ஞாயிறு, 8 நவம்பர், 2015

இனி பலிக்காது! சர்ச்சும் கன்னியா மடமும் பணக்காரர்களும்

ஸ்பெயின் தேசத்தில் ஏற்பட்ட புரட்சியின் பயனாய் சோம்பேறி மடங்களுக்கும் ஏமாற்றுக் கூட்டத்திற்கும் அயோக்கியக் கூட்டத்திற்கும் சரியான ஆபத்துகள் வந்திருக்கின்றதை பத்திரிகை சேதிகளில் காணலாம்.
அதாவது ஸ்பெயின் தலைநகராகிய மேட்ரிக்நகரில் இருந்து கிருத்துவ கோயில்கள் என்னும் சோம்பேறி மடங்கள் இடிக்கப்பட்டும் கன்யாமாடங்கள் என்னும் ஏமாற்றுக் கூட்டத்தாரின் மடங்கள் நெருப்பு வைத்துக் கொளுத்தப் பட்டும் பணக்காரர்கள் என்னும் அயோக்கியக்கூட்டம் உயிரோடு ஒரு கட்டடத்திற்குள் அடைத்து நெருப்பு வைத்துக் கொளுத்த ஏற்பாடு செய்யப்பட்டும் வருவதாக அறிவிக்கப்படுகிறது.
கோயில்களில் கடவுள் இருப்பதாகவோ அல்லது அவைகள் கடவுள் பிரார்த்தனைக்காக ஏற்பட்டவை களாகவோ இருக்குமானால் - கன்னிகாஸ்திரீகள் கடவுள் சேவை செய்பவர்களாகவோ அல்லது கடவுளுக்கு ஆக ஒழுக்கமுள்ளவர்களாக நடப்பவர்களாகவோ இருப்பார் களானால் -
பணக்காரர்கள் தங்கள் முன் ஜன்மத்தில் செய்த நற்கருமங்களால் செல்வம் பெற்றவர்களாகவோ அல்லது கடவுளின் திருச்சித்தால் செல்வம் அடைந்தவர்களாகவோ இருப்பார்களேயானால் இவைகள் முறையே இடிபடவும் நெருப்பு வைத்து எரிக்கவும், உயிருடன் அடைந்து கொள்ளி வைத்துக்கொளுத்தவும் ஆன நிலைமை ஏன் ஏற்படுகிறது என்பது நமக்கு விளங்கவில்லை.
உண்மையிலேயே கடவுள்  ஒருவர் இருக்கிறார் என்று கூறுகின்றவர்கள் இச்செய்கையை கண்டபின் கோயில்கள் கன்யாமாடங்கள் பணக்காரர்கள் ஆகியவை உலகில் இருப்பதற்கு கடவுளுக்கு இஷ்டமில்லை.
ஆதலால் அவைகள் கொளுத்தப்படுகின்றன என்று எண்ண வேண்டும். அல்லது புரட்சிகாரர்கள் கடவுளைவிட சக்தியுடையவர்கள் அதனால் தான் இவைகளை கொளுத்த நினைத்தார்கள் என்று சொல்லவேண்டும். அப்படிக் கில்லாமல் தொட்டதற்கெல்லாம் இது வேத விரோதம் இதுமத விரோதம் என்கின்ற பூச்சாண்டிகள் இனிப் பலிக்காது.
(புரட்சி, 1933)
கேள்வி - பதில்
கேள்வி: திரு.காந்தியாரைத் திருவனந்தபுரம் கன்னியாகுமரி போன்ற கோவில்களில் உள்ளே விடாமல் இருந்தும் அதைப் பற்றிக் கவலையில்லாமல் இருக்கிறாரே ஏன்?
பதில்: அந்த விஷயத்தில் அதிகக் கவலையெடுக்க ஆரம்பித்தாரேயானால், மகாத்மா என்ற பட்டம் போய் மதத் துரோகி என்ற பட்டம் வந்து விடுமென்பது அவருக்குத் தெரியுமே! அவரென்ன பயித்தியக்காரரா?
(புதுவை முரசு -1931)
-விடுதலை,24.7.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக