திங்கள், 9 நவம்பர், 2015

வக்கீல் வாய்தா வாங்கும் தந்திரம்-சித்திரபுத்திரன்

வக்கீல் வாய்தா வாங்கும் தந்திரம் வக்கீலுக்கும் கக்ஷிக்காரனுக்கும் சம்பாஷணை


(சித்திரபுத்திரன் எழுதியது)
ஒரு வக்கீல் வீட்டுக்கு ஒரு கக்ஷிக் காரன் வருகிறான்
வக்கீல்: வா கவுண்டா, என்ன சங்கதி.
கக்ஷிக்காரன்: எசமான்று கிட்டதான் ஒருகாரியமாய் வந்தேன்.
வ: என்ன காரியம்.
க: நான் ஒருத்தருக்கு 1000 ரூபாயும் வட்டியும் கொடுக்க வேண்டும். வாங்கி 2 வருசமாச்சிங்கோ. வாய்தா சொல்லி கடந்தும் ஒரு வருசமாச் சிங்கோ,. கடைசியாக 2 மாச வாய்தா கேட்டேன். அதுக்குள்ளே பிராது போட்டுட்டானுங்கோ, எசமான்று எப்படியாவது ஒரு இரண்டு மாச வாய்தா வாங்கி கொடுத்தாக்க பணம் கட்டிப் போடுவனுங்கோ.
வ: இரண்டு மாதம் தானா, இரண்டு வருஷ வாய்தா வாங்கிக் கொடுக்கிறேன். கடைசியாய் அவன் உன்னிடம் பணம் வாங்குகிறதையே நான் பார்த்து விடுகிறேன்.
க: சாமி சாமி அப்படிச் செய்யா திங்கோ, அவன் மொதலுக்கு  நானா பிள்ளை, எம் மொதலை எத் தனையோ பேர் திங்கிராங்கோ இரண்டு மாசம் இல்லாட்டா மூணு மாச வாய்தா கிடைத்தால் போரும்.
வ: சரி பீசு என்ன கொடுக்கிறே.
க: எசமாங்க சொன்னாச்சரி.
வ: ஐம்பது ரூபாய் கொடுக்கணும்; வாய்தா வாங்குகிறது என்றால் விளையாட்டு காரியமல்ல.
க: 25 ரூ. தாரனுங்கோ.
வ: வாய்தா வாங்குவதில் உள்ள கஷ்டம் உனக்கு தெரியாது. நான் செய்யும் வேலையினால் முனிசிப்பே 1 வருஷம், 2 வருஷம் வாய்தா கொடுத்தாலும் கொடுப்பார். ஆனதால் பீசு 50-க்கு குறையாது.
க: அத்தனை நாள் வாய்தா வாண் டாம் 2,3 மாசம் கிடைச்சால் போதும்.
வ: நீ என்ன பயித்தியகாரனாக இருக்கிறாய்? கடன் கொடுத்தவன் 2 மாதம் வாய்தாக் கேட்டதற்கு கொடுக் காமல் பிராது போடுவதென்றால் அவனுக்கு அத்தனை ஆணுவமா அவனை விடக் கூடாது. பீசைப் பற்றி நீ கவலைப்படாதே நான் வாங் கும் வாய்தாவினால் உனக்கு மிச்ச மாகும் வட்டியைக் கொடுத்தால் போதும்.
க: அப்படியானால் எசமாங்கோ, கேக்கிரபடி தாரேனுங்க இத்தாங்கோ இப்ப 25 ரூ. வாங்கிக் கோங்க.
வ: சரி என்று குமாஸ்தாவை கூப்பிடுகிறார். ராமச்சந்திரா.
குமாஸ்தா: சார்.
வ: இவனிடம் ஒரு வக்காலத்து வாங்கி ஒரு ஸ்டேட்மெண்டு நான் சொல்லுகிறபடி எழுதி கையெழுத்து வாங்கிக்கொள்.
கு: காகிதம் இங்கி பெட்டி பேனாவுடன் வந்து வக்கீல் பக்கம் நின்று கொண்டு வக்கீல் சொல்வதை எழுதுகிறார்.
வ: (சொல்வதாவது) இந்த பிராது மோசடியும் சுத்தப் பொய்யுமானது. இந்தப் பிராமசரி நோட்டு நான் எழுதிக் கொடுக்கவில்லை. இது போர்ஜரி என்று சொல்லிக் கொண்டு வரும்போது, க: சாமி, சாமி, அதெல்லாம் எளு தாதிங்கோ, இந்த பாவத்தை எங்கே கொண்டு போய் தொலப்பேன். 3 மாசமா நடந்து கை நீட்டி சொளை யாட்ட பணம் வாங்கி ஊடு கட்டி கல்யாணம் பண்ணி இருக்கிறேன். இப்படி எழுதினா கண்ணும் வாயும் வௌங்க வாண்டாமா?
வ: (கோபித்துக் கொண்டு) என்னடா மகா சத்திய கீர்த்திபோல் பேசறே அப்படியானால் வாங்கின பணத்தை கொடுத்தவன் கேட்டதும் எரிஞ்சி போடரதானே இத்தனை நாளாயி இன்னும் வாய்தா என்ன?
க: சாமி சாமி கோவிச்சுக்கா தீங்கோ, கைக்கு பணம் வர வேண் டாமா 2 மாசத்தில் வந்தாப் போகுது, கொண்டு போய்க் குடுத்து கெஞ்சிக் கிட்டு வந்தரப்போரே, அதுக்குள்ளே நான் எழுதிக் கொடுக்கலேபோரு சரி என்று எழுதினா நல்லாவாயிருக்கும்?
வ: அப்படியானால் வாய்தா கிடைக்காது, உனக்காக வேணுமா னால் எழுதி கொடுத்ததை ஒப்புக் கொண்டு வேறே மாதிரியாய் எழுதுகிறேன்.
க: சரி அப்படி எழுதுங்கோ சாமி நமக்கெனத்துக்கு ஊரா முதலு.
வ: ராமச்சந்திரா அந்த 2வது பாராவை அடிச்சு இந்த மாதிரி எழுது - _ நான் வாதியிடம் ஒரு கூட்டு வியாபாரம் செய்ய ஜாமீனுக்காக இந்த பிராம்சரி எழுதிக் கொடுத்தேன்.
க: சாமி சாமி அப்படிக்கூட இல்லெங்கே
வ: (கோபித்துக் கொண்டு) ராமச்சந்திரா இத்தனை நேரம் வேலையைக் கெடுத்ததற்கு 15 ரூ பிடித்துக் கொண்டு அவன் பணத்தை தலையச் சுற்றி எறிந்து விடு. இதெல்லாம் கிளித்தெரி, இந்த சத்தியகீர்த்தி சாவகாசம் நமக்கு வேண்டாம் இவன் சொல்கிறபடி எழுதினால் நாளைக்கு நம்மிடம் ஒரு கட்சிக்காரன்கூட வர மாட்டான்.
கு: (கடன் வாங்கினவனுக்கு ஜாடை காட்டி பேசாமல் வாயை மூடிக் கொண்டிருக்கச் சொல்லு கிறார்).
க: சாமி சாமி எசமாங்கோ இப்படி கோவிச்சிக்கலாமா, நாங்கல்லா காட்டாள் தானே, கோர்ட்டு சங்கதி எங்களுக்கெப்படி தெரியும், எசமாங்க தானேசொல்லிக் கொடுக்கணும், நீங்க என்னமோ எழுதிக் கொங்கோ, நம்மை ஏதாவது சத்தியம் கேட்டுடப் போராங்கொ, அது மாத்திரம் பார்த்துக்கொங்கோ.
வ: சரி அதெல்லாம் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். ராமச் சந்திரா எழுது _  பிராம்சரியில் கண்டபடி பரிகாரம் பெறவில்லை. கூட்டு வியாபாரக் கணக்குகள் இருக்கிறது இதை கமிஷன் வைத்து லாப நஷ்டம் பார்த்து முடிவு செய்ய வேண்டும்.
க: சாமி சாமி அப்படி எழுதினா நாளைக்குக் கணக்கு காட்ட வாண்டாமா?
வ: அதெல்லாம் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். நம்மிடம் எத்தனையோ கணக்குகள் இருக்கிறது குமாஸ்தாவைப் பார்த்து ளி.ஷி.ழிஷீ.43-க்கு காட்டினமோ அந்த கணக்கு புஸ்தகங்கள் எல்லாம் நம்மிடம் இருக்கிறதல்லவா.
கு: ஆம் அதுவும் இருக்கிறது; வேறு கேசுகளுக்கு வந்த கணக்கு களும் இருக்கிறது.
க: சாமி சாமி இதெல்லாம் நமக்கு எப்படி ஒதவுமுங்கோ.
வ: அட பயித்திக்காரா ஏதோ இரண்டு மூட்டை கணக்குகளை கொண்டு போய் திடீரென்று முனிசீப்பு முன்னால் போட்டால் பயந்து கொள்ளவாண்டாம்? நம்ம முனிசீப்பு கணக்கு மூட்டை கண்ட தும் 6  மாதம் வாய்தா தானாகவே கொடுத்து விடுவார்.
க: அய்யோ சாமி கணக்கை தொறந்து பாக்க மாட்டாங்களா? கம்மிசனர் நேமிக்க மாட்டாங்களா? அப்பாம் சிக்கிக்கிட்டாச்சு.
வ: அது என் வேலையல்லவா? அப்படி பாக்கரதாயிருந்தால் மூட் டையை பிரிக்க 2 மணி நேரமாகும். அதுவும் மிஞ்சி அதைப் பிரித்தாலும் அந்த கணக்கை பார்த்து என்ன கணக்கு யாருடைய கணக்கு என்று கண்டுபிடிக்கவே முடியாது. இன்னும் எத்தனையோ வழி இருக்கிறது. கமிஷனர் ஏற்பட்டாலும் அவரையும் சரி பண்ணிக் கொள்ளலாம்.
அதைப் பற்றி நீ கவலைப்படாதே. கமிஷனர் ஏதாவது தகரார் பண்ணினால் அவர் கேசுகளில் நான் கமிஷனரா வந்தா அவரை இழுத்து விட்டு விடுவேன். எதிர் வக்கீலுக்கும் இப்படியெல்லாம் செய்யா விட்டால் கோர்ட்டுக்கு கேசே வராதென்று தெரியும். அவரும் இப்படி எத்தனையோ தடவை செய்திருப்பார். முனிசீப்பும் நல்லவர். அவரும் வக்கீலாயிருந்து வந்தவர் தானே, இதெல்லாம் வாய்தா வாங்க சகஜம் தான் என்று அவருக்கும் தெரியும்.
உனக்கு எப்படி ஆனாலும் 2 வருஷத்திற்கு கம்மியில்லாத வாய்தா. பாத்துக்கோ, அதற்குள் கடன் கொடுத்தவன் அசலில் 100, 200 தள்ளிக் கொண்டாவது கொடு என்று உன்காலை வந்து பிடிக்கிறான், பார்த்துக்கோ, ஒன்றுக்கும் பயப் படாதே.
க: அய்யய்யோ அதெல்லாம் வாண்டாஞ்சாமி கொடுத்தவனுக்கு நல்ல பிள்ளையாய் போகணும் நீங்க என்னமோ எழுதிக் கோங்கோ எனக்கெல்லாம் இரண்டே மாசம் வாய்தா போதும்.
வ: சரி எழுதப்பா பாக்கி ளி.ஷி.ழிஷீ. 21-க்கு ஸ்டேட்மெண்டு எழுதி னோமே அதை பார்த்து எழுதி கையெழுத்து வாங்கிக் கொள் கோர்ட்டுக்கு வரும்போது பாக்கி பணத்தையும் கொண்டு வரச் சொல்லு.
க: சாமி நாளைக்கு பாக்கி பணங் கொண்டாரனுங்கோ.
குடிஅரசு 18.09.1927
 -விடுதலை,26.10.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக