ஞாயிறு, 8 நவம்பர், 2015

பள்ளிக்கூடத்தில் புராண பாடம்-சித்திரபுத்திரன்

உபாத்தியாயர்:- அடே பையா! இந்த உலகம் யார் தலைமேல் இருக்கின்றது சொல் பார்ப்போம்.
பையன்:- எனக்கு தெரியவில்லையே சார்.
உபாத்தியாயர்:- ஆதிசேஷன் என்கின்ற ஆயிரம் தலையுடைய பாம்பின் தலைமேல் இருக்கின்றது. பூமியை ஆதிசேஷன் தாங்குகின்றான் என்கின்ற பழமொழி கூட நீ கேட்டதில்லையா மடையா?
பையன்:- நான் கேட்டதில்லைசார் ஆனால், ஆதிசேஷன் என்கின்ற பெயர் மாத்திரம் ஒருநாள் எங்கள் வீட்டில் ராமாயணம் படிக்கும் போது ஒரு சாஸ்திரியார் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதாவது ஆதிசேஷன் விஷ்ணுவின் படுக்கை யென்றும், அந்த விஷ்ணு ராம அவதாரம் செய்தார் என்றும் கேட்டதாக ஞாபகமிருக்கின்றது.
உபாத்தியாயர்:- ஆமாம் அந்த ஆதிசேஷன் தான் பூமியை தாங்கிக் கொண்டிருக்கிறான் தெரியுமா?
பையன்:- இப்போது தெரிந்து கொண்டேன். ஆனால் ஒரு சந்தேகம் சார்....
உபாத்தியாயர்:- என்ன சந்தேகம் சீக்கிரம் சொல்.
பையன்:- பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கும் ஆதிசேஷன் விஷ்ணுவுக்கு படுக்கையாய் வந்துவிட்டால் அப்போது பூமியை யார் தாங்குவார்கள்? தவிர லட்சுமணனாக உலகத்திற்கு வந்து விட்ட போது பூமியை ஆதிசேஷன் யார் தலையில் வைத்து விட்டு வந்தார்? தயவுசெய்துசொல்லுங்க சார்?
உபாத்தியாயர்:- நீ என்ன குடிஅரசு படிக்கிறாயோ! அதுதான் அதிகப் பிரசங்கமான கேள்விகளை கேட்கின்றாய் பொறு உன்னை இந்த பரீக்ஷையில் சைபர் போடுகின்றேன்.
பையன்:- இல்லவே இல்லை சார் நான் சத்தியமாய் குடிஅரசை படிப்பதே இல்லை சார். ராமாயணம்தான் சார் கேட்டேன். தாங்கள் சொல்வதிலிருந்தே எனக்கு இந்த சந்தேகம் தோன்றிற்று சார்.
உபாத்தியாயர்:- ஆதிசேஷன் தெய்வத் தன்மை பொருந்தியவன். அவன் ஒரு காலத்தில் பல வேலை செய்யக்கூடிய சக்தி அவனுக்கு உண்டு. அவன் பூமியையும் தாங்குவான்: விஷ்ணுவுக்கு படுக்கையாகவு மிருப்பான். விஷ்ணு ராமனாக உலகத்திற்கு போகும் போது லக்ஷ்மணனாக கூடவும் போவான் தெரியுமா?
பையன்:- இப்ப தெரிந்தது சார். ஆனால் ஒரு சின்ன சந்தேகம் சார். அதுமாத்திரம் சொல்லி போடுங்கள். இனி நான் ஒன்றும் கேட்பதில்லை.
உபாத்தியாயர்:- என்ன சொல் பார்ப்போம்.
பையன்:- பூமியை ஆதிசேஷன் தாங்குகிறான்; சரி அதை நான் ஒப்புக் கொள்கின்றேன்; அப்புறம் தாங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது சார் எனக்கு நிஜமாலும்தெரியவில்லை சார்.
உபாத்தியாயர்:- என்ன சங்கதி சொல்லு! நான் கோபிக் கிறதில்லை.
பையன்:- மறுபடியும்... பூமியை ஆதிசேஷன் தாங்குகிறான் சார் (தலையை சொரிந்து கொண்டு) ஆதிசேஷனை யார் தாங்கறாங்க சார்? அவர் எதன்மேலிருந்து கொண்டு தாங்குறாங்க சார். அதை மாத்திரம் சொல்லிக் கொடுத்தால் போதும் சார். அப்புறம் ஒரு சந்தேகமும் இப்போதைக்கு இல்லை சார்.
உபாத்தியாயர்:- போக்கிரிப் பயலே, குடிஅரசு படிக்கிறாய் என்பது இப்போது எனக்கு உறுதியாச்சுது. பொறுபொறு பேசிக் கொள்ளுகிறேன். வாயை மூடிக் கொண்டு போய் உட்கார் அதிக பிரசங்கிப் பயலே.
(திராவிடர் - அநுபந்தம், 1929)
-விடுதலை17.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக