப் பட்டிருப்பதுடன், சட்டங்களும் புருஷனுக்கு அடங்கி நடக்க வேண்டிய தாகவே ஏற்பட்டிருக்கிறது.
துருக்கி நாட்டிலும் முகமதிய சமூகத்திலும் படுதா என்றும், கோஷா என்றும் அதாவது பெண்கள் அறைக்குள் இருக்க வேண்டியவர்கள் என்றும், முகத்தை மூடிக் கொண்டு வெளியில் போக வேண்டியவர்கள் என்றும், ஏற்படுத்தப்பட்ட கொள்கையும், புருஷன் பல பெண்களை மணக்கலாம், பெண்கள் ஏககாலத்தில் ஒரு புருஷனுக்குமேல் கட்டிக் கொண்டு வாழக்கூடாது என்ற கொள்கையும்,
நம்நாட்டில் ஒருதடவை புருஷன், பெண் சாதி என்கின்ற சொந்தம் ஏற்பட்டுவிட்டால் அந்தப் பெண்ணுக்குச் சாகும் வரைக்கு வேறு எவ்வித சுதந்திரமும் இல்லை என்றும், புருஷன் பல பெண்களைக் கட்டிக் கொண்டு அப்பெண்ணின் முன்பாகவே ஒவ்வொரு பெண்ணுடனும் கூடி வாழலாம் என்றும், புருஷன் தான் கொண்ட பெண்ணைத் தன்னுடன் இருத்தி வாழவிடாமலும் கூட புருஷனை சாப்பாட்டிற்கு மாத்திரம் கேட்கலாமே யொழிய இன்பத்திற்கோ, காதலுக்கோ, கட்டுப்படுத்த உரிமை இல்லை என்றும் கட்டுப்பாடு வழங்கப்பட்டு வருகின்றது.
இந்நிலை சட்டத்தாலும், மதத்தாலும் மாத்திரம் ஏற்பட்ட தென்று சொல்வதிற்கில்லாமல் ஸ்திரீ சமூகமும் ஒப்புக் கொண்டு இந்நிலைக்கு உதவி புரிந்து வருவதினாலும் இது உரம் பெற்று வருகின்றதென்றே சொல்ல வேண்டும். அநேக வருட பழக்க வழக்கங்களால் தாழ்ந்த ஜாதியார் எனப்படுவோர்.
எப்படித் தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதை ஒப்புக்கொண்டு தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுங்கவும், விலகவும் முந்துகின்றார்களோ அதுபோலவே பெண்மக்களும் தாங்கள் ஆண்-மக்களின் சொத்துக்களென்றும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றும், அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாதவர்கள் என்றும் நினைத்துக்கொண்டு சுதந்திரத்தில் கவலையற்று இருக்கின்றார்கள்.
உண்மையான பெண்கள் விடுதலை வேண்டுமானால் ஒருபிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்புமுறை ஒழிந்து, இருபிறப்புக்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும். கற்புக்காக காதலற்ற இடத்தைக்கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான நிர்ப்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்.
கற்புக்காக புருஷனின் மிருகச் செயலைச் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமை ஒழிய வேண்டும். கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மைக் காதலை மறைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கின்ற கொடுமை ஒழிய வேண்டும். எனவே இக்கொடுமைகள் நீங்கின இடத்தில் மாத்திரமே மக்கள் பிறவியில் உண்மைக் கற்பை, இயற்கைக் கற்பைக் காணலாமே ஒழிய நிர்ப்பந்தங்-களாலும் ஒருபிறப்புக் கொரு நீதியாலும்,
வலிமை கொண்டவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் ஒருக்காலும் காணமுடியாததுடன் அடிமைக் கற்பைத்தான் காணலாம். அன்றியும் இம்மாதிரியான கொடுமையை விட வெறுக்கத்தக்க காரியம் உலகத்தில் மனித சமூகத்தில் வேறு ஒன்று இருப்பதாக நான் சொல்ல முடியாது.
-திராவிடன் - அநுபந்தம் - 1929)
விடுதலை,17.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக