ஞாயிறு, 15 நவம்பர், 2015

சமரசம் அடைய வேண்டுமெனில்...


தந்தை பெரியார்
சகோதரிகளே, சகோதரர்களே, சமரச சன்மார்க்கம் என்பது வாயால் சொல்லக் கூடியதே தவிர, காரியத்தில் நடக்க முடியாததாகும். ஏனெனில் எது எது சமரச சன்மார்க்கம்  என்கின்றோமோ, எது எது  உண்மையான இயற்கையான சமரச சன்மார்க்கமென்று கருதுகின் றோமோ அவற்றிற்கு நேர் விரோத மாகவே மனித வாழ்க்கை அமைக்கப்பட் டிருக்கிறது.
இது நமது  நாட்டில் மட்டும் அல்ல, உலக முழுவதிலுமே  அப்படி தான் அமைக்கப்பட்டுப் போயிற்று.  ஆனால் நமது நாட்டில்  மற்ற  நாடு களைவிட வெகு தூரம்  அதிகமான வித்தியாசம் வைத்து அமைக்கப்பட்டு விட்டது. முதலாவது கடவுள், மதம், விதி, ராஜா, ஜாதி, பணம், தொழில் முதலாகி யவை இயற்கைக்கு மாத்திரமான சமரச சன்மார்க்கமல்லாமல் நியாய பூர்வமான சமரசன் மார்க்கத்திற்கும்  விரோதமாய் அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த நிலையில்  ஒருவன் சமரச சன்மார்க் கத்தைப் பற்றிப் பேச வேண்டுமானால் மேற்கண்ட கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு  சமரச சன்மார்க்கம் ஏற்பட வேண்டும் என்கிற முறையில்  யோக் கியர்களாலோ, அறிவாளிகளாலோ பேசமுடியாது. ஏனெனில்  அவை ஒன் றுக்கொன்று முரண்பட்ட  தத்துவத்தில் அமைக்கப்பட்டிருப்பவைகளாகும்.  அதோடு  மாத்திரமல்லாமல் சமரசமும்,  சன்மார்க்கமும் கூடாது  என்னும் தத் துவத்தின் மீதே அமைக்கப் பட்டவை களாகும்.
ஆகையால் நான் சமரச சன்மார்க் கத்தைப்பற்றி பேசவேண்டுமானால் அவை சம்பந்தமான கட்டுப்பாடு களையெல்லாம் அடியோடு அழிப்பது தான் சமரச  சன்மார்க்கம் என்று  சொல்லவேண்டியதாயிருக்கின்றது.  இது  உங்களில் பலருக்கும் உங்கள் பாதிரி மார்கள், எஜமானர்கள், அக்கம்பக்க ஜாதியார்கள், சாமிகள், மதக்காரர்கள் ஆகியவர்களுக்கு வருத்தமாயும் விரோதமானவைகளாயுமிருக்கும் என்று கருதுகிறேன்.
நான் உண்மையான சமரச சன்மார்க்கம் அடைந்த தேசத்தார், அடைந்த சமுகத்தார், அடைந்த தனி மனிதர்கள்  என்று யார் யாரைக் கருதுகின்றேனோ அவர்கள்  எல்லாம்  மேற்கண்ட  இடையூறானவைகளைத் தகர்த்தெறிந்து தான் சமரச சன்மார்க்கம்  அடைந்தார்கள் - அடைகின்றார்கள் அடைய முயற்சிக் கின்றார்கள். இவை களில் சிறிது தாட்சண்யப்பட்டவர்கள் கூட தோல்வியேயடைந்து விட்டார்கள்.
உதாரணமாக கடவுளையும் மதத் தையும் பணக்காரனையும் வைத்து சமரச சன்மார்க்கம் செய்ய  முடியாதென்று கருதிதான்  ருஷியர்கள் பாதிரிமார்கள் தொல்லையையும் சர்ச்சுகளையும் பணக்காரத்தன்மைகளையும் அழித்துத் தான் சமரசம் பெற்றார்கள். தற்போதைய ருஷிய சரித்திரத்தில் சமரசத்திற்குப் பாதிரிமார்கள் எதிரிகளென்றே தீர்மா னிக்கப்பட்டு அவர்களை அழித்து விட் டார்கள்.
அழித்துவிட்டார்கள் என்றால் கொன்று விட்டார்கள் என்பது  கருத் தல்ல.  ஏதோ சிலரை அதாவது சமரசத் திற்கு எதிர்ப்பிரச்சாரம் செய்தவர்களில் சிலரைத் தவிர  மற்றவர்களைப் பட் டாளத்தில் சேரச்செய்தார்கள். சிலரை விவசாயத்தில்  போட்டார்கள். சிலரை வைத்தியத்தில்  போட்டார்கள். வேறு  காரியங்களுக்கு உதவாதவர்களை காவல்  காக்கப் போட்டார்கள்.
அது போலவே சர்ச்சுகளைத் தொழிற்சாலை, பள்ளிக்கூடம் முதலியவைகளாக மாற்றி னார்கள்.  இவைகளுக்கு உதவாமல், போக்குவரவுக்கும் மற்ற சவுகரியங்களுக் கும் இடையூறாயிருப்பவைகளை இடித் தார்கள். பணக்காரர்கள்  சொத்தைப் பிடுங்கி பொதுஜன சொத்தாக்கி பூமி  இல்லாதவர்களுக்கு  பூமி,  தொழிலில் லாதவர்களுக்கு தொழில், படிப்பில்லாத வர்களுக்கு படிப்பு  முதலாகியவைகள் கொடுப்பதற்கு உபயோகப்படுத் தினார்கள். கலியாண முறையை ஒழித்து பெண் அடிமையை  நீக்கினார்கள்.
கண்டபடி பன்றிகள் போல் பிள்ளை பெறுமுறையை நிறுத்தச்செய்து, அளவு படுத்தி ஆண்பெண் வாழ்க்கை இன்பத் திற்கு  சௌகரியங்கள் செய்தார்கள். இன்னும், பல காரியங்கள் செய்தார்கள். ஆனால் நமக்கு  இவை பொருந்துமா என்று சிலர்கேட்பார்கள்? யார்  கேட் பார்கள் என்றால் பணக்காரன், பாதிரி,  உயர்ந்த ஜாதிக்காரன், அரசன்  ஆகிய வர்கள்தான் கேட்பார்கள்.
இவர்கள் நமது நாட்டு ஜனத்தொகையில் 100க்கு 5 அல்லது  6 பேர்களே  இருப்பார்கள். மற்றவர்கள் 100க்கு 90-க்கு  மேல்பட்ட வர்களாவார்கள் ஆதலால் குறைந்த  எண்ணிக்கை உள்ளவர்கள். அதிலும்  தங்கள் சுயநலத்திற்கு  என்று சில கட் டுப்பாடுகள் இருக்க வேண்டுமென்றால் யார் சம்மதிப்பார்கள்?
முதலாவது உங்களைக் கேட்கிறேன். நீங்கள்  இந்த மூன்று  ஆதிக்கத்தை ஒப்புக் கொள்கி ன்றீர்களா? இருக்கவேண்டும் என்று சொல்கின்றீர்களா? என்ன சொல்லுகின் றீர்கள்? ஆகவே,  இம்மூன்றும்  ஒழிய  அவர்கள் கஷ்டப்படுவார்கள். ஆனால் நமக்கு  இன்றே இம்மூன்றும்  ஒழிய வேண் டும்  என்கிற  ஆத்திரமுமில்லை.  ஏனெ னில், இன்னும்  அநேக நாடுகள் இருக் கின்றன. அவை இப்போதுதான் முயற்சித் திருக்கின்றது. ஆகையால் வரிசைக் கிரமத்தில் அந்த  முறை நமக்கும் வரும் என்கின்ற தைரியம் உண்டு.
ஆனால், இங்கு மற்ற நாட்டில் இல்லாததான ஜாதி உயர்வுதாழ்வு முறை என்பது சாதாரண சமரச சன்மார்க்கத்திற்கு விரோதமாய் இருக்கின்றது. அதை அழித்தே ஆக வேண்டும். இதற்கு நாம் தர்மசாஸ்திரம், கடவுள் செயல், கர்ம பலன் ஆகியவை களைக் கவனித்துக்கொண்டிருந்தால் பல னில்லை.
சகோதரர்களே! நீங்கள் தர்மத் திற்கும், சாஸ்திரத்திற்கும், மதத்திற்கும், கடவுளுக்கும், எத்தனை காலமாய் அடங்கி வந்திருக்கின்றீர்கள், என்பதை யோசித்துப் பாருங்கள்  என்ன பலன்  அடைந்து இருக் கின்றீர்கள்? இந்த நிலைமையில் உங்கள் ஆயுள் காலத்திற்குள் உங்களுக்கு சமரச விடுதலை உண்டு என்று  கருதுகின்றீர்களா?
இன்றைய நிலைமையில்தான் உங்கள் வாழ்க்கையின் பலன், முடிவு, லட்சியம் என்று கருதுவீர்களானால், நீங்கள் எதற்காக நாளையதினம் வரையில் கூட உயிருடன் இருக்க வேண்டும் என்று கருதுகின்றீர்கள்? என்பது எனக்குப் புலப்படவில்லை.
மனிதன் வாழ்ந்திருக்கக் கருதுவதற்கு ஏதாவது அர்த்தமோ, லட்சியமோ  இருக்க வேண்டும். சும்மா அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பது போல் ஆகாரம் உட்கொள்ளவும் உட்கொண் டதை மலமாக்கவும் என்பதற்காக அறிவும், சுவாதீன வுணர்ச்சியும், ஞானமுமற்ற  ஜந்துக்கள் இருக்கின்றதே, இதுபோதாதா?
இனி மனிதன் என்றும்,  ஆறறிவு பகுத்தறிவு உள்ளவன், என்றும் சொல்லிக்கொண்டு பண்டிதன் என்றும், பணக்காரன் என்றும் கடவுளைக் கண்டுபிடித்து அடையும் மார்க்கங்களான பல மதங்களையும்   பின்பற்றி கடவுளென்று பணத்தையும், நேரத்தையும், ஊக்கத்தையும், செலவு  செய்கின்ற  மனிதனும், நல்ல ஆகார வஸ்துக்களை மலமாக்குவதற்காக வாழ வேண்டுமா என்று கேட்கிறேன்.
இதைப் போன்ற அறிவீனமும், அவமானமும் ஆன காரியம் மனித சமுகத்திற்கு வேறொன் றில்லை என்றே சொல்லுவேன். இந்தவித மனித சமுகம் அழிந்துபோவது ஜீவகாருண் ணியத்தை  உத்தேசித்தாவது மிகவும் அவசியமானதென்று தோன்றுகின்றது. ஆகவே, உங்கள் லட்சியங்களை முடிவு செய்து கொள்ளுங்கள், அதை நீங்களே அடைய முயற்சி செய்யுங்கள்.
அதை மற்றொரு ஜென்மத்திற்கு என்று அயோக் கியர் களின் வார்த்தைகளை நம்பி எதிர்ப் பார்த்துக் கொண்டு வீணாய் ஏமாந்து போகாதீர்கள்,  இந்த ஜென்மத்தில் உங் களை ஏமாற்றுவதற்காகவே அடுத்த ஜென்மம் என்னும் புரட்டை கற்பித்திருக் கின்றார்கள். முன்ஜென்ம சங்கதி ஏதாவது ஒன்று உங்கள் சரீரத்திலிருந்து உதிர்ந்த ஒரு மயிர்த்துண்டாவது உங்களுக்கு இந்த ஜென்மத்தில் ஞாபகமிருந்தால் அல்லவா.
இந்த ஜென்ம காரியங்களின்  செய்கை களோ பலனோ உங்களுக்கு அடுத்த ஜென்மத்தில் அறியவோ, அனுபவிக்கவோ முடியப்போகின்றது. அன்றியும் கடவுள் உங்களை இப்படிச் செய்துவிட்டார் என்று முட்டாள் தனமாய் கருதி  உங்கள் கஷ் டத்தை நிலைநிறுத்தி உங்கள் சந்ததி களுக்கு விட்டு விட்டு சாகாதீர்கள். உணர்ச் சியும் அறிவும் அற்ற சோம்பேறிக்குத்தான் கடவுள் செயல் பொருத்தமாக இருக்கும்.
மற்றவனுக்கு அது சிறிதும்  பொருந்தாது. நீங்கள் ஏன் சோம்பேறியாகின்றீர்கள்?  கடவுளுக்கு இடம்  கொடுத்து கோவில் கட்டி  உருப்படிகளை அதிகமாக்கி நமது  குறைகளையும்  கஷ்டங்களையும் முறை யிட்டு முறையிட்டு அழுதுவந்தது போதும் என்றே  சொல்கிறேன். இனி அந்தப் பக்கம் திரும்பிப் பாராதீர்கள். உங்கள் அறிவையும் மனிதத் தன்மையையும் திரும்பிப் பாருங்கள். அது சொல்லுகின்றபடி நட வுங்கள்.
உங்கள் பொறுப்பை அதன் மீது போடுங்கள். உங்கள் தவறுதல்களுக்கும் நீங்கள் பயன் அடையாமல் போனதற்கும் காரணம் சொல்லும்படி உங்கள் அறிவைக் கேளுங்கள்.
அதை மதியுங்கள். அதனிடம் நம்பிக்கை வையுங்கள். அது உங்களைச் சரியான வழியில் செலுத்தும். கடவுளைப் போல் அவ்வளவு மோசமும், புரட்டும் ஆனதல்ல உங்கள் அறிவு. அதற்கு உணவும் வளர்ச்சியும் மற்ற நாட்டு வர்த்த மானங்களும்   உங்கள் நடுநிலைமையுமே யாகும். ஆகையால் மற்ற நாட்டு வர்த்த மானங்களை உணர்ந்து நீங்கள் நடு நிலையில் இருந்து உங்கள்  அறிவுக்கு பூஜை போட்டீர்களே யானால் வந்து விட்டது.
அன்றே சமரசம், சன்மார்க்கம், விடுதலை இதில் எனக்குச் சிறிதும் சந் தேகமில்லை.  தவிர, பெண்கள் விஷயமாய் சில வார்த்தைகள் சொல்லவேண்டியி ருக்கிறது. அதைச் சற்று கவனமாய் கேட்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரி மேல்ஜாதிக்காரனை கீழ் ஜாதிக்காரன் நடத்துவதைவிட பணக்காரன் ஏழையை நடத்துவதை விட, எஜமான் அடிமையை நடத்துவதைவிட மோச மானதாகும்.  அவர்கள் எல்லாம் இருவருக் கும் சம்பந்தமேற்படும் சமயங்களில் மாத்திரம்தான் தாழ்மையாய் நடத்துகின் றார்கள். ஆண்கள் பெண்களை பிறவி முதல் சாவுவரை அடிமையாயும் கொடுமை யாயும்  நடத்துகின்றார்கள்.
அதுவும்  நமது நாட்டில் மிகவும்  மோசமாய் நடத்து கிறார்கள். அந்த  ஒரு காரணமே இந்த நாடு இன்று மிருகப் பிராயத்தில் இருப்பதற்கு காரணமாகும் நாம்  எல்லோரும் அடிமை வயிற்றில் பிறந்து  அடிமைகளால் வளர்க் கப்பட்டோம் என்பதை  மறுக்கின்றீர்களா என்று கேட்கின்றேன். நான் எத்தனை பெண்டாட்டி வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளுவேன்.
எத்தனை கிழவனானாலும் எனக்குப் பெண்டாட்டி வேண்டும். நான் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் ஆசை நாயகிகளாக வைத்துக் கொண்டு அனுப விப்பேன். ஆனால் பெண்ணாய் பிறந்த நீ ஒரு புருஷன் தான் கட்டிக்கொள்ள வேண்டும், அவன் செத்துப்போனாலும்  புருஷன் என்பதாக ஒரு ஜீவன் உலகில் உண்டு.
ஆண் பெண்சேர்ந்து அனுபவிக் கும்  இன்பம்  என்பதாக ஒரு குணம்  உண்டு  என்பதை மறந்து விட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது, இதற்கு கடவுள், மதம், முன்ஜன்மப்பலன் சம்பந்தப் பட்டிருக்கின்றது. இது மிகவும் அநீதியும், அயோக்கியத்தனமுமான விஷயமாகும்.
இந்தக் கொடுமைகளை ஆண்களால் மாற்றிக்கொள்ளலாம் என்றும், பெண்கள் அப்படி மாற்றிக்கொள்ள நினைப்பது  சுத்த முட்டாள்தனமாகும் எனக் கருதப்பட்டிருக் கின்றது.  ஆண்களைப்போலவே பெண்கள் செய்யத்தயாராக வேண்டும். ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்தால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக்கொள்ள முற்பட வேண்டும்.  உடனே நிலைமை சரிபட்டுப்போகும்.
உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு இருவருக்கும் கஷ்டமேயிருக்காது. சிலர் இப்படி சொல்வது தப்பு என்றும், ஒழுக்கம் கெட்டுப்போகும் என்றும், ஆண்களுக்கு எவ்வளவு வேண்டுமானா லும் புத்தி சொல்லுங்கள் என்றும் சொல்ல வருவார்கள். ஆண்களுக்குப் புத்தி அநேக காலமாக சொல்லியாய் விட்டது.
கலியாணம் செய்து கொள் ளுவதே அடிமைப்பிரவேசம் என்றாய் விட்டது.  ஒரு மனிதனாவது இவர்கள் சொல்கிறபடி யோக்கியனாக வில்லை.  ஆகவே அது இனி பயனற்றதாய் விட்டதால்தான் வேறு மார்க்கத்தை  கடைப்பிடிக்க வேண்டியதாய் விட்டது.  இது வரையில் ஆண்கள்  பெண்களை அடிக்காதீர்கள், அடிக்காதீர்கள் என்று சொல்லிப் பெண்களுக்கு நியாயம் வழங்க முற்பட்டோம்.
பலனேற்பட வில்லை  என்று கண்டு விட்டோம். இப்போது நாம் பெண்களிடம்  சென்று  இனி ஆண்கள் உங்களை அடித்தால் திருப்பி அடியுங்கள் என்று சொல்கின் றோம் இதனால் என்ன தப்பு என்பது விளங்கவில்லை. இதுபோல்தானே ஆண்கள் உங்களை வஞ்சித்தால் நீங்கள் அவர்களை வஞ்சியுங்கள் என்று சொல்கின்றோம். இஷ்டப்பட்டவர்கள் இந்த  முறையில் சேர்ந்து வாழட்டும்.
இஷ்டமில்லாதவர்கள் கலியாணத்தை ரத்து  செய்து  கொண்டு  தனித்தனியாக வாழட்டும் இதனால் உலகத்திற்கு என்ன கஷ்டம் வந்துவிடும்? ஆகையால் இந்த விஷயங்களில் பெண்கள் யோசித்து தைரியமாய் முன்னுக்கு வரவேண்டும், பயப்படக்கூடாது.
பெண்கள் தங்கள் வாழ்வுக்கு ஒரு வகைசெய்து கொள்ளவேண்டியது பெண்கள் விடுதலைக்கு முக்கியமான அஸ்திவாரமாகும் . முக்கியமாய், கண்ட படி  கணக்கு வழக்கில்லாமல் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளக் கூடாது.
இதில் அதிக ஞாபகமிருக்க வேண்டும்  பிள்ளை பெறுவது  கடவுள் செயல் என்றும்,  அது பாக்கியத்தில் ஒன்றென்றும் கருதிக் கொண்டு, முட்டாள்தனமாய் மக்கள் கஷ்டப்படுகிறார்கள். ஆசீர்வாதம் செய்யும்போது  16 பிள்ளைகள்  பிறக்க வேண்டுமென்று ஆசீர்வாதம் செய்கின் றார்கள். இது  அவர்கள் சொல்கின்ற படியே நடக்கும்  என்று பயந்து கொண்டு  நான் பேசவரவில்லை.
ஆனால் இப்படி ஆசிர்வாதம்  செய்வது எவ்வளவு  முட் டாள் தனமும் பொறுப்பற்ற  தன்மையும் என்று  சற்று யோசித்துப் பாருங்கள். ஆகவே, இந்தக் காரியத்தில் எத்தனைக் கெத்தனை  ஜாக்கிரதையாயிருந்து கண்டபடி பிள்ளை பெறாமல் தப்பித்துக் கொள்கின்றீர்களோ அத்தனைக்கத் தனை கவலையும் தொல்லையும்  ஒழிந்து  சுதந்திரமும், விடுதலையும் அடைந்தவர்களாவீர்கள்.
எவனோ தெருவில் போகின்றவன் இப்படிச் சொல்வதால் ஒரு சமயம் எல்லோருமே  பிள்ளை பெறாமல் இருந்து விட்டால் உலகம் விருத்தியாவது எப்படி என்பான். இப்படிப்பட்டவன் சுத்த மூடன் என்று தான்  அர்த்தம். உலகம் விருத்தியாவதற் காக மனிதன்  பல குட்டிகள் போட்டு தொல்லைப்பட வேண்டுமா? நாய், பன்றி, கழுதை, குதிரை, கோழி, குருவி முதலிய மிருகம்,  பட்சி, ஊர்வன,  முதலிய ஜீவன்கள் போடும் குட்டிகளும், பொரிக்கும்  குஞ்சுகளும்,  பீச்சும் குஞ்சு களும் போதாதா என்று கேட்கிறேன்.
வீண் அர்த்தமற்ற வார்த்தைகளுக்கு காது கொடுக்காதீர்கள். ஒவ்வொன்றை யும் நன்றாய் யோசித்துப் பார்த்து உங்கள்  அபிப்பிராயப்படி எதையும்  முடிவு செய்யுங்கள். முடிவுப்படி நடவுங்கள்.
(ஈரோடு தாலுகா பெருந்துறைக்கடுத்த கிரே நகரில் ஆதிதிராவிடர் கழக ஆண்டு விழாவில் பேசியது)
‘குடிஅரசு’ - சொற்பொழிவு - 8.02.1931
-விடுதலை,20.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக