வெள்ளி, 13 நவம்பர், 2015

பார்ப்பனனுக்கும் சைவனுக்கும் சம்பாஷணை (சித்திரபுத்திரன் எழுதியது)



சைவன்: ஒய்! என்னாங்காணும் நீர் இப்போது மாமிசம் சாப்பிடுகின்றீரே! என்ன இப்படி கெட்டுப்போய் விட்டீர்.
பார்ப்பனன்:-வாரும் வாரும் பிள்ளைவாள் எனக்கு வர வர ஜீவ இம்சை என்றால் சற்றும் பிடிப்பதே இல்லை. இன்றைக்குச் சாகின்றோமோ நாளைக்குச்சாகின்றோமோ, சாவதற்குள் ஏன் அநியாயமாய் பல ஜீவன்களை இம்சை செய்யவேண்டும் என்பதாகக் கருதியே இனிமேல் காய்கறிகள் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்து மாமிசம் சாப்பிடத் துணிந்து விட்டேன்
சைவன்: என்னங் காணும் பார்ப்பான் ஜீவ ஹிம்சை கூடா தென்கின்றீர். அதற்காக மாமிசம் சாப்பிடுகின்றேன் என்கின்றீர். இது என்ன போக்கிரித்தனமா அல்லவா.
பார்ப்பனன்:-கோபித்துக் கொள்ளாதீர் ஐயா! நீர் சைவரல்லவா? உமக்கு வெறும் கோபம்தான் வருமே யொழிய விஷயம் புலப்படுவது தான் கஷ்டம்
சைவன்:-என்ன பார்ப்பனக் குறும்பை நம்மிடமே காட்டு கிறாய். பார்ப்பான் மாமிசம் சாப்பிட்டுத்தான் இந்த நாடு பாழாச்சுது.
பார்ப்பான்: இந்த நாடு தான் பார்ப்பனன் மாமிசம் சாப்பிட்டு பாழாச்சுது சரி, வெள்ளைக்கார நாடு என்ன சாப்பிட்டு நல்லா ஆச்சுது? இந்தியாவில் உள்ள 33 கோடி மக்களில் மாமிசம் சாப்பிடுகின்றவர்கள் எத்தனைபேர்? சாப்பிடாதவர்கள் எத்தனை பேர் என்பது நமக்குத் தெரியுமா?
7 கோடி மகமதியர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். ஒரு கோடி கிருஸ்தவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். 6 கோடி தீண்டாத்தகாதோர் என்கின்றவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். சத்திரியர் என்கின்றவர்களில் சிங்கு சத்திரியர்கள் மராட்டிசத்திரியர், நாடாடர் சத்திரியர், வன்னிய சத்திரியர், நாயுடுசத்திரியர்,
செங்குந்த சத்திரியர் ஆகியவாள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். வாணிய வைசியர் மாமிசம் சாப்பிடுகிறார்கள். நாட்டுக்கோட்டை தன வைசிய வகுப்பார்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். வேளார்களில் கொங்கு வேளாளர்கள், கார்காத்த வேளாளர்கள், உடையார் வேளாளர்கள், மறவ வேளாளர்கள், படைத்தலை வேளார்கள்,
வடுக வேளாளர்கள், நாட்டார் வேளாளர் ஆகியவர்கள் மாமிசம் சாப்பிடுகிறார்கள். திருநெல்வேலி தஞ்சாவூரிலுள்ள சில வேளாளர்கள் தவிர மற்ற எல்லா வேளாளர்களும் மாமிசம் சாப்பிடுகிறார்கள். கடைசியாக பிராமணர்கள் என்பவர்களிலோ சௌராஷ்டிரப் பிராமணர்கள்,
விஸ்வப்பிராமணர்கள், தேவாங்கப் பிராமணர்கள் சாலிய பிராமணர்கள் கொங்கினி பிராமணர்கள், கவுடப்பிராமணர், காஷ்மீரப்பிராமணர்கள் மச்சப் பிராமணர்கள். அம்பஷட்டப் பிராமணர்கள் முதலிய பல பிராமணர்களும் மாமிசம் சாப்பிடு கின்றார்கள். இந்தியாவில் இவர்கள் எண்ணிக்கைளையெல்லாம் சேர்த்தால்,
குறைத்தது 15 கோடிக்குக் குறையாது. அடியோடு மாமிசம் சாப்பிடாதவர்கள் சுமார் ஒரு கோடி இருக்கலாமா என்பதே சந்தேகம் 35 கோடியில் ஒரு கோடி அதாவது 100க்கு மூன்று போகலாம். தவிர இந்தியர் தவிர உலக எல்லோரும் மாமிசம் சாப்பிடுகிறார்கள்.
எனவே மொத்த  ஜனத்தொகையில் 100க்கு 99.5 பேர்களை ஜீவகாருண்யமற்றவர்கள் என்று நீர் சுலபத்தில் சொல்லிவிட முடியுமா சொல்லும் பார்ப்போம்.
சைவன்:- என்னங்காணும் பார்ப்பனன் நீர் மாமிசம் சாப்பிடுகின்றீரே இது யோக்கியமா? என்றால் ஊர்க்கதையெல்லாம் பேசுகிறீர்
பார்ப்பனன்:- சொல்லுவதை கவனமாய் கேளும் சைவரே! வெறுங்கோபம் ஒரு காசுக்கும் உதவாது அதெல்லாம். அந்தக்காலம். இது அறிவு ஆராய்ச்சி சையன்சு காலம் தெரியுமா? நான் மாமிசம் சாப்பிடக்கூடாது என்று நினைத்து வெகுநாளாய் சாப்பிடாதிருந்தது உண்டு.
அது எதற்காக என்றால் ஜீவகாருண்யத்தை உத்தேசித்து தானே ஒழிய வேறில்லை பிறகு இத்தனைபேர் மாமிசம் சாப்பிடுவதை கணக்குப் பார்த்து உலகத்தில் 100-க்கு 99 பேருக்கு ஜீவகாருண்ணியமில்லாமல் இருக்குமா? இப்படியா ஒரு கடவுள் மக்களை பிறப்பித்திருப்பார் என்று யோசித்து யோசித்து மயங்கிக் கிடந்தேன்.
கடைசியாக திரு சர்.ஜகதீச சந்திரபோஸ் மரம் கொடி செடி புல் பூண்டு. ஆகியவைகளுக்கு உயிர் இருக்கின்றது. அவை தொட்டாலும், நாடினாலும், முறித்தாலும் பறித்தாலும் கஷ்டப்படுகின்றன என்பதைக்கண்டு பிடித்தபிறகு தான் சரி எது ஜீவகாருண்யம்? என்பதை ஆராயப் புகுந்தேன்.
காய்கறிகள் சாப்பிடுவதைவிட மாமிசம் சாப்பிடுவதுதான் அதிகமான ஜீவகாருண்யம் என்பதாக உணர்ந்தேன். எப்படி என்றால் உயிர் இருப்பதால் அது ஜீவனாகின்றது. ஜீவனை வதைத்துச் சாப்பிடுவது மாமிசமாகின்றது.
ஆகவே, ஒரு செடியின் தழைகளை கிள்ளிப் பிடுங்கும்போதும், காய்களை அறுக்கும் போதும், கிழங்குகளைப் பறித்து வாடவைக்கும் போதும்.அவை படும்பாடு சித்திரவதைக்கு ஒப்பாகிறது என்று போஸ் சொல்லுகிறார்.
எனவே ஒரு ஜீவனை தினந்தினம் பல தடவை வதைசெய்து அதை துன்புறுத்துகின்றோம் என்பதை உணர நேரிட்டது. இப்போதும். அதை நினைத்தால் சகிக்க முடியாத துக்கம் வருகிறது ஆனால் மாமிசம் அப்படியல்ல ஒரு ஜீவனை சாப்பிடு வதனால் ஒரு தடவைக்கு மேல் யாரும் தொந்திரவு செய்ய மாட்டார்கள்.
அதுவும் க்ஷணத்தில் முடிந்து போகும். ஆதலால் தான் கிழங்கு, கீரை, காய், கறியை விட மாமிசம் சாப்பிடுவது ஜீவகாருண்யமாகும் என்று சொன்னேன். ஆதலால் ஓய்! சைவரே நான் உம்மைவிட குறைந்த ஜீவகாருண்ணியமுடையவன் என்று எண்ணிவிடாதீர்.
தவிர திரு.போஸ் காய்கறிகளுக்கு உயிர் இருப்பதை இன்று கண்டு பிடித்துத்தான் மாமிசம் சாப்பிடுகின்றார்கள் என்பதாகத் தெரிகின்றது. அன்றியும், வேதமும் மனுதர்ம சாத்திரமும் கண்ணப்பநாயனாரை ஒப்புக்கொண்ட சைவப்புராணங்களும் இதை அறிந்து தான் மாமிசத்தை அனுமதித்திருப்பதோடு மாமிசத்தை மறுக்கும் பிராமணன் இருபத்தொரு தலை முறைக்கு நரகத்தை அடைவன் என்று மனுதர்மசாத்திரமும் வேதமும் கூறுகின்றன தெரிந்ததா? சைவரே
சைவன்:-ஓய் ஓய் பார்ப்பனரே சரிதான் நடையைக் கட்டுங் காணும் உம் ஆராய்ச்சியையும், சயன்சையும் சாஸ்திரத்தையும் வேதத்தையும் புராணத்தையும் கொட்டை அடுப்பில் என்றைக்கு ஆராய்ச்சியும், சையன் சும் உலகத்தில் தோன்றிற்றோ அன்றே எல்லாம் கெட்டுது/ கடைசியாக முழுமுதற் கடவுளான சிவன் தலையில் கை வைக்க வந்து விட்டது.
இந்தப் பாழும் அறிவும், ஆராய்ச்சியும் சயன்சும் என்றைக்கு ஒழியுமோ அன்றுதான் சைவம் தழைக்கும் ஆதலால் இவை ஒழிய தவம் கிடப்போம். உம்மைப் பார்த்ததற்கும் உம்பேச்சை கேட்டதற்கும் கண்களையும் காதுகளையும் கழுவவோண்டும்
பார்ப்பான்:-அய்யா சைவரே! நன்றாய் தவம் கிடங்கள். அதுவும் திரு. ஜகதீஸ் போசும் இயற்கை ஆராய்ச்சியும், சுயமரியாதை இயக்கமும் ஒழியட்டும் என்று தவம் கிடங்கள். இதில் எது மீதியானுலும் உங்கள் சைவரும் உங்கள் ஜீவகாருண்யமும் சிறிது கூட நிலைக்காது. தவிர என்னைப் பார்த்ததற்கும், என் பேச்சுகளை காதில் கேட்டதற்கும் மகா பாதகம் தீர்த்த குளத்தில் போய் குளியுங்கள் கழுவினால் மாத்திரம் போதாது.
(குடிஅரசு 16.6.1929)
-விடுதலை,25.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக