ஞாயிறு, 22 நவம்பர், 2015

மெட்டீரியலிஸம் - ஆத்மா

ஆத்மா என்னும் விஷயத்தைப் பற்றி இங்கு எழுதப்பட்டிருப்பதை பார்க்கும் போது நண்பர்கள் பலர் இது ஒரு தத்துவ விசா ரணை;
இதைப்பற்றி எழுதவோ, பேசவோ வேண்டிய அவசியம் சமுதாய சீர்திருத்தக் காரருக்கு எதற்கு? சுயமரியாதைக் காரர்கள் அனாவசியமாய்க் கண்ட கண்ட விஷயங்களிலெல்லாம் தலையிட்டுச் சீர் திருத்தத்துறையைப் பாழாக்கிக் கொள்ளு வானேன்? என்று கூசாமல் பேசுவார்கள்.
ஆனால் இப்படிப்பட்ட நண்பர்கள் சமுதாயச் சீர்திருத்தம் என்பது என்ன? என்பதைச் சரிவர உணராதவர்கள் என்று நினைத்துவிட்டு, நம் நோக்கப்படியே, நாம் மேலே சொல்லக் கூடிய நிலையிலேயே இருக்கின்றோம்.
ஏனெனில் சமுதாயச் சீர்திருத்தம் என்றால், ஏதோ அங்கும் இங்கும் இடிந்து போன - துவண்டுபோன, ஆடிப்போன பாகங்களுக்குச் சுரண்டி, கூறுகுத்தி, மண்ணைக் குழைத்து, சந்து பொந்துகளை அடைத்து பூசி மெழுகுவது என்றுதான் அநேகர் கருதி இருக்கிறார்கள்.
ஆனால், நம்மைப் பொறுத்தவரை நாம் அம்மாதிரி துறையில் உழைக்கும் ஒரு சமுதாயச் சீர்திருத்தக்காரரல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றோம்.
நாம் யார் என்றால், மக்கள் சமுதாயம் (மக்கள் சமுதாயம் என்றால் உலக மக்கள் சமுதாயம்) என்ன காரணத்தினால் - ஏன் சீர்திருத்தப்பட வேண்டிய நிலைமைக்கு வந்தது என்பதை உணர்ந்து, உணர்ந்தபடி மறுபடியும் அந்நிலை ஏற்படாமலிருப்பதற்கு நம்மால் இயன்றதைச் செய்யும் முறையில் அடியோடு பேர்த்து அஸ்திவாரத்தையே புதுப்பிப்பது என்கின்றதான தொண்டை மேற்கொண்டிருக்கின்றபடியால் சமுதாயச் சீர்திருத்தம் என்பதைப் பற்றி, மற்ற மக்கள் அநேகர் நினைத்திருந்ததற்கு, நாம் மாறுபட்ட கொள்கையையும், திட்டத்தையும், செய்கையையும் உடையவராய்க் காணப்பட வேண்டிய நிலைமையில் இருக் கின்றோம்.
இதனாலேயேதான் நாம், உலக மக்கள் உண்டு என்பதை தப்பு என்றும், கெட்டது என்பதை நல்லதென்றும், நல்லது என்பதை கெட்டது என்றும், காப்பற்றப்பட வேண்டு மென்பதை ஒழிக்க வேண்டும் என்றும், மற்றும் பலவாறாக மாறுபட்ட அபிப்பிராயத்தைக் கூறுவோராக - செய்வோராகக் காணப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றோம்.
ஆனால் நம் போன்ற இப்படிப்பட்டவர்கள் உலகில் நல்ல பெயர் சம்பாதிப்பதும், மதிக்கப்படுவதும், பழிக்கப்படாமல் - குற்றம் சொல்லப்படாமல் - இருப்பதும் அருமை என்பது மாத்திரம் நமக்கு நன்றாய்த் தெரியும்.
- தந்தை பெரியார் (குடிஅரசு, தொகுதி -4, பக்கம்-27)
தகவல்: க.பழநிசாமி, தெ.புதுப்பட்டி(கி.அ.) கன்னிவாடி (து.அ.) திண்டுக்கல் கோட்டகை.
-விடுதலை,18.1.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக